Monday, December 29, 2008

முற்றுகையிடுகிற இராணுவத்தை தோற்கடிக்கிற செய்திகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் -தீபச்செல்வன்

குமுதம் ஸ்டோரிக்கா தளவாய் சுந்தரம் என்னுடன் உரையாடினார். கிளிநொச்சியில் என்ன நடக்கிறது என்ற அந்த ஸ்டோரியில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப்பொறுப்பாளார் பா.நடேசன் ,கவிஞர் ஞானக்குமரன், ஆசிரியர் குமாரலிங்கம் போன்றவர்கள் பங்கு கொண்டார்கள். அதில் என்னுடன் பேசியவற்றை எனது வலலைத்தளத்தில் பிரசுரம் செய்கிறேன்.


1.உண்மையில் கிளீநொச்சியில் நிலவரம் இப்பொழுது எப்படி உள்ளது?

ராணுவம் முன்னேறி வருவதாகவும் புலிகள் பலவீனமடைந்து விட்டதாகவும் சொல்லப்படும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை?


கிளிநொச்சி நகரத்தை இராணுவம் முற்றுகையிட்டிருக்கிறது. கிளிநொச்சியை வீழ்த்துவதற்காய் இராணுவம் கடுமையான போரில் ஈடுபட்டுவருகிறது. கிளிநொச்சி நகரத்தை விட்டு மக்கள் எல்லோருமே வெளியேறிவிட்டார்கள். இராணுவ நகர்வுகளுக்கு எதிராக போராளிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்துகிறார்கள். இலங்கை அரசு பெரியளவில் இந்தப்போரை தயார்படுத்தி மேற்கொள்கிறது. உலகநாடுகளின் ஆயுத அரசியல் உதவியுடன் பெரும் போர் இங்கு நிகழ்கிறது. இராணுவம் முன்னேறி வருதாக கூறுகிறது. சண்டைகளின் போது இராணுவம் பலத்த இழப்புக்களை சந்திக்க நேரிடுகிறது. போராளிகள் பின்நகர்கிற பகுதிகளில் நுழைந்து கைப்பற்றிவிட்டு முன்னேறுவதாக இராணுவம் கூறுகிறது.

புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்றுதான் எல்லோருமே நினைக்கிறார்கள். புலிகளின் பலம் குறித்து அல்லது பலவீனம் குறித்து யாராலும் மதிப்பிட முடியாது. போரில் போராளிகளின் ஆற்றல் தந்திரம் குறித்து போர்க்கள சூழல்தான் தீர்மானிக்கிறது. கிளிநொச்சியை போர் நெருக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடிதான் புலிகளின் பலத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கிறது. பலநாடுகளின் உதவியுடன் நடக்கிற இந்தப்போரை புலிகள் முகம் கொடுத்து வருவது அவர்களின் பெரும் பலம் என்றே நினைக்கிறேன்.

கிளிநொச்சி கடும் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. அடுத்தாக முல்லைத்தீவு நகரத்தை குறி வைத்து இராணுவம் தாக்குதல்களை தொடங்கியிருக்கிறது. இங்கும் மக்கள் தொடர்ந்து துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

2.புலிகள் தரப்பு மீண்டும் பலப்பட்டிருப்பதான தோற்றம் உருவாகியுள்ளது. இது உண்மையா?


நான் ஏற்கனவே கூறியதைப்போல புலிகளின்; பலம் குறைகிறது அதிகரிக்கிறது என்பதற்கு அல்லது அதன் மதிப்பீடுகளிற்கு அப்பால் பட்டது. அவர்களை கடும் சமராட இராணுவம் தூண்டிக் கொண்டேயிருக்கிறது. அவர்களும் மக்களும் நிலங்களை இழப்பது அவர்களின் பலத்தை அதிகரிக்கிறது. புலிகள் முன்னெடுக்கிற எதிர்த்தாக்குதல்களை இராணுவம் முகம் கொடுக்க நெருக்கடிப்படுகிறது. அவர்கள் நிலங்களை இழந்து விட்டார்கள் என்பதனால் போர்க்;கள ஆற்றல்களை இழந்து விட்டார்கள் என்று கருதமுடியாது. அவர்கள் மக்களிற்கிடையிலிருந்தே போராட்டத்தை கட்டியெழுப்புகிறார்கள். அதனால் விடுதலை வேண்டுகிற மக்களின் பலமாக அவர்களின் பலம் இருக்கிறது.

3.ராணுவம் மக்கள் பகுதிகளில் குண்டு எறிகிறதா?


அண்மையில் கிளிநொச்சியில் ஒரு நாளில் ஒன்பது தடவைகள் விமானம் தாக்கியது. இராணுவம் மக்கள் மீது குண்டுகளை கடுமையாக பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. பாடசாலை மாணவர்கள் அப்பாவி மக்கள் குழந்தைகள் தினம் கொல்லப்படுகிறார்கள். புலிகள் மீதுதான் இலங்கை இராணுவம் தாக்குவதாக எப்பொழுதுமே கூறுகிறது. அவர்கள் ஒருபோதும் தமது கொலைகளை ஏற்றக் கொண்டதில்லை. இரக்கமற்ற இந்தத் தாக்குதல்களை யாராலும் தடுக்க முடியாதிருக்கிறது. வாழ்வுக்கு மக்கள் தவிக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் மக்களை வாழவிடாமல் செய்யவே இப்படி வானிலிருந்தும் முன்னரங்குகளிலில் இருந்தும் இராணுவம் குண்டுகளை எறிந்தும் பொழிந்தும் கொண்டிருக்கிறது.

4.இப்பொழுதுள்ள நிலவரம் குறித்து மக்கள் என்ன கருதுகிறார்கள்?


அரசு போரை திணிக்கும் வரை மக்கள் போரை எதிர்க்க முற்படுகிறார்கள். மக்களிடம் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் துயரங்களிடமிருந்து வாழவும் நம்பிக்கை கொள்ளவும் துணிகிறார்கள். உலகம் அங்கிகரிக்கும் என்ற ஏக்கம் காணப்படுகிறது. மிகவும் நெருக்கடியான காலத்தில் வாழுகிறதாய் கருதுகிறார்கள். இந்த நெருக்கடி சுகந்திரத்தை தரும் என்ற காத்திருப்புடன் இருக்கிறார்கள். ஆனால் இராணுவ தீர்வுகளை அதற்கான முனைப்புக்களை ஒருபோதும் மக்கள் விரும்புவதி;லை. அரசு செய்கிற போரை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்ற கருத்து அவர்களிடம் தெளிவாயிருக்கிறது. முற்றுகையிடுகிற இராணுவத்தை தோற்கடிக்கிற செய்திகளுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

5.இந்தியா அனுப்பும் நிவாரண உதவிகள் மக்களுக்கு கிடைக்கிறதா?


இந்தியாவின் நிவாரண உதவிகள் மக்களுக்கு இங்கு கிடைக்கிறது. அவை உணவு பங்கிடுகிற சங்கங்கள் ஊடாக பகிர்ந்தளிக்கப்படுகின்றன. உணவுத்தடையால் துயருகிற சூழ்நிலையில் இது மக்களின் பசியை ஓரளவு தீர்க்கிறது. இதற்கு இந்திய மக்களுக்கு ஈழமக்கள் நன்றி கூற வேண்டியிருக்கிறோம்.

6. இந்தியாவிடம் இருந்து என்ன மாதிரியான உதவிகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்?


நீங்கள் முன்பு கேட்ட கேள்வியின் தொடர்ச்சியாகவே இதற்கு பதிலளிக்க நினைக்கிறேன். உணவுடன் இந்தப்பசி அடங்க முடியாது. முதல்வர் கருணாநிதியிடமும் இதைத்தான் மக்கள் எதிர்பார்கிறார்கள். அரசியல் ரீதியான தீர்வுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் போரை முடிவுபடுத்தி எமது மக்களின் வாழ்வுரிமைக்கும் அதற்கான நாட்டிற்கு பங்களிக்க வேண்டும் இப்படித்தான் எதிர்பார்ப்பு இருக்கிறது. முதலில் எங்களை தாக்குவதற்கு ஆயுதங்களை வழங்க கூடாது என்ற கோரிக்கை இருக்கிறது. இந்தியாவும் தமிழகமும் முகம் காட்டுகிற போதெல்லாம் இப்படித்தான் மக்கள் எதிர்பார்கிறார்கள். உன்மையில் மக்கள் எதிர்பார்ப்;பதை இந்தியா நிறைவேற்ற வேண்டும். இந்த இடத்தில் இந்தியா பொருளாதார அரசியல் நன்மைகளை கருதி அதற்காக எமது மக்களை பலியிடுகிறது.

7. கிளிநொச்சி மற்றும் புலிகளின் பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது?


இயல்பான வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. போரின் நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குள்ளேயே வாழ்கிறார்கள். தொழில் கல்வி நாளாந்த இயக்;கம் குழம்பியபடி போகிறது. எப்பொழுதும் மரணம் வெருட்டுகிற வாழ்வாகவே இருக்கிறது. பாடசாலைகள் அலுவலகங்கள் எதுவும் இயங்க முடியாதிருக்கிறது. போரிடமிருந்து தப்புவதற்கும் அதை எதிர்கொள்ளுவதற்குமாக மக்கள் தயாராக வேண்டியுள்ளது. அடிக்கடி இடப்பெயர்வுகள் விமானத்தாக்குதல்கள் நடைபெறுவதால் துயரங்களில்தான் வாழுகிற சூழல் காணப்படுகிறது.

8. மக்கள் கிளிநொச்சியில் இருந்து வெளியேற விரும்புகிறார்களா?


மக்கள் கிளிநொச்சியைவிட்டு வெளியேற விரும்பவில்லை. ஆனால் வெளியேற்ற இராணுவம் தாக்குதலை கண்மூடித்தனமாக மேற்கொள்ளுகிறது. இங்கு வாழ்வதற்கு எதிரான நெருக்கடிகளை உண்டு பண்ணிவிட்டு தனது பகுதிகளுக்கு வரும்படி அறிவிக்கிறது. சில மக்கள் தாக்குதல்களை தாங்க முடியாது வெளியேறித்தான் இருக்கிறார்கள். எங்கள் மீது குண்டு வீசுகிற இராணுவத்திடம் நாங்கள் போய் அடைக்கலம் கொள்ளுவது எவ்வளவு துயரமானது. அரசு தனது குண்டுகளால் அச்சுறுத்தி மக்களை ஒடுக்குமுறைக்குள்ளே எடுத்துக்கொள்ள முயல்கிறது. வெளியேறிய மக்களின் துன்பங்கள் மிகவும்; கொடுமையானவை.

9.யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள், போர் நடக்கும் பகுதியில் உள்ள தங்கள் உறவினர்களை சென்று சந்திப்பது சாத்தியமா?


அது மிக நெடுநாளாக மறுக்கப்பட்டு வருகிறது. பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் போன்ற இராணுவம் கைப்பற்றியிருக்கிற பகுதிகளில் கடுமையான கிளியறனஸ் நடைமுறையிருக்கிறது. அவர்களின் விசாரணை அச்சுறுத்தல் பயண நெருக்கடிகளால் மக்கள் இந்த பயணங்களை தவிர்த்து வருகிறார்கள். போர் நடக்கிற பகுதிகளின் ஆபத்தாலும் மக்கள் இங்கு வர முடியாதிருக்கிறது. பயணங்களை சிக்கலாக்கி தொடர்புகளையும் தமிழ்ப்பகுதிகளையும் துண்டித்து கொண்டிருக்கிறது இராணுவம்.

10.கொழும்புவுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான புலிகள் பகுதி வழியாக வரும் பேருந்து போக்குவரத்து இப்பொழுது நடைபெறுகிறதா?


அந்தப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுவிட்டது. ஏ-9 எனப்படும் அந்தப்பாதையில்தான் முதலில் போர் 2006இல் மூண்டது. அப்பொழுது முதல் பாதை மூடப்பட்டிருக்கிறது. அந்தப்பாதையை மீளத் திறப்பதில் தான் சமாதானம் குழம்பியது. அரசு அந்தப்பாதையை இறுதிவரை திறக்க உடன்படவில்லை. அதனால்தான் மக்கள் நிறைய பயண நெருக்கடிகளையும் தடைகளையும் சந்திக்கிறார்கள். அந்தப்பாதையை அண்;டி 2007இல் வன்னிப்போர் தொடங்கியது. இப்பொழுது அந்தப்பாதை முழுவதுமாய் போரிடம் பலியிடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

11. உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள், மின்சாரம் தடையின்றி கிடைக்கிறதா? அவற்றின் விலை நிலவரம் எப்படி இருக்கிறது? உதராணமாக கிளிநொச்சியில் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, காய்கறிகளின் விலை ?


தடையுடன்தான் கிடைக்கின்றன. இதைப்பொருளாதாரப்போர் என்று கருதுகிறோம். போராட்ட மனப்பாங்கை சிதைப்பதாற்காய் பொருளாதார நெருக்கடியை அரசு ஏற்படுத்துகிறது. முக்கியமான தேவைகளுக்குரிய உணவு மற்றும் மருந்து மீதான தடை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எரிபொருள் தட்டுபாடாயிருக்கிறது. பெற்றோல் 700ரூபாவுக்கும் மண்ணெண்ணை200ரூபாக்கும் மேலாய் கொடுத்தும் வாங்க முடியாது. மின்சாரம் முற்றாக கிடைப்பதில்லை. பெரும் இழுபறிகளுக்கும் கதறல்களுக்கும் பிறகு குறிப்பிட்டளவு பொருட்கள் வந்தடைகின்றன. அதை முழுமையாக அரசு அனுப்ப அனுமதிப்பதில்லை. அவை வந்து சேர்வதற்கிடையில் மக்கள் கடும் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இதில் அரசினது போர் திட்டம் இருக்கிறது.

அப்படி வருகிற பொருட்களை பங்கிடுவது பெரும் சிரமானது. அதிக விலையில் அவற்றை மக்கள் வாங்கவும் நேரிடுகிறது. ஒரு கிலோ அரிசி 200ரூபாய்க்கு மேல்தான் வாங்கலாம். சர்க்கரை 400ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ மாவு 150ரூபா, சீனி 400ரூபா ஒரு கிலோ மீன் 1000ரூபா என்றிருக்க மரக்கறிகளும் அதிக விலையில்தான் வாங்கலாம். தோட்டங்கள், வயல்கள், உற்பத்திகள் என்னதான் இருக்கிறது. அவைகளுக்கு அழிவும் நிச்சயமில்லாத தன்மையும் காணப்படுகிறது. இதற்கிடையில் குண்டு மழையில் எப்படித்தான் இவற்றை விலை கொடுத்து வாங்கி சமைத்து சாப்பிடுவது ... இது மிகவும் பயங்கரமானது.

14.பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்படுகிறார்களா? எப்படி என்பதையும் குறிப்பிடுங்கள்?


பேசுகிற உரிமை செய்திகளை அறிகிற உரிமை என்பவற்றை அரசு இங்கு மறுத்திருக்கிறது. தனது ஊடகங்களால் போர் பற்றிய பொய்யான செய்திகளை திணிக்கிறது. ஊடங்கள் மீது செய்தி கருத்துத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு யாரும் எழுதுவதையோ செய்தி வெளியிடுவதையோ விரும்புவதில்லை. அவர்கள் ஆயுதங்களால் கொலை செய்யப்படுகிறார்கள். பத்திரிகையாளரை அரசு பின் தொடர்ந்து கொண்டு எச்சரிக்கிறது. பத்திரிகைள் இடை நடுவில் நின்றுவிடுகின்றன. இதற்கிடையில் அரச ஊடகங்கள் தமிழ்மக்களுக்கு எதிரான பொய்ச் செய்திகளை வெளியிட்டு செய்திக்கொலை செய்து கொண்டிருக்கிறது.


12.இப்பொழுது அங்கு சண்டை எந்த அளவில் உள்ளது? என்ன நடக்கும் என எதிர்பர்க்கிறீர்கள்?


சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அது எந்த நேரத்திலும் மூளலாம். எப்பொழுதும் நடை பெற்றுக்கொண்டிருக்கும். அதன் முடிவு பற்றி கூற முடியாது. சண்டையை முடிவுக்கு கொண்டு வருவோம் புலிகளை அழித்து முடித்துவிடுவோம் என்று அரசு கூறுவது சாத்தியமற்றது. அது கொடிய போரின் மூலம் ஈழப்போராட்டத்தை நசுக்குகிற கனவுடன் பெருமெடுப்பில் நிற்கிறது. இப்போதைய அரசும், புலிகள் அல்லது ஈழப்போராட்டம் பற்றி தவறாக மதிப்பிடுகிறது. இதுவும் மக்களை பலியெடுக்கிற போரில் மிகுந்த ஈடுபாடு கொண்டு மிகுந்த வெறியுடன் நிற்கிறது. சண்டையில் நம்பிக்கை வைத்திருக்கிற அரசிடம் அதன் மூலம் எதிர்கொள்வது மக்களுக்கும் போராளிகளுக்கும் தவிர்க்;க முடியாதிருக்கிறது. எனினும் இந்தப்போர் அமைதியான வாழ்வை தரும் என்று நம்புகிறோம். போர் முடியவேண்டும் என்ற நிம்மதியாக வாழவேண்டும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.

இவரின் கனவு நனவாக வேண்டும்.

தளவாய் சுந்தரம்

Wednesday, September 17, 2008

"எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது"

தீபச்செல்வன் - நிந்தவூர் ஷிப்லி சந்திப்பு

ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி நகரம் ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறார் தீபச்செல்வன்.கவிதைகள், ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், விமர்சனங்கள் என பலதுறையில் இயங்கிவரும் தீபச்செல்வன் உலகில் முக்கிய கவிஞராக அறியப்பட்டு வருகிறார்.போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் பிரக்ஞைபூர்வமாக எழுதி வருகிறார். இவருக்கும் எனக்குமான இரண்டாவது சந்திப்பு இது.இது போன்ற உரையாடல்கள் வழியாக இளைய எழுத்துச்சூழலை செப்பனிடுவதே எங்கள் நோக்கம்.

01) நிந்தவூர் ஷிப்லி:- உங்களைப்பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை முதலில் தாருங்கள்

தீபச்செல்வன் :- நான் ஆனந்தபுரம் கிளிநொச்சியில் வசித்து வருகிறேன். அப்பாவால் சிறிய வயதில் கைவிடப்பட்ட சூழ்நிலையில் அம்மா இந்த சமூகத்தில் ஒரு பெண்ணாய் தனித்து எங்களை வளர்த்து வருக்கிறார். போரில் எனது அண்ணன் ஒருவனை பலிகொடுத்திருக்கிறோம். ஒரு தங்கை இருக்கிறார். இது தான் எங்கள் குடும்பம். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரம் வரை படித்தேன். தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன்.

02) நிந்தவூர் ஷிப்லி :- முப்பது வருடங்களாக யுத்தத்தினால் சிதைந்து கொண்டிருக்கும் வடபுலத்திலிருந்து குறிப்பாக கிளிநொச்சி வன்னிப்பகுதியிலிருந்து மிகுந்த நெருக்கடியான சூழலிலும் ஒரு எழுத்தாளனாக உங்களை எங்கனம் நிலைநிறுத்திக்கொண்டீர்கள்..?

தீபச்செல்வன் :- உன்மைதான், யுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்படுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத்தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத்தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச்சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.

03) நிந்தவூர் ஷிப்லி :- எழுத்தின் மீதான ஆர்வம் அல்லது வெறி எப்படி உங்களை தொற்றிக்கொண்டது.?

தீபச்செல்வன் :-முன்பு வாசிப்புக்கள் ஓரளவு எழுதத்தூண்டியிருந்தன. ஆனால் அவை போலச்செய்தல்களாகவும் பலவீனமானவையாகவும் இருந்தன. மிகவும் வறுமையான வாழ்வுச்சூழ்நிலை அம்மாவின் தனித்துவிடப்பட்ட வாழ்க்கை இந்த சமூகத்தில் அனுபவித்த கொடுமைகள் சொந்தங்களின் நடைமுறைகள் போர் இடப்பெயர்வு என்பன என்னை எழுதத்தூண்டியிருந்தன.

எழுத்து நிம்மதியை தந்தபொழுது எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. அதனால்த்தான் எழுத்தைவிட்டு நீங்கமுடியாதிருக்கிறது.

04) நிந்தவூர் ஷிப்லி:- உங்கள் சமூகம் சார்ந்த வாழ்வியல் வலிகளை உலகளாவிய ரீதியில் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் தற்கால இலக்கிய ஊடாட்டங்கள் அல்லது எழுத்து அசைவுகள் எப்படி இருக்கின்றது..?அவைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா?

தீபச்செல்வன் :- உலகளாவிய ரீதியில் இன்று இலக்கிய வாசிப்பு ஊடாட்டங்களை ஏற்படுத்த முடிகிறது. இதற்கு இணையம் பெரியளவில் உதவுகிறது. சமூகம் பற்றிய ஓட்டங்களையும் வாழ்வியல் வலிகளையும் உடனுக்குடன் பேசுகிற வசதி நிலவுகிறது. அதிலும் இன்று கருத்தூட்டங்கள் என்பது நிதானமாகவும் ஆழமாகவும் கூட முன்னெடுக்கப்படுகிறது.

05) நிந்தவூர் ஷிப்லி :- எழுத்தில் உங்கள் குரு யார்?யாரையேனும் பின்பற்றுகிறீர்களா?வழிகாட்டிகள் அல்லது முன்னோடிகள் என்று யாரையேனும் முன்மொழிகின்றீர்களா?

தீபச்செல்வன் :- குரு என்று யாருமில்லை. யரையும் பின்பற்றுவதும் என்றில்லை. இந்தக் கேள்வியை பல உரையாடல்களில் பார்த்திருக்கிறேன். பலருடைய எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் அந்த பாதிப்புக்கள் இருக்கின்றன. உன்னை நீ கண்டு பிடி என்றே நெருங்கி பழகுகின்றன படைப்பாளகிகள் கூறியிருக்கிறார்கள். சிலருடைய படைப்புக்களை வாசிக்கும் பொழுது பிரமிப்பு ஏற்படுகிறது. எனது எழுத்துக்ளை காட்டி கருத்துக்களைக் கேட்டு வருகிறேன். சில இடங்களில் ஏற்றிருக்கிறேன். பலர் என் எழுத்ததை செம்மைப்படுத்தி இருக்கிறார்கள். கருணாகரன் நிலாந்தன் பொன்காந்தன் வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றவர்களைக்குறிப்பிடலாம். கருணாகரன் நிலாந்தன் என்னை கூடுதலாக செம்மைப்படுத்தியவர்கள் என்று கூறலாம். கருணாகரன் சில வழிகளை திறந்து விட்டிருக்கிறார்.

அது போல நம்மைப்போன்ற இளையவர்களின் கருத்து உரையாடல்களும் இடம்பெறுகின்றன. றஞ்சனி,பஹீமாகான்,சித்தாந்தன்,மாதுமை,பிரதீபா,அஜந்தகுமார் போன்றிடமும் நல்ல உரையாடல்கள் இடம்பெறுகின்றன.

06) நிந்தவூர் ஷிப்லி :- உங்கள் தீபம் இணையத்தளம் பற்றிச்சொல்லுங்கள்

தீபச்செல்வன் :- அது பதுங்குகுழியிலிருந்து தொடங்கப்பட்ட வலைப்பதிவு. அதன் மூலம்தான் எழுத்தை உலகளாவி அளவில் பகிர்ந்து வருகிறேன். தீபத்தை பலர் வாசித்து வருகிறார்கள். அந்தப்பக்கத்தை குழந்தைகளின் பக்கமாகவே பதிந்து வருகிறேன். உடனுக்குடன் கிடைக்கிற பின்னூட்டங்கள் ஆறுதலும் தருகிறது. அவைகள் செம்மைக்கு உதவுகின்றன.

07) நிந்தவூர் ஷிப்லி :- யதார்த்த நிகழ்வுகளைவியாக்கியானம் செய்யும் படைப்புக்கள் எப்படி இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்?

தீபச்செல்வன் :- இது பற்றி ஓரளவு கூறமுடிகிறது. யதார்த்த நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்ற படைப்புக்கள் அதற்குரிய வடிவத்தையும் மொழியையும் கொண்டிருக்க வேண்டும். இயல்பான வெளிப்பாடு இஙகு முக்கியமானது போலுள்ளது. அதன் மூலம்தான் கருத்துக்களை எளிதாக கொண்டு செல்ல முடிகிறது. தவிரவும் இது பற்றி பல்வேறுகருத்துக்கள் நிலவுகிறது. இயல்பான வடிவம் மொழி என்பவற்றின் ஊடாக யதார்த்தத்தை பேசுகிற பொழுது அது வெற்றியளிக்கிறது.

08) நிந்தவூர் ஷிப்லி :- 1990 இற்குப்பின்னரான கிளிநொச்சி வாழ்க்கை பற்றி சொல்ல முடியுமா?போர் நகங்களின் கீறல்களை ஒரு எழுத்தாளனாக எப்படி பார்க்கிறீர்கள்?

தீபச்செல்வன் :- 90களுக்குப் பிறகு கிளிநொச்சி பல அழிவுகளைச் சந்தித்திருக்கிறது. அவ்வப்போது அதன் வளமான பகுதிகள் அழகான இடங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 96இல் கிளிநொச்சி நகரமே அடிமையாக்கப்படடு சிதைந்து போனது. அங்கு பல பொதுமக்ககள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கிளிநொச்சி மீண்டும் மீட்கப்பட்டபொழுது. மீளுகின்ற வாழத்துடிக்கின்ற மனதோடு நகரம் மீண்டும் கட்டி எழுப்பப்படட்து. இப்படியான நகரத்தை மீண்டும் குறிவைத்து வருகிறார்கள். ஈழப்போராட்டம் இன்று கிளிநொச்சி நகரத்தில்தான் மையாக கிடக்கிறது. அது மீண்டும் சிதைக்கப்படுவதை நினைத்தப்பார்க்க முடியவில்லை.

09) நிந்தவூர் ஷிப்லி :- கிழக்கிலிருந்து வெளிவரும் படைப்புகளுகளையும் வடக்கிலிருந்து வெளிவரும் படைப்புகளையும் எந்தக்கண்ணோட்டத்தில் நோக்குகிறீர்கள்?

தீபச்செல்வன் :- அப்படி வெள்வேறு கண்ணோட்த்தில் பார்க்க முடியாது. எல்லாம் படைப்புக்கள்தான். பொதுவாகவே ஈழத்துப்படைப்புக்களுக்ககுரிய இயல்புகளைதான் காணமுடிகிறது. தமிழ்த்தேசியம் பெண்ணியம் சாதியம் போன்ற தன்மைகளில் இயல்பு ஒன்றுகின்றன. இரண்டு பகுதிகளும் இணைந்த மொழி வாசனை என்பவற்றை காண முடிகிறது. சிலருடைய படைப்புக்கள் குறிப்பிட்ட பிரதேச சொற்கள் நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. அது வன்னி யாழ்ப்பாணம் தீவகம் மன்னார் மட்டக்களப்பு என்றே வேறு படுகின்றன. அதிலும் இன்று எழுதி வருபவர்களிடம் அந்த வேறுபாடுகளைக்கூட காணமுடியவில்லை. அவர்கள் வேவ்வேறு பிரதேச அனுபவங்களையும் எல்லாப்பிரதேசங்களுக்கரிய இயல்புடனும் எழுதுகிறார்கள்.

10) நிந்தவூர் ஷிப்லி :- யாழ் பல்கலைக்கழக தமிழ் விஷேட துறை மாணவன் என்பதனால்தான் எழுத்தில் உங்களை சீர்படுத்திக்கொண்டீர் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

தீபச்செல்வன் :- இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பல்கலைக்கழக மாணவன் என்பதனாலோ தமிழ்விசேடதுறைமாணவன் என்பதனாலோ எழுதி வருவதாக கூற முடியாது. நமது தமிழ்த்தறையில் ஒரு கட்டுரையைக்கூட சரியாக எழுதமுடியாத மாணவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். மருத்துவபீடம் முகாமைத்துவபீடம் விஞ்ஞானபீடங்களில் பல்ல படைப்பாளிகள் வந்திருக்கிறார்கள்.

இருந்தாலும் இன்று பல்கலைக்கழக சூழலில் மாணவர்கள் எழுதுவதை அடையாளம் காட்டுவதில்லை. சில விரிவுரையாளர்கள் மாணவர்கள் எழுத்தில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. முன்பு பல்கலைக்கழகங்களை மையப்படுத்தியே அங்கிருந்து எழுத்துக்கள் உருவாகியிருக்கின்றன. இப்பொழுது ஆக்க பூர்வமான எழுத்துக்களை பல்கலைக்கழக சூழலில் காணமுடிவதில்லை. வரண்ட சொற்களோடும் பண்டிதத்தனத்தோடும் பல தமிழ்துறைகள் இருக்கின்றன. முதலில் அவை நவீன அறியிவல் துறையாக ஆக்கப்படவேண்டும்.

பல்கலைக்கழகம் தமிழ்த்துறை என்று எழுத்துச்சூழலை வட்டமிடமுடியாது. எழுத்து வாழ்விலிருந்துதான் உருவாகிறது. நல்ல எழுத்தாளர்கள் பலரை பல்கலைக்கழகத்திற்கு வெளியேதான் காணமுடிகிறது.

11) நிந்தவூர் ஷிப்லி :- கவிதைகள் தவிர வேறெந்த துறைகளில் உங்களுக்கு நாட்டம் இருக்கிறது?

தீபச்செல்வன் :- கவிதைகள் தவிர ஒளிப்படம் எடுப்பதிலும் நாட்டம் இருக்கிறது. வீடியோ விவரணம் தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் இருக்கிறது. சமீபமாக ஓவியங்கள் வரைவதிலும் ஈடுபாடு காட்டுகிறேன். அத்தோடு எனது பார்வை கருத்துக்களுக்கு எட்டிய வகையில் விமர்சனங்களும் எழுதி வருகிறேன். நல்ல படைப்புக்களை nவிப்படுத்த வேண்டும் என்ற ஆவலிருக்கிறது முயற்சித்துக்கொண்ருக்கிறேன்.

12) நிந்தவூர் ஷிப்லி :- தற்போதைய பின்நவீன இலக்கியங்கள் பற்றி தாங்கள் என்ன கருத்தைக்கொண்டிருக்கிறீர்கள்?

தீபச்செல்வன் :- பின் நவீனத்துவ இலக்கியங்கள் தமிழில் அழகியல் பூர்வமான படைப்புக்களைத் தருகின்றன. இதை கருத்துக்கள் பதுங்கிக்கிடக்கும் அல்லது ஒளிந்திருக்கும் படைப்புக்கள் அல்லது குவிந்துகிடக்கும் படைப்புக்கள் என்று கூறலாம். வடிவத்திற்கும் மொழிக்கும் அதிகமான சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தி நிற்கிறது. முன்பு நாட்டாரியல் இலக்கியம் செவ்விலக்கியம் என்பன பிரிந்து கிடந்தன. ஆனால் பின் நவீனத்துவ இலக்கியங்களில் நாட்டாரியல்கூறுகள் கலந்த சமூகத்தின் அசலான தோற்றதத்தை காணமுடிகிறது. படைப்பக்களில் ஆழமும் கனதியும் ஏற்பட்டிருக்கிறது. இரசனை அதிகரித்திருக்கிறது.

அதிகாரங்களினால் மக்களது வாழ்வும் கருத்துக்களும் விழுங்கப்படுகின்ற சூழ்நிலையில் பின் நவீனத்துவ இலக்கியங்கள் கருத்துக்களை பதுக்கி காவிச் செல்கிறது. மனிதர்களைப்போல கருத்துக்களும் இங்கு பதுங்கிக்கிடக்கின்றன.

13) நிந்தவூர் ஷிப்லி :- இலங்கையின் எழுத்துத்துறை முன்னொருபோதுமில்லாதவாறு இன்றைய காலகட்டங்களில் சூடுபிடிக்கத்தொடஙகியுள்து என்கிற கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

தீபச்செல்வன் :- அப்படிக்கூற முடியாது. இப்பொழுது இலங்கையை மற்றும் ஈழத்தை பொறுத்தவரை எழுத்து ஆபத்தானதாக காணப்படுகிறது. சமூகத்தை அசலாக பிரதிபலிக்கின்ற படைப்புக்கள் மிகவும் குறைவாகவே வருகின்றன. எல்லாவற்றையும் அப்படி கூறிவிடமுடியாது. சிலரிடம் துணிச்சலும் அக்கறையும் நேர்மையும் இருக்கிறது. ஆனால் அதிகாரங்களினால் அவைகளின் மேலாதிக்கங்களினால் சில எழுத்துகள் அடங்கி விடுகின்றன. தணிக்கை எச்சரிக்கை என்பன இயல்பான எழுத்தை பாதிக்கிறது. ஊடகங்கள் அரசம மற்றும் தனியாள் அதிகார மயமாகிவிட கருத்து நசிபடுகிறது. பொறுப்புள்ள ஒரு படைப்பாளிக்கு இது சங்கடமானதாயிருக்கும். சிலர் அதிகாரங்களிற்கு மடிந்து ஏதோ எழுதி தம்மை எழுத்தில் தீவிரமாக காட்டுவது பக்கங்களை நிறைப்பது படங்களை பிரசுரிப்பது நமது இலக்கிய வளர்ச்சி இல்லை என்றுதான் படுகிறது.

14) நிந்தவூர் ஷிப்லி :- போர்வலிகளைத்தவிர வேறு கருக்களில் நீங்கள் கவிதை எழுத எத்தனிக்கிறீர்கள் இல்லை.கவிதையின் உள்ளார்ந்தம் மிகப்பரந்தது இல்லையா?

தீபச்செல்வன் :- நான் போர் வலிகளைப்பற்றித்தான் எழுதுகிறேன் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அப்படி இல்லை. தனிமனித உணர்வுகள் போன்று பலவற்றை எழுதுவதாக நினைக்கிறேன். அறையிலும் வெளியிலும் சந்திக்கின்ற மனிதர்களின் முகங்கள் கோபம் நெருக்கம் பிரிவுகள் போல பலவற்றால் அதிகம் தாக்கப்பட்டிருக்கிறன். மனதுக்குள் கிடந்து நெளிகின்ற அந்த வலிகளை நெருக்கங்களை 'பல்லி அறை' என்ற வலைப்பதிவில் பதிந்திருக்கிறேன். எழுதுகின்ற எல்லாக்கவிதைகளையும் படித்தால் இது புரிந்து விடும். இருந்தாலும் இன்றைய காலத்திற்கு பொருத்தமாக நான் எழுதுகின்ற போர் மற்றும் அரசியல் கவிதைகளைத்தான் பத்திரிகைகள் இணையதளங்கள் பிரசுரிக்க முக்கியம் கொடுக்கின்றன.

15) நிந்தவூர் ஷிப்லி :- விரைவில் காலச்சுவடு பதிப்பகத்தால் உங்கள் கவிதை நூலொன்று வெளிவர இருப்பதை அறிகிறேன்...அந்நூல் பற்றி கூறுங்கள்?

தீபச்செல்வன் :- கவிதைப்புத்தகம் வெளியிடுவதை முதலில் நான் சிந்திக்கவில்லை. சுவிஸலாந்திலிருக்கும் எழுத்தாளர் மாதுமைதான் புத்தகம் வெளியிடுகின்ற அபிப்ராயத்தை ஏற்படுத்தினார். 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' என்ற அந்த புத்தகம் வெளிவர அவர்தான் முக்கிய காரணமாக இருக்கிறார். இது தான் எனது முதலாவது புத்தகமாக வருகிறது. தெரிவுசெய்யப்பட்ட கவிதைகள்தான் இடம்பெறுகின்றன. காலச்சவடு பதிப்பகம் அதனை சிறப்பாக வடிவமைத்து வெளியிடுகிறது. இங்கு நிலவுகின்ற போர்ச்சூழலில் புத்தகம் பதிப்பது வெளியிடுவது மிகவும் சிக்கல் மிகுந்திருக்கிறது. எனவே காலச்சுவட்டின் இந்த வெளியிட்டிற்கு நன்றி கூறவேண்டியிருக்கிறது.

16) நிந்தவூர் ஷிப்லி :- தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் வகிபங்கு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

தீபச்செல்வன் :- நிறையவே இருக்கிறது. அதுவும் பிரக்ஞை பூர்வமான பங்களிப்பிருக்கிறது. ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலை சித்திலெப்பைதானே எழுதியிருக்கிறார். உமறுப்பலவர் பேராசிரியர் உவைஸ் போன்றவர்களின் பங்களிப்புக்கள் செம்மையானவை. பிற்காலத்தில் நுஃமான் சோலைக்கிளி மஜித் பௌசர் ஓட்டமாவடி அறாபத் அஃராப் போன்றவர்கள் பங்களித்திருக்கிறார்கள்;. பங்களித்து வருகிறார்கள். சமகாலத்தில் அனார் அலறி பஹீமகான் வஸீம் அக்ரம் போன்றோர் எழுதி வருகிறார்கள். பெருவெளி போன்ற இதழ்கள் வருகின்றன. தமிழுக்கும் முஸ்லீம்களும் இடையிலிருக்கிற நெருக்கம் இன்னும் நிறைவே இருக்கிறது.(முழுவற்றையும் குறிப்பிட முடியவில்லை)

17) நிந்தவூர் ஷிப்லி :- இது நமது இரண்டாவது உரையாடல்.முதல் உரையாடலுக்கும் இதற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடுகள் துளிர் விட்டிருக்கிறதா?இதைத்தொடர நீங்கள் விரும்புகிறீரா?

தீபச்செல்வன் :- நீங்கள் பேசிய விடங்களுக்கும் நான் பேசிய விடயங்களுக்கம் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நாம் வெள்வேறு சூழலில் வாழ்வதனால் அப்படி இருக்கின்றன. கேள்விகள் பெரும்பாலும் ஒத்த தன்மையுடையனவாக இருக்கி;ன்றன. தொடர்ந்து உரையாடலாம். அதன் மூலம் மிக இளையவர்களான நாம் நமது எழுத்தை செம்மைப்படுத்துகின்ற பக்குவத்தை அடையலாம்.

அத்தொடு நமது அந்த உரையாடலை இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பத்திரிகையான தினகரன் தணிக்கைகளுக்கு உட்படுத்தி தமது நோக்கங்களுக்காக பயன்படுத்தி இருக்கிறது. அதில் போரில் பாதிக்கப்படுகி;ன்ற மக்களுடைய நிலைகள் அரசு காட்டும் போர் முனைப்பு செலவிடும் பணம் போன்ற விடங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இணையதளங்களில் அது முழுமையாக வெளிவந்திருந்தது. இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் இவ்வாறான விடயங்களிலிருந்து உரையாடல்களையும் கருத்துக்களையும் காத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.

18) நிந்தவூர் ஷிப்லி:- இறுதியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீரா?

தீபச்செல்வன் :- எழுத்து ஆபத்தானதாக இருக்கிறபொழுதும் எழுத்தை விட்டு நீங்க முடியவில்லை.அதுதான் நிம்மதியாக இருக்கிறது. போர் தின்று ஏப்பமிடுகிற எங்கள் மண்ணில் நிம்மதி மலர வேண்டும். எமது மக்களுக்கு நாடும் உரிமைகளும் கிடைக்க வேண்டும். நாங்கள் வாழவே விரும்புகிறோம். காலம் காலமாய் கிராமத்திற்கு கிராமமும் நாட்டிற்கு நாடும் அகதியாக திரிந்துகொண்டிருக்கிற எங்கள் சனங்கள் சொந்த மண்ணில் வாழவேண்டும். எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது.

நன்றி தீபச்செல்வன். மிகுந்த நெருக்கடியான சூழலிலும் நமது இலக்கியச்சந்திப்பு தொடர்கிறது. உங்கள் நூல் விரைவில் வெளிவரவும் எழுத்துத்துறையில் நீங்கள் இன்னுமின்னும் முன்னேறவும் எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் உடனிருக்கும். மீண்டும் சந்திப்பில் இன்னும் அலசுவோம். நன்றி நண்பரே.
-----------------------------------------------------

Monday, June 2, 2008

“அவளையும் மன உணர்வுள்ள ஒருத்தியாக கருதவேண்டும்.” நிரஞ்சினி-தீபச்செல்வன்:சந்திப்பு


நிரஞ்சனி-தீபச்செல்வன் :சந்திப்பு அஞ்சலூடாக

ஈழத்தின் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த இளைய எழுத்தாளர் நிரஞ்சனி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வரலாறு சிறப்புப்பட்டம் படிக்கிறார். ஈழத்தில் புதிய பெண் எழுத்தாளர்கள் தோன்றுகிற தன்மை மிக குறைந்துவிட இரண்டாயிரத்திற்கு பிறகு எழுதத்தொடங்கியவராக நிரஞ்சனி காணப்படுகிறார். 2002இல் ‘நிழலாய்ப்போன நினைவுகள்’ என்ற சங்குநாதம் பத்திரிகையில் வெளிவந்த கதையோடு எழுதத்தொடங்கினார். ஞானம், ஜீவநதி முதலிய இதழ்களிலும் உதயன், வலம்புரி முதலிய பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார்.

எழுதி குவித்தவர்கள் எழுத்தில் சாதனை செய்தவர்கள் அவர்களின் அனுபவங்கள் என்று மூத்த தலைமுறையினரோடு உரையாடுகிற நமது சந்திப்பச்சூழலில் இளைய தலைமுறையினரின் தொடக்கங்கள் அதனூடான ஊக்குவிப்பக்கள் என்பன இடம்பெறாத நமது எழுத்துச் சூழலில் முதன்முதலில் இளைய எழுத்தாளர் நிரஞ்சனியுடன் பேசலாம் என்று அவரை அஞ்சலூடாக சந்தித்தேன்.

தீபச்செல்வன்: வணக்கம் நிரஞ்சினி. முதலில் உங்கள் குடும்பம் பற்றியும் வாழ்வுச்சூழல் பற்றியும் சொல்லுங்கள்.

நிரஞ்சனி: எனது அப்பா ஓய்வுபெற்ற பிரதி அதிபர். அம்மா இல்லத்தரசி எனக்கு சகோதரிகள் மட்டுமே உள்ளனர்.

தீபச்செல்வன்: எழுதத்தொடங்கிய சூழல் பற்றியும் எழுதி வருகிற சூழல் பற்றியும் சொல்லுங்கள்.

நிரஞ்சனி: எனக்கு சிறுகதைகள் கவிதைகள் எழுதுவதற்கான சூழல் இருந்தது. அதாவது இவற்றை எழுத எனக்கு அமைதியான ஒரு சூழல் தோவைப்படும். நான் எழுத ஆரம்பிக்கும்பொழுது அச்சூழல் இருந்தது. அத்தோடு பெற்றோரின் சகோதரிகளின் ஆதரவும் இருந்தது.

தீபச்செல்வன்: உங்களை ஒரு பெண் எழுத்தாளராகவே நீங்கள் அடையாளம் காட்டி வருகிறீர்கள். அல்லது அத்தன்மை வாய்ந்த எழுத்துக்களைத்தான் கூடுதலாக எழுதி வருகிறீர்கள் உங்கள் பெண்ணியம் பற்றிய போக்கு எப்படியானது.

நிரஞ்சனி: அப்படிப்பட்ட எழுத்துக்களைத்தான் நான் கூடுதலாக விரும்புகிறேன். எனக்கு சகோதரிகள் மட்டுமே இருப்பதுவும் இதற்குக்காரணமாக இருக்கலாம். எனது பெண்ணியம்பற்றிய போக்கு வித்தியாசமானது. நான் பெண்களை ஆண்களுக்க சமமாக நிற்க வேண்டுமென்றோ அல்லது அவர்களை அடக்கி ஆளவேண்டுமென்றோ கருதவில்லை. பெண்ணிற்கும் வாழ்க்கையில் ஒரு மதிப்புக்கிடைக்கவேண்டும். பெண்தானே என்ற நோக்கில் கீழ்;த்தரமாக எண்ணப்படும் மனோபாவம் மாறி அவளையும் அன உணர்வுள்ளவள ஒருத்தியாக கருத வேண்டும்.

தீபச்செல்வன்: யாழ்ப்பாணத்தில் தற்பொழுது பெண்களது உரிமைகள் நடைமுறை வாழ்வுகள் எப்படியிருக்கிறது.

நிரஞ்சனி: உரிமைகள் ஓரளவு பேணப்படுகிறது. ஆனால் நடைமுறை வாழ்வு என்று வரும்பொழுது அவள் பல்வேறு விதமான சிக்கல்களுக்கு முகம் பொடுப்பவளாகத்தான் இன்றுவரை உள்ளாள்.

தீபச்செல்வன்: நடைமுறைகளாலும் சொற்களாலும் வதைபடுகிற ஒரு பெண் எழுத்தாய்த்தான் உங்கள் எழுத்துக்கள் காணப்படுகின்றன என்று நினைக்கிறேன். அதற்கு அப்பாலும் குழந்தைகள் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதை கூர்மையாக அவதானித்து எழுதுகிற பாங்கு உங்களிடம் இருக்கிறதா?



நிரஞ்சனி: இதுவரை அப்படி எழுதவில்லை…

தீபச்செல்வன்: இன்றும் எழுதிவருகிற மூத்த தலைமுறை பெண்எழுத்தாளர்களது எழுத்துப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிரஞ்சனி: அவர்களது துணிச்சல் மிகு எழுத்துக்கள் பாராட்டிற்குரியவை. பெண் எழுத்துக்களுககு அடிதத்தளமிட்டது அவர்கள் தானே.


தீபச்செல்வன்: அவர்களிடமிருந்து விலகிய எழுத்தை எழுத முற்படுகிறீர்களா? அல்லது அதே தன்னiயுடைய எழுத்தை எழுத முற்படுகிறீர்காளா?

நிரஞ்சனி: அவர்களிடமிருந்து விலகிய பெண் எழுத்தைத்தான் எழுத முயல்கிறேன்.

தீபச்செல்வன்: இன்றைய நவீன பெண் எழுத்தில் உங்களை கவர்ந்த எழுத்தக்கள் பற்றி சொல்லுங்கள்?

நிரஞ்சனி: அநேகமாக எல்லாப் பெண் எழுத்தாளர்களது ஆக்கங்களும் எனக்கு பிடிக்கும். அவை ஒவ்வொன்றும் ஏதோவொன்றை சமூகத்துக்கு வெளிக்கொணர முற்படுகின்றன.


தீபச்செல்வன்: இன்றைய யாழ்ப்பாண சூழல் அத்தோடு ஈழ அரசியல் என்பன உங்களிடம் ஏதாவது எழுதத்துண்டியிருக்கிறதா?

நிரஞ்சனி: யாழ்ப்பாண சூழல் என்னை எழுதத்தூண்டியது. குறிப்பாக யாழ்மண்ணின் பண்பாடு அருகிபபோவதாய் கவிதை எழுதினேன். வித்தியாசமாய் எழுதவில்லை.

தீபச்செல்வன்: அரசியல் எழுத்துக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் உங்களிடம் அரசியல் எழுத்து பெரியளவில் இல்லை என்று கருதலாமா?

நிரஞ்சனி: பெரியளவில் அரசியல் எழுத்துக்களை எழுதவில்லைத்தான்.

தீபச்செல்வன்: ‘நிழலாய்ப்போன நினைவுகள்’ என்ற கதை எப்படி வந்தது? முதல் கதை என்ற வகையில் அந்த எழுத்து சிறப்பாயிருந்ததா? சராசரியானதா?

நிரஞ்சனி: இக்கதை நான் பாடசாலையில் படிக்கும்போது எழுதினேன். அது சாதாரண இரு சகோதரிகள் தாய் இல்லாத நிலையில் அவர்களது நினைவுகளைப் புலப்படுத்தி சகோதரபாசத்தையும் வெளிக்காட்டகிறது. அது சராசரியான கதை என்றுதான் நான் கருதுகிறேன்.

தீபச்செல்வன்: உங்கள் எழுத்தை செம்மைப்படுத்த அல்லது எழுத்துப்பரப்பை விரிக்க என்ன செய்கிறீர்கள்?

நிரஞ்சனி: கவிதை,சிறுகதைகளை நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன்.

தீபச்செல்வன்: உங்கள் அக்கா தாட்சாயினியும் சிறுகதைகளை எழுதி வருகிறார். உங்களிடம் அவரது தாக்கம் வழிகாட்டல் எதாவது இருக்கிறதா?

நிரஞ்சனி: அவர் சிறுகதைகளை எழுதியதால் சிறு வயதிலிருந்தே அவரது கதைகளை விரும்பி வாசிப்பேன். அதனால்தான் துணிந்து இலக்கியப்பரப்பினுள் காலடி எடுத்து வைக்க முடிந்தது. நான் எழுத முற்படும்போது அவரது ஆதரவு நிறையவே இருந்தது. நான் எழுதியதில் திருத்தம் செய்யவேண்டியிருந்தால் சுட்டிக்காட்டுவார். எனவே அவரது வழிகாட்டல் இருந்தது என்றுதான் கூறலாம்.


தீபச்செல்வன்: ‘பசியடங்கா இருளிலிருந்து’ யாழ்பல்கலைக்கழக மாணவாகள் கதைத்தொகுதியில் உங்கள் ‘உதிர்வு’ என்ற இடம்பெற்றிருக்கிறது. உதிர்வு கதையி;ன் தாக்கம் குறித்தும் வடிவம் குறித்தும் சொலலுங்கள்?

நிரஞ்சனி: ‘உதிர்வு’ என்ற கதை சாதரண குறியீட்டுப்பாணியில் அமைந்த ஒரு கதை. இது எனது சொந்தக்கற்பனையில் உருவான கதை. இதில் எனது தாக்கம் என்று இல்லை. சாதாரணமாய் இருவர் காதல் என்ற ரீதியில் ஒன்றாய் சுற்றுகிறார்கள். அப்போதுதான் எனக்கு இப்படி ஒரு சிந்தனை உதித்தது. அவர்கள் ஒன்று சேருவது ஒரு புறமிருக்க தற்செயலாய் இப்படி ஒரு நிலைக்கு பிhரிக்கப்பட்டு தள்ளளப்பட்டால் அந்த பெண்ணின் நிலை பற்றியதாய்தான் இந்த ‘உதிர்வு’ என்ற கதை அமைகிறது.

தீபச்செல்வன்: போட்டிகள் பரிசுகளில் நீங்கள் கூடுதல் அக்கறை காட்டி எழுதுவதுபோல் தெரிகிறது. இது நமது சில மூத்த தலைமுறையினரிடமும் காணப்படுகிற செயல்பாடுதான் நல்ல படைப்புக்களை போட்டி பரிசுகள் நிராகரிப்பதாய் சொல்லுகிறார்கள். நீங்கள் இதில் அக்கறை காட்டுகிறீர்கள்.?

நிரஞ்சனி: அதிகம் அக்கறை காட்டுவதில்லை. நேரம் கிடைத்தால் எழுதுவேன். போட்டிப்பரிசுகள் நிராகரிக்கிறதோ இல்லையோ அதற்கென எழுதுவதில் ஒரு வித ஆர்வம் மேலோங்குகிறது. நளும்பிக்கை ஏற்படுகிறது. எனவே போட்டிகள் புதிய தலைமுறைப்படைப்பாளிகளுக்கு தேவையான ஒன்று என்று தான் நான் கருதுகிறேன்.

தீபச்செல்வன்: கூடுதலாக கதைகளை எழுதியிருக்கிறீர்கள் அந்த சூழலையும் சில கவிதைகள் எழுதிய அனுபவத்தையும் பற்றி சொல்லுங்கள்.

நிரஞ்சனி: நான் கதை,கவிதை எழுத முற்படும் போது சூழல் அமைதியானதாய் எனக்கு பிடிக்க வேண்டும். எனது ஆக்கங்களில் பெரும்பாலானவை கற்பனையின் வழிவந்தவை. சுpல பொதுவான நிகழ்வுகளின் வழிவந்தவை. குறித்த நேரத்தில் மனதில் எப்படி எழுத வேண்டும் என தோன்றுகிறதோ அப்படித்தான் எழுதுகிறேன். குறிப்பாக கனவு,பெண் ஆகியவற்றையும் உள்ளடக்கி எழுதினேன்.


தீபச்செல்வன்: நீங்கள் நான் இப்படி பேசுகிறோம். நாங்கள் இளையவர்கள். இந்த உரையாடல் மூலம் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் தொடக்கத்தை செம்மைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறதா? அல்லது அதிகமான உரையாடலாக வெளித்தெரிகிறதா?

நிரஞ்சனி: உண்மையிலேயே இதனை எனது தொடக்கத்தை செம்மைப்பத்தக்கூடிய உரையாடலானகத்தான் பார்க்கிறேன்.

தீபச்செல்வன்: நிரஞ்சனி நீங்கள் நல்ல செம்மையான எழுத்துக்களையும் வேறு எழுத்துப்பரப்பக்களையும் கண்டடைவதற்காக செயற்பட வேண்டியிருக்கிறது. அதற்காக உங்களை ஊக்கப்படுத்தி விடைபெறுகிறேன். நன்றி நிரஞ்சனி.

சில கேள்விகளுக்கு தெளிவாக நிரஞ்சனி பதில் தரவில்லை. குறிப்பாக அரசியல் பற்றி எழுதுவதற்கும் பேசுவதற்கும் அவர் விரும்பவில்லை. அவருடைய எழுத்துக்களைப்போல தீவிரமற்ற பதில்களுடன் அவருடனான சந்திப்பு அமைந்தது. பெண்ணின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படவேண்டும் அவளுக்குரிய மதிப்புகளும் இடங்களும் அவளிடம் கிடைக்கவேண்டும் என்கிறதாய் பேசியிருக்கிறார்.

Thursday, May 22, 2008

வெட்டப்பட்ட நகங்களை விடுத்து விரல்களைப்பாதுகாப்போம் நிந்தவூர்ஷிப்லி தீபச்செல்வன் :சந்திப்பு


நிந்தவூர்ஷிப்லி-தீபச்செல்வன் :சந்திப்பு மின்னஞ்சல் ஊடாக


ஈழத்தின் தென்கிழக்கு நிந்தவூரை சேர்ந்தவர் ஷிப்லி. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்கிறார். இதுவரை 3 கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.2002 இல் சொட்டும் மலர்கள் 2006இல் "விடியலின் விலாசம்" 2008 இல் "நிழல் தேடும் கால்கள்".2007 இல் "தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவசியம்" என்ற ஆய்வு தேசிய சமாதான பேரவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சிறந்த ஆய்வுகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் இங்கிலாந்தின் "பிறட்போட்" பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட முரண்பாட்டு முகாமைத்தவம் என்கிற பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டார். போர் மற்றும் சமூகப்பிரச்சினைகளிலிருந்து எழுதப்படுகிற இவரின் கவிதைகள் ஓரளவு வாசிப்பிற்கு கிடைத்து வருகிறது. நமது இளைய எழுத்துசூழலை செம்மைப்படுத்தும் எண்ணத்துடன் நானும் ஷிப்லியும் மின்னஞ்சல் ஊடாக உரையாடினோம்.



தீபச்செல்வன் (01) உங்கள் குடும்பம் வாழ்க்கை பற்றி கூறுங்கள்

நிந்தவூர் ஷிப்லி:-
நான் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை।இரண்டு சகோதரர்கள்।சகோதரிகள் இல்லை।தந்தை கணக்காளர்।தாய் இல்லத்தரசி।படித்தது எல்லாமே சொந்த ஊரான நிந்தவூரில்தான்.பாடசாலைக்காலங்களில் புறக்கிருத்திய பணிகள் எல்லாவற்றிலும் ஈடுபட வாய்ப்புக்கள் கிடைத்தன.நாடகம், பாடல், கவிதை, கட்டுரையாக்கம், ஆங்கில மொழித்தின போட்டிகள், தமிழ்த்தின போட்டிகள், விளையாட்டு, செஞ்சிலுவைச்சங்கப்பணிகள், சாரண இயக்கம் போன்ற தளங்களில் இயங்க பாடசாலைக்களம் முழுமையாக உதவியுது.உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் (2003) சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான பிறகு பாடசாலை அனுபவங்கள் எனது அடுத்தடுத்த சின்னச்சின்ன இலக்கிய நகர்வுகளை இலகுவாக முன்னெடுக்க உதவியது.பல்கலைக்கழகத்தில் தமிழச்சங்கம், முஸ்லிம் மஜ்லிஸ், மாணவர் பேரவை, மாற்றுக்கருத்துக்களுக்கான சினிமா அமைப்பு, தகவல் தொழிநுட்ப சம்மேளனம் போன்ற தளங்கள் நிறைய பட்டை தீட்டின.முகாமைத்துவ பீட தகவல் தொழிநுட்ப விஷேட துறையில் தற்போது பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் தறுவாயில் உங்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன்

தீபச்செல்வன் (02) ஷிப்லியின் எழுத்து தொடக்கம் எப்படி தொடங்குகிறது
நிந்தவூர் ஷிப்லி:-
1996 இல் பிஞ்சு என்ற சிறுவர் சஞ்சிகையில் சில சின்னச்சின்ன ஆக்கங்களை எழுதியிருந்தேன்.அப்போது எனது பெயர் பிரசுரமாக வேண்டும் என்ற சிறு பிள்ளைத்தனமான ஆசையைத்தவிர வேறு தரமான படைப்புக்களை படைக்கவேண்டும் என்ற மனநிலை இருக்கவில்லை.(அப்போது 11 வயது என்பதால் அதனை கீழ்த்தரம் என்பது சற்று மிகை என்று தோன்றுகிறது).பின்னர் நிறைய வாசிக்கும் ஆர்வமும் தமிழ்ப்பாடத்தில் எனக்கிருந்த அதீத ஆர்வமும் வாசகனாய் வளர்ந்து கொண்டிருந்த என்னை எழுதத்தூண்டியது.பின்னர் சில காலம் சக்தி வானொலியில் நிறைய கவிதைகள் பிரசுரமாகியிருந்தன.இடையில் (2002 இல்) "சொட்டும் மலர்கள் " என்ற 07 நண்பர்களின் கவிதைகளைத்தொகுத்து நூலாக வெளியிட்டேன்.அதற்குக்கிடைத்த வரவேற்பும் ஊக்கமும் தொடர்தேர்ச்சியான எழுத்தை நோக்கி என்னை இழுத்துச்சென்றது.அதன்பின் தினகரன், மல்லிகை, சுடர் ஒளி, நவமணி, படிகள், நிஷ்டை, அதிர்வு, இணையத்தளங்கள் போன்றவற்றில் தற்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தீபச்செல்வன் (03) நீங்களும் ஈழத்தின் அனேகமான எழுத்தாளர்களைப்போல போர் எழுத்தக்களை எழுத முற்படுவதுபோல தெரிகிறது அதை பற்றி சேலாம்

நிந்தவூர் ஷிப்லி:-
ஈழத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்றுவரும் போரும் அதன் தாக்கங்களும் ஒரு சமூக உறுப்பினராக என்னை நிறைய பாதித்திருக்கிறது.அன்றாடம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் கோரச்சம்பவங்கள், படுகொலைகள், கற்பழிப்புக்கள், குண்டுவெடிப்புக்கள் என்னை மட்டுமல்ல எல்லோரையும் வெகு தூரம் பாதிக்கவல்லன.படைப்பு என்பது காலத்தைச்சுட்டும் கண்ணாடி என்பார்கள்.அந்தவகையில் இன்றைய ஈழத்துச்சூழலில் வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களில் பெரும்பான்மையானவை போர்த்தாக்கம் குறித்தவைகள் என்பதில் இரு வேறு வாதங்கள் இருக்கப்போவதில்லை.அவைகள் நமது அவலங்களின் மிக முக்கிய ஆவணங்கள்.வெளியுலகுக்கு நமது இருப்பின் தடுமாற்றங்கள் குறித்து அவைகள்தானே வியாக்கியானம் செய்கின்றன?அந்த வகையில் நானும் போர் குறித்து எழுதுவது இயல்பானதுதானே..?நீங்களும் போர் விளைவுகளை பதிவு செய்யும் படைப்புக்களைத்தானே அதிகம் எழுதுகிறீர்கள்?போரைத்தவிர்த்து வேறெந்தப்பிரச்சினைகள் பற்றியும் நீங்கள் எழுதவில்லை இல்லையா?

தீபச்செல்வன் (04) போர் பற்றிய தாக்கம் உங்களிடம் எப்படியிருக்கிறது. போர் எழுத்தை உங்களால் திருப்தியாய் எழுத முடிகிறதா?

நிந்தவூர் ஷிப்லி:-
யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்றும் விரைவில் சமாதான இலங்கை மலர வேண்டும் என்றும் தினமும் இறைவனைப்பிரார்த்திப்பவன் நான்.லட்சக்கணக்கான உயிர்களைக்காவு கொண்ட பின்தான் சமாதானம் பூக்குமாயின் அப்படியொரு சமாதானமே வேண்டாம் என்றும் சிந்தித்திருக்கிறேன்.இங்கு மட்டுமில்லை இந்தியா, ஈரான், பாலஸ்தீனம், ரஷ்யா போன்ற உலக நாடுகளில் இடம்பெறும் யுத்தங்களும் கண்டிப்பாக எல்லா மனங்களையும் பிழியவல்லன.போர் எழுத்துக்களை என்னால் நூற்றுக்கு நூறு சரியாக பிரசவிக்க முடியவில்லை என்றே நான் எண்ணுகிறேன்.எனது கவிதைகளைப்படித்து நீங்களே அதை முடிவு செய்யுங்கள்.

தீபச்செல்வன் (05) தற்பொழுது ஈழத்தில் இடம்பெறுகிற போரினால் தமிழ் மக்களது நிலமை குறித்த என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

நிந்தவூர் ஷிப்லி:-
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு நிறைய இழந்துவிட்டார்கள்.உடமைகள், வீடு, நிலம், ஊர், நாடு, உறவுகள், உரிமைகள், உயிர்கள் என்று நிறைய இழந்துவிட்டார்கள்.சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழ்வதைவிட வலி தரும் விடயம் வேறென்ன இருக்க முடியும்?1948 இல் சுதந்திரம் கண்ட தேசம் இது.ஆனால் தமிழ்மக்களது சுதந்திரம் கேள்விக்குறிதான்....போக்குவரத்து, உணவு, கல்வி, வாழ்விடம் இப்படி அத்தியாவசிய தேவைகளைக்கூட அவர்களால் பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பது எத்துணை கவலை தரவல்லது..?ஒரு அடிமைக்கு கிடைக்கும் வாய்ப்புக்களும் சுதந்திரமும் கூட அவர்களுக்கு மறுக்கப்படும் நிலை கல்நெஞ்சக்காரனையும் கண்கலங்கச்செய்து விடும்.விடிவு விரைவில் பிறக்கும் என்ற அசையாத நம்பிக்கை எல்லோரையும் போலவே எனக்கும் இருக்கிறது. தேசிய சமாதான பேரவை 2006 இல் பொலனறுவையில் நடாத்திய சமாதானம் குறித்த கருத்தரங்கொன்றில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்ட போது நானும் மிகுந்த வேதனையுடன் பங்கேற்றிருந்தேன்.அப்போதைய அவர்களின் தகவல்களின்படி "யுத்த இழப்புக்களும் சவால்களும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இழப்புக்கள் பற்றிய தகவல்களை இங்கு பகிர்வது பொருத்தமென எண்ணுகிறேன்.இதுவரை யுத்தத்தினால் கொல்லப்பட்ட மக்களின் வாழ்வாதார மொத்த ஆயுள் இழப்பு 18 லட்சம் ஆண்டுகள்.கொல்லப்பட்டவர்களின் தொகை 70000.இதில் பாதிப்பேர் அப்பாவி பொதுமக்கள்.130000 குடும்பங்கள் அப்பாவி மக்கள். மேலும் யாழில் மட்டும் விதவையாக்கப்பட்ட தழிழ் பெண்கள் 20000.12 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.இப்படி தமிழ் மக்களின் இழப்புக்கள் சொல்லொணா துயர் கொண்டவை.இவை தவிர்த்து யுத்தத்தின் மொத்தச்செலவு 2451 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.யுத்தத்துக்காக கொள்வனவு செய்யும் ஒரு ஹெலிகொப்டரின் விலைக்கு 20 வைத்தியசாலைகள் அமைக்க முடியும்(583140000 இலங்கை ரூபா).இப்படியே இழப்புக்களை பட்டியலிட்டுப்போனால் தமிழ் மக்களின் பொருளாதாரம் எத்தகைய பின்னடைவை தந்திருக்கிறது என்பதை சுலபமாக விளங்கிக்கொள்ளலாம்.


தீபச்செல்வன் (06) போரினால் அப்பாவி முஸ்லீம்கள் சிங்கள மக்க்ள் பாதிப்படைவது பற்றி என்ன உணர்கிறீர்கள்.

நிந்தவூர் ஷிப்லி:-
ஒரு பெண்கவிஞரின் கவிதைதான் நீங்கள் இந்தக்கேள்வியைக்கேட்கும்போது எனக்கு விடையாகத்தோன்றியது.

"யுத்தம்
வெல்பவர்களையும்
தோற்பவர்களையும்
விட்டு விட்டு
வாழ்பவர்களையே அழிக்கிறது"

இக்கவிதை வரி அப்பாவி மக்களின் அநியாயச்சாவுகளை அப்பட்டமாய் எடுத்தியம்புகிறது இல்லையா?நிம்மதியாக இந்த நாட்டில் எவராலுமே வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலை இன்றுள்ளது.உயிருக்கு உத்தரவாதமே இல்லாத சூழல்.................. சிங்களவர்களோ, தமிழர்களோ, முஸ்லிம்களோ..யாராயினும் எல்லோரும் மனிதர்கள்தானே...நாமெல்லாம் ஒருவருக்கொருவர் சகோதரர்கள்.நமது சகோதரன் துன்புறும்போது கைகொட்டிச்சிரிப்பதும் அவனைக்கொன்று விடத்துடிப்பதும் ஐந்தறிவுகளிடம் கூட இல்லாத பண்புகள்.இதனால் பாதிப்புறுவது நமது வாழ்க்கைத்தரமும் தேசத்தின் வளர்ச்சியும் தானே..?நமது தாயின் சேலை உருவப்படும்போது நாம் பிரிவினையைத்தூக்கிக்கொண்டாடுவது எந்த வகையில் நியாயமானது? அதிலும் குறிப்பாக அப்பாவி முஸ்லிம்கள் ஆயுதமேந்தாமலே அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.யாழ்ப்பாணத்தின் விளாங்குளி மினுக்கன் வட்டக்கண்டல் ஆண்டான்குளம் பள்ளிவாசல்பிட்டி சொர்ணபுரி போன்ற கிராமங்களிலும் முல்லைத்தீவு வவுனியா போன்ற நகரங்களிலும் நிரந்தரமாக சொந்த பூமியில் வாழ்ந்த வந்த இவர்கள் 1990 ஒக்டோபரில் பலவந்தமாக கட்டாய வெளியேற்றத்துக்கு ஆளாகி இற்றை வரை தங்கள் வாழ்வாதாரத்தை சரியான முறையில் அமைக்கமுடியாமல் புத்தளம் அநுராதபுரம் போன்ற பகுதிகளில் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த துரோக வரலாற்றுக்கு வயது பதினெட்டு. காத்தான்குடி ஓட்டமாவடி ஆகிய பள்ளிவாசல்களில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கதறக்கதற சுட்டுக்கொல்லப்பட்டதை எப்படி மறக்க முடியும்?மிக அண்மையில் அக்கரைப்பற்று பள்ளிவாசல்களில் குண்டுவைத்து அச்சுறுத்திய சம்பவங்கள் அப்பாவி மக்களின் நிம்மதியான வாழ்வை வினாக்குறியாக்கியிருக்கின்றன.சிங்களவர்களும் பொது இடங்களில் குண்டுவெடிப்புக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர்.இவர்கள் எல்லோரையும் விட அப்பாவி தமிழர்களின் துயர் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை.கற்பழிக்கப்பட் அப்பாவி தமிழர்களில் கர்ப்பிணிகளும் அடங்கியிருந்தனர் எனும்போது இதற்குமேல் என்னால் எதுவுமே பேச முடியவில்லை.கோணேஸ்வரியின் சாவு இதுவரை இந்த உலகின் எவருக்குமே நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை(கற்பழிக்கப்பட்டு யோனிக்குள் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டவள்).தமிழர்களின் ஏனைய இழப்புக்களை இதே செவ்வியில் பிறிதொரு இடத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.


தீபச்செல்வன் (07) தமிழ் கவிதை தமிழ் மொழி இவைகளுடனான உங்கள் நெருக்கம் பற்றி சொல்லுங்கள்?

நிந்தவூர் ஷிப்லி:-
கவிதைகளுடன் நீண்ட காலமாக நெருக்கம் இருக்கிறது.தமிழ்மொழியைப்பொறுத்தவரை க.பொ.த (சா-த) வரை தமிழ் கற்றிருக்கிறேன்.அவ்வளவே..தமிழ்க்கவிதைகளில் மட்டுமன்றி அரபு, பிரெஞ்சு, ஆங்கில மொழிக்கவிதைளின் மொழிபெயர்ப்புக்கவிதைகளிலும் நிறைய ஈடுபாடு உள்ளது.இவைதவிர வாசிப்பின் வழியாகவே தமிழின் பல்வேறு பரிணாமங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

தீபச்செல்வன் (08) உங்களால் இன்னும் சரியான எழுத்தை எட்ட முடியவில்லைபோல படுகிறது வாசிப்பு எழுத்து உரையாடல்கள் எப்படி இருக்கிறது.

நிந்தவூர் ஷிப்லி:-
எந்த ஒரு படைப்பாளியாலும் தான் எழுத்தத்துறையின் சரியான இலக்கை எட்டிவிட்டோம் என்று திட்டமாகச்சொல்ல முடியாது என்றே நான் கருதுகிறேன்.ஏனெனில் காலவேகமும் சிந்தனைப்பரப்பின் அசுர வளர்ச்சியும் தொடர்தேர்ச்சியான தேடலுக்கு வித்திட்ட வண்ணமுள்ளது.அவைகளை நமது ஆளுமையின் வளர்ச்சிக்கு நாம் பயன்படுத்தி நமது எழுத்தின் வீரியத்தை வளர்த்துச்செல்லவேண்டிய தார்மீகக்கடப்பாடு எல்லோருக்குமே இருக்கிறது என்பதே எனது எண்ணம்.என்னைப்பொறுத்தவரை எனது எழுத்தின் பாணியும் நடையும் அநேக இலக்கிய ஆர்வலர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.அதுவே எனது அடுத்த கட்ட நகர்வுகளை சவாலாக்குகின்றன.மற்றபடி எனது ஒரு சில கவிதைகளைப்படித்துவிட்டு இப்படியொரு கருத்தை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது.நான் எழுதும் சூழல், எனது மொழி வளம், எனக்கும் எனது கவிதைகளின் கருப்பொருட்களுக்கும் இடையிலான அனுபவ இடைவெளி, எனது படைப்புக்களை வெளியிடும் பத்திரிகை சஞ்சிகைகளின் கட்டுப்பாடுகள் (இணையத்தளங்களில் அத்தகைய பிரச்சினைகள் இல்லை)இத்தகைய விடயங்கள் கூட படைப்பின் தன்மையைத்தீர்மானிக்கும் சக்திகள்.எனது எழுத்துக்கள் முற்று முழுதாக ஜனரஞ்சகத்தன்மை கொண்டவை.இருண்மையான படைப்புக்களில் எனக்கு ஆர்வம் குறைவு.சராசரி வாசகர்களுக்காகவே நான் எழுதுகிறேன். நமது படைப்பு விளங்கிக்கொள்ள முடியாதவை என மார்தட்டிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.ஆயினும் எனது படைப்புக்களில் முதிர்வுநலை குறைவு என்பதை நான் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
வாசிப்பைப்பொறுத்தவரை நெருக்கடியான சூழலிலும் நிறைய வாசிக்க நேரம் ஒதுக்குகிறேன்.பல்கலைக்கழக நூலகத்தில் எனது துறைசார்ந்த (முகாமைத்துவம்) நூல்களை விட இலக்கிய நூல்களையே அதிகம் இரவல் பெற்றிருக்கிறேன்.இணையத்தளங்களும் நிறைய வாசிக்கத்தூண்டுகின்றன.

தீபச்செல்வன் (09) சமூகக்கவிதைகள் எழுதுவதிலும் நாட்டம் செலுத்துகிறீர்கள் அவைகள் சராசரி எழுத்தை தாண்டி வருகிறதா?

நிந்தவூர் ஷிப்லி:-
சராசரி எழுத்து என்று எதை நீங்கள் நிர்ணயம் செய்திருக்கிறீர்கள் என்பது புரியவில்லை? ஆயினும் சமூகக்கவிதைகள் அன்றாட பிரச்சினைகளை யதார்த்தத்துடன் சொல்ல முனைவதால் சராசரியாக எழுத முடிகிறது. ஏனெனில் நாளாந்தம் நாம் பேச, காண, படிக்கக்கிடைக்கும் பிரச்சினைகள்தானே அத்தகைய சமூகக்கவிதைகளின் கரூவூலங்கள்.?

தீபச்செல்வன் (10) காதல் கவிதைகள் எப்படி வருகின்றன? காதல் கவிதைகள் எழுதுவது தொடர்பில் என்ன கருத்து காணப்படுகிறது.?

நிந்தவூர் ஷிப்லி:-
ஏன்?காதல் கவிதைகள் எழுதுவதில் என்ன தப்பு?கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நியதி ஒன்றும் இல்லையே...?கவிதை என்பதும் காதல் என்பதும் அழகான இரண்டு பகுதிகள்.இரண்டும் இணைவது கூடுதல் அழகு இல்லையா?சங்ககாலப்பாடல்களின் காதல் கவிநயம் இன்றும் போற்றப்படுகிறது இல்லையா? "நளவெண்பா" எனும்போது அதில் ஈரஞ்சொட்டும் காதல் பாடல்கள்தானே நினைவை நனைக்கின்றன..?

தீபச்செல்வன் (12) முத்த எழுத்தாளர்களின் எழுத்தக்களை வாசிக்கிறீர்களா? யாராவது நேரடியாக வழிகாட்டகிறார்களா?

நிந்தவூர் ஷிப்லி:-
நிறைய வாசிக்கிறேன்.நீலாவணனின் "துயில்", சேரனின் "ஜே.யுடனான உறவு முறிந்து மூன்று நிமிடங்களாகின்றன", காசி ஆனந்தனின் "நெருப்புப்பழம்", "மரணத்துள் வாழ்வோம்"கவிதைத்தொகுப்பு போன்றன நிறைய பாதித்திருக்கின்றன.இவைதவிர வ.ஐ.ச.ஜெயபாலன், கருணாகரன், சங்கரி, பஸீல் காரியப்பர் உள்ளிட்ட நம் நாட்டு எழுத்தாளர்களின் படைப்புக்களோடு இந்தியாவின் மனுஷ்ய புத்திரன், ஆத்மாநாம், வைரமுத்து, அப்துர் ரஹ்மான், தபசி, நம்பிராஜன் போன்றோரின் படைப்புக்களையும் பலமுறை படித்திருக்கிறேன்.நேரடி வழிகாட்டிகள் என்று யாருமில்லை.இருந்தபோதும் இன்றுவரை பலரது ஆலோசனைகளையும், அனுபவங்களையும், விமர்சனங்களையும் அடிக்கடி கேட்டுக்கொள்கிறேன்.

தீபச்செல்வன் (13) சமீபமாய் வந்த நிழல் தேடும் கால்கள் புத்தகம் பற்றி சொல்லுங்கள்.

நிந்தவூர் ஷிப்லி:-
பெண்ணியம், போர்ச்சூழல், மற்றும் சில காதல் கவிதைகள் உள்ளடங்கலான ஒரு சிறிய கவிதை நூல் அது.பத்திரிகைகளில் பிரசுரமான எனது கவிதைகளிகளின் தொகுப்பே அந்நூல்.பலரதும் பாராட்டுக்கள் அதற்காக எனக்குக்கிடைத்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. சமூகத்தின் பிறிதொரு முகம் அந்நூலில் தெளிவாக்கப்பட்டிருப்பதாகவும் இனங்களின் பின்னிப்பிணைந்த எதிர்காலம் குறித்து அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் எனக்கு கிடைத்த வரவேற்பு எனது அடுத்த படைப்புக்களை மிகக்கவனமாக எடுத்தியம்பும் சவாலை ஏற்படுத்தியுள்ளன.மேலும் சர்வதேச பிரச்சினைகள் பற்றியும் பேச எத்தனிக்குமாறு பத்திரிகைகள் சுட்டிக்காட்டியிருந்தன.நல்லதொரு நூலை வெளியிட்ட திருப்தியை "நிழல் தேடும் கால்கள்" எனக்குத்தந்திருக்கிறது.சகல விமர்சனங்களுக்கும் நன்றி நவில்வதோடு அத்தனையையும் மனதார ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும் பொருளாதார நெருக்கடிகளால் சுமார் 08 கவிதைகளை தவிர்க்கும் நிலை ஏற்பட்டது மிகக்கவலை தருகிறது.

தீபச்செல்வன் (14) நீங்கள் அகதியாக்கப்பட்டது அதன் அலைச்சலின் வலி எப்படி உங்கள் எழுத்தில் தாக்கம் செலுத்தகிறது.

நிந்தவூர் ஷிப்லி:-
நான் அகதியாக்கப்படவில்லை.அகதிகளின் வலிகளை மிக நெருக்கமாக அறிவேன்.பாதிக்கப்பட்ட நண்பர்கள் வாயிலாக அவர்களின் அனுபவங்களும் கண்ணீரும் அத்தகு அகதிவாழ்வை சித்தரிக்கும் எனது கவிதைகளில் தாக்கம் செலுத்துகின்றன. புத்தளத்திற்கு ஒருமுறை செல்லக்கிடைத்த போது அவர்களின் வேதனைகளை கண்கூடாக கண்ட பிறகும் அதுபற்றிப்பாடாமல் இருப்பது எனது மனச்சாட்சிக்கு நான் செய்யும் துரோகம் இல்லையா?

தீபச்செல்வன் (15)படிப்போடு எழுத்தில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருக்கிறதா?

நிந்தவூர் ஷிப்லி:-
ஓரளவு சிரமம்தான்.எனது துறை வேறாயினும் எழுத்துப்பணிகளில் என்னால் முடிந்தளவு ஈடுபடுகிறேன்.


தீபச்செல்வன் (16)சோலைக்கிளி சண்முகம் சிவலிங்கள் போன்ற உங்கள் பகுதி முத்த எழுத்தாளர்களது எழுத்தில் எப்படியான பார்வை உங்களிடம் இருக்கிறது

நிந்தவூர் ஷிப்லி:-
இலங்கையின் மிகத்கிறமையான எழுத்தாளர்கள்.நீலாவணனுக்குப்பிறகு கிழக்கில் பேர் சொல்லும் படைப்புக்களைப்படைத்தவர்கள்.அதிலும் சோலைக்கிளியின் பாணி அபரிதமானது.சா...நெடிய முடத்தென்னை அடியில் நானும் நீயும்....என்று சோலைக்கிளி எழுதும்போது அந்த இடத்திலேயே நாமும் உட்கார்ந்து விடுகிறோம். கிராமத்தின் மொழிவளக்கை உலகெங்கும் எடுத்துக்காட்டிய பெருமை சோலைக்கிளியை சாரும். அவர் எழுதிய "நானும் ஒரு பூனை" "பனியில் மொழி எழுதி" "எட்டாவது நகரம்" "காகம் கலைத்த கனவு" "பாம்பு நரம்பு மனிதன்" போன்ற நூல்கள் எல்லோரும் அவசியம் படிக்கவேண்டியவை."சண்முகம் சிவலிங்கமும் அவ்வாறே..ஏக்கங்களையும் வலிகளையும் அப்படியே எழுத்தில் பதிய வைக்கும் திறன் வாய்ந்தவர்."நீர் வளையங்கள்" என்கிற அவரது கவிதை படிப்பவர்களையெல்லாம் அழவைத்துவிடும்.

தீபச்செல்வன் (17) நிழல் தேடும் காலல்கள் தொகுதியில் இடம் பெற்ற "கிழக்கு இன்னும் வெளுக்கவில்லலை" கவிதை பற்றி சொல்லுங்கள்
நிந்தவூர் ஷிப்லி:-
அது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைச்சொல்லும் கவிதை.கிழக்கு என்று அதில் உருவகப்படுத்தப்பட்டது எங்கள் மாகாணத்தையோ போர்ச்சூழலில் அமிழ்த்தப்பட்ட எங்கள் மக்களையோ சுட்டி நிற்கவில்லை.

“இன்னும் வெளுக்கவில்லை
எங்கள் கிழக்கு
தண்ணீரில் புதையுண்டு
போயிற்று புன்னகைகள்”

“அன்று அழுதோம்
அன்னையின் மடியில்
இன்று அழுகிறோம்
தனிமையின் பிடியில்”

“சுனாமி பறித்துச்சென்ற
எங்கள் நிம்மதி கூட
நிவாரணங்கள் போலவே
அவ்வப்போது..”

"எங்கள் வானின்
வானவில் கூட
கறுப்பு வெள்ளைதான்"

"துயரக்கடலால்
சூழப்பட்டிருக்கிறது
எங்கள் வாழ்வு மிகப்பத்திரமாய்..."

போன்ற வரிகள் சுனாமியின் தாக்கங்களின்றி போர்ப்பாதிப்பு அல்ல.


தீபச்செல்வன் (18) யாழ் மண்பற்றிய உணர்வு எப்படி இருக்கிறது?

நிந்தவூர் ஷிப்லி:-
யாழ் மண் பற்றி நான் எழுதிய "யாரிடம் போய்ச்சொல்லி அழ"என்ற கவிதையே யாழ் மண் பற்றிய எனது கருத்து.அதை இங்கு தருகிறேன்.


யாரிடம் போய்ச்சொல்லி அழ...............

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?

கனவுகளை காணவில்லை
கண்ணிரண்டில் கண்ணீர் மழை
இடம்பெயர்ந்த நாள் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை

உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்

புயலழித்த பூவனமாய்
புலமபெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்

நிலம் வீடு பிளந்ததம்மா
நூலகமும் எரிந்ததம்மா
பள்ளிகளும் கோயில்களும்
பாழ்நிலமாய்ப்போனதம்மா....

காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா

அங்கொன்றும் இங்கொன்றாய்
உறவெல்லாம் தொலைந்ததம்மா
நிம்மதியின் நிழல் இழந்து
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...

அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப்போனதம்மா

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?

தீபச்செல்வன் (19) கொழும்பில் தமிழ் மொழியில் உரையாடும் பொழுது எதாவது சிரமங்களை அனுபவிக்கிறீர்கள?

நிந்தவூர் ஷிப்லி:-
நிறைய சிரமங்கள் உள்ளன.குறிப்பாக சோதனைச்சாவடிகளில் நமது பயணப்பைகளில் தமிழ்ப்புத்தகங்களைக்கண்டாலே கேள்விகளால் துளைத்தெடுத்து விடுவார்கள்.சிங்களம் முழுதாகத்தெரிந்தால் மட்டுமே கொழும்பில் வாழ முடியும்.நான் ஒருமுறை பல்பிடுங்க சிங்கள வைத்தியரை அணுகி சரிவர எனது பிரச்சினையை சொல்லமுடியாமல் தமிழ் பேசத்தெரிந்த வைத்தியரை மீண்டும் அணுக வேண்டியதாகிவிட்டது.

தீபச்செல்வன் (20) உங்கள் மதத்திற்கும் எழுத்திற்குமான தொடர்பு எப்படி இருக்கிறது. இதன் தாக்கம் விழுமியம் எதாவது வருகிறதா?

நிந்தவூர் ஷிப்லி:-
உங்கள் கேள்வி புரியவில்லை.மன்னிக்கவும்.அடுத்த கேள்விக்குப்போகலாமே...

தீபச்செல்வன் (21)சமகால கவிதைகளை எப்படி வாசித்து வருகிறீர்கள் எப்படி இருக்கின்றன

நிந்தவூர் ஷிப்லி:-
சமகால கவிதைகள் பின் நவீன சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு வித்தியாசமான தளத்திற்குள் உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது ஒருவகையில் வரவேற்கப்படவேண்டியவை.காரணம் அரைத்த மாவையே திரும்பத்திரம் அரைத்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற முயற்சிகள் செங்கம்பளத்தால் வரவேற்க வேண்டியவைதான்.இன்னொரு புறம் சிக்கலான சொற்கையாள்கையும் புழக்கத்தில் அரிதாக இருக்கும் வார்த்தைகளும் அதிக அளவில் பின்நவீன சிந்தனைகளில் மேலோங்குவதால் கவிதையின் இருண்மை பலப்பட்டு வாசகர்களை அத்தகைய கவிதைகளிலிருந்து அந்நியமாக்கத்தொடங்குகிறது. மரபுக்கவிதைகளின் அடையாளம் பின்நவீன எழுத்துக்களால் வீச்சம் குறையத்தொடங்கியிருப்பது இன்னொரு வகையில் ஆரோக்கியமற்றது.ஏனெனில் மரபுக்கவிதைகள் புதுக்கவிதைகளை விட வலிமை மிகைத்தவை.கவிதைகளைப்பொறுத்தவரை அதிகபட்சம் மூன்றாவது முறை படிக்கும்போதாவது புரிந்து கொள்ளத்தக்கதாக அமையவேண்டும்.இன்றைய அவசர உலகில் அவைகளை ஆய்வு செய்து அர்த்தங்களை விளங்க முயற்சிக்கும் வாசகர்கள் மிக அரிது.இன்றைய காலகட்டத்தில் நிறைய படைப்புக்கள் மலிந்து கிடக்கின்றன.வாசகர்களை விட எழுத்தாளர்களே இன்று அதிகம். சிறுகதைகள் கூட இப்போது ஒருபக்க கதை, அரைப்பக்க கதை என்று தடம்மாறத்தொடங்கியுள்ளது.காரணம் வாசகர்களின் மனநிலை. என்னைப்பொறுத்தமட்டில் சமகாலக்கவிதைகளின் சகல பரிமாணங்களையும் வாசிக்க எத்தனிக்கிறேன்.பலர் வியக்க வைக்கிறார்கள்.வித்தியாசமான முயற்சிகள் அசர வைக்கின்றன.மொழிபெயர்ப்புக்கவிதைகளிர் கலீல் ஜிப்ரானின் கவிதைகள் என்னைக்கவர்ந்துள்ளன.

தீபச்செல்வன் (22)கவிதைக்கான இணைய தளங்கள் உங்கள் எழுத்திற்கு எந்தளவில் உதவுகின்றன.

நிந்தவூர் ஷிப்லி:-
அப்பால்தமிழ்,தமிழ்மன்றம், கீற்று, வார்ப்பு, தமிழ்மணம், திண்ணை, பதிவுகள், தமிழ்ரைற்றர்ஸ், கூடல், ஊடறு, தோழி, மரத்தடி மற்றும் கவிஞர்கள் எழுத்தாளர்களின் சொந்த இணையத்தளங்கள் என்று எழுத்துத்துறைக்கு இணையம் மிகப்பாரிய வகிபங்கை ஏற்றிருக்கிறது.அவைகளின் ஊடாக நிறைய கற்கும் சூழல் உருவாகியிருக்கிறது.நமது படைப்புக்களையும் இலகுவில் பதிக்க முடிகிறது.இலகுவான அதேநேரம் துரிதமான கருத்துப்பரிமாற்றம் எழுத்தாளர்களின் எழுத்துக்களை பரவலாக்குவதில் அதிக அளவில் ஒத்தாசை நல்குகின்றன. மேலும் தமிழ்ப்படைப்புக்கள் மட்டுமன்றி உலக இலக்கியங்களையும் மிக இலகுவாக படிக்க முடிகிறது.இது நமது படைப்புக்களின் தரம் மேலோங்க இணையம் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்குச்செலுத்துகிறது என்பதே உண்மை.

தீபச்செல்வன் (23) நானும் நீங்களும் உரையாடுவது வித்தியாசமானதயயிருக்கும் என நினைக்கிறேன். தொடக்கத்தை செம்மைப்படுத்தவதற்கான உரையாடலாய் இதை பார்க்கிறீர்களா?

நிந்தவூர் ஷிப்லி:-
நிச்சயமாக இது ஒரு புது முயற்சி. இரண்டு நண்பர்களுக்கிடையிலான உரையாடல் என்பதைத்தாணடி நமது எதிர்கால எழுத்துத்துறையின் வளர்ச்சிக்கு வித்திடும் உரையாடல்களின் ஆரம்பமே இது.இதற்குப்பிறகும் பல விடயங்கள் குறித்து உங்களோடு கருத்துப்பரிமாற ஆர்வமாயுள்ளேன்.தொடர்வோம்.

தீபச்செல்வன் (24) தமிழ்-முஸ்லீம்கள் உறவை வளர்ப்பது பற்றி சொல்லுங்கள். அதன் அவசியத்தை எப்படி காண்கிறீர்கள்.

நிந்தவூர் ஷிப்லி:-
தமிழ் முஸ்லிம் உறவு குறித்து மிக மிக ஆழமாக பேச வேண்டிய இக்கட்டான காலகட்டம் இது.ஆயினும் யதார்த்தபூர்வமாக இவ்விரு தரப்பு உறவு கைக்கெட்டாத ஒரு விடயமாகவே இற்றைவரை விரவிக்கிடக்கிறது.இந்த இன ஐக்கிய விரிசலுக்கு இருதரப்புமே கால்கோள்.அதில் ஒவ்வொரு தரப்பும் வேறு வேறு வகிபங்கை ஏற்றிருக்கின்றன.அடிப்படையில் தமிழ் இனவாதக்குழுக்கள் இழைக்கும் தவறுகளை ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமுமே இழைக்கிறது என்ற தவறான எண்ணக்கரு முஸ்லிம்களிடமும், முஸ்லிம் அரசியல்வாதிகளும், ஒரு சில சுயநலவாதப்போக்குக்கொண்டவர்களும் இழைக்கும் தவறுகளை முழு முஸ்லிம் சமூகமும் புரிந்து கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டில் தமிழர்களும் தவறான அர்த்தங்களை தம்மகத்தே கொண்டுள்ளனர்.அப்பாவி மக்களை இவர்களிடமிருந்து கோடு பிரித்துக்காட்ட முடியாமலிருப்பதுவும் இன விரிசலுக்கு அடிப்படையாக அமைந்துவிடடது. தமிழ்-முஸ்லிம் உறவு முன்பு வலுப்பெற்றிருந்தது.தென்கிழக்கு பிராந்தியத்தில் மட்டுமன்றி முழு கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்துப்பார்க்கவே முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு இரு சமூகத்தவர்களும் ஒன்றிணைந்த அடிப்படையிலேயே தமது சமூக வாழ்வை வகுத்திருந்தனர்.தமிழ் முஸ்லிம் ஒற்றுமையானது எப்போதுமே இன மத மொழி வேறுபாடுகளைத்தாண்டிய ஒன்றாகவே காணப்பட்டது.ஆரம்ப காலங்களில் சமய நிகழ்வுகள், சடங்குகள், கலை, கலாசார அம்சங்கள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார அரசியல் முன்னெடுப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்திருந்ததனை வரலாற்றினூடே தௌள்ளத்தெளிவாய் நோக்க முடியும். முஸ்லிம் சமூகத்தச்சேர்ந்த ஆண்கள் தமிழ் சமூகத்திலிருந்த "முக்குவர்"குலப்பெண்களை ஆரம்ப காலத்தில் திருமணம் முடித்திருந்தனர்.இது அப்போதைய இன நல்லுறவை இறுக்கமாக்கியிருந்தன.முஸ்லிம்களின் திருமண வைபவங்களில் இன்றும் கூட பின்பற்றப்படும் பல்வேறு சடங்கு முறைகள் தமிழ் சமூகத்தவர்களின் சடங்குகளுடன் ஒத்துப்போகின்றன.தாலிகட்டுதல், கால் கழுவுதல், ஆராத்தி எடுத்தல், பால்-பழம் கொடுத்தல், குரவையிடுதல் போன்ற பல அம்சங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.இன்னும் கல்முனையில் வருடாவருடம் இடம்பெறும் முஸ்லிம்களின் கொடியேற்ற நிகழ்வில் தமிழர்கள் கலந்து கொள்வதும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய தீப்பள்ளத்தின்போது முஸ்லிம்கள் அதைப்பார்க்கச்செல்வதும் இரு சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை வளர்த்த அம்சங்கள். ஆயினும் இத்தகைய நெருக்கமான உறவுகளை அடிக்கடி பேசுவதன் மூலம் மீளவும் உறவு கட்டியெழுப்பப்படும் என்பது வெறும் மேலெழுந்தவாரியான அலசலன்றி வேறில்லை.தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல பின்னப்பட்டிருந்தார்கள் என்பது போன்ற புளித்துப்போன பழைய கருத்துக்கள் பிரச்சினையின் சரியான பரிமாணத்தை சுட்டி நிற்காது.
எது எவ்வாறாயினும் இரு சமூகங்களிலுள்ள முற்போக்கு சக்திகளுக்கு, அறுந்து போன இந்த உறவை மீளக்கட்டியெழுப்பவேண்டிய தார்மீகப்பொறுப்பு உள்ளது.இது குறித்து எமது பல்கலைக்கழக பழைய மாணவர் சிராஜ் மஷ்ஹீரின் வாதங்கள் மிக முக்கியமானவை. அவரது கட்டுரையொன்றின் பிரகாரம் இப்பரஸ்பர உறவு சீர்குலைந்து போனதற்கான அடிப்படைக்காரணிகளையும் பின்னணிகளையும் வேர் வரை ஆராய்ந்து அடையாளம் காண்பதன் ஊடாக வரலாற்றுக்கடமைகளை செவ்வனே செய்ய முடியும்.இவ்விடயம் தொடர்பில் ஆழ்ந்த தெளிவில்லாது முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் வெறும் கானல் புரட்சியாகவே கிடப்பில் போடப்பட்டுவிடும்.கடந்த காலங்களில் இதற்கு ஏராளமான சரித்திர உதாரணங்கள் உள்ளன என்று சிராஜ் மஸ்ஹீர் விளக்குவது முற்று முழுதாக ஏற்கவேண்டியவையே. முதலில் இருதரப்பினரதும் நியாயமான கோரிக்கைகள் புரியத்தக்க வகையில் வெளிக்கொணரப்படல் வேண்டும்.தமிழ்த்தரப்பினர் முஸ்லிம்களிடையேயான உறவு குறித்து எத்தகைய அபிப்பிராயங்களை கொண்டிருக்கிறார்கள் என்று ஆவண வடிவில் பிரசவிக்கும் பட்சத்தில் இன விரிசலை மெல்ல மெல்ல தவிர்க்க எத்தனிக்கலாம்.முஸ்லிம்களைப்பொறுத்தவரை பெருவெளி, துயரி(தற்போது நிஷ்டை) போன்ற சஞ்சிகைகள் வாயிலாகவும் மீள்பார்வை, எங்கள் தேசம் போன்ற பத்திரிகைகள் வாயிலாகவும் வெளிக்கொணர்ந்த வண்ணமமுள்ளனர். வ.ஐ.ச.ஜெயபாலனின் "தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம்களும்" என்கிற நூலைத்தவிர வேறு காத்திரமான இது குறித்த நூல்கள் தமிழ்ச்சகோதரர்களிடமிருந்த வெளிவரவில்லை.இருந்தும் லண்டனிலிருந்து வெளிவரும் “உயிர்ப்பு” என்கிற சஞ்சிகை வழியபாக விக்டர் என்பவர் முஸ்லிம் தேசமும் தமிழர்களின் அபிலாசைகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார். மேலும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையேயான உறவை வளப்படுத்த இலக்கியம் மிக முக்கிய ஊடகமாக தொழிற்பட்டு வருகிறது.இன்று வரை தமிழ்-முஸ்லிம் உறவு பற்றி பேசுபவர்கள் இலக்கியவாதிகளே. எது எவ்வாறாயின் இரு தரப்புக்குமான இடைவெளியை குறைப்பதில் இருதரப்புமே தற்போது ஆவல் காட்டியவண்ணமுள்ளனர்.பிரச்சினைகளின் அடிப்படையிலிருந்து ஒற்றுமைக்கான ஆரம்பம் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் இரு தரப்பு இனவிரிசல்களுக்கு விரைவில் சாவுமணியடிக்க முடியும்.

“வெட்டப்பட்ட நகங்களை விடுத்து
விரல்களைப்பாதுகாப்போம்"

என்பதே எனது "நிழல் தேடும் கால்கள்" கவிதை நூலின் கரு.கடந்த காலங்களில் தமிழ்-முஸ்லிம் உறவு எப்படி இருந்நது?என்ற வாதங்களையெல்லாம் தூர எறிந்து விட்டு இன்னும் பல நூறு ஆண்டுகள் (இறைவன் நாடினால்)வாழப்போகும் நமது சந்ததிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை நாம் ஒற்றுமைப்படுவதன் மூலமே நிகழும்.அதுதவிர தமிழ்-முஸ்லீம் உறவு வலுப்பெறும் பட்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடூர யுத்தத்துக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிட்டும் சூழலும் உருவாக வாய்ப்புள்ளது."அடம்பன் கொடிகள் திரண்டால்தானே மிடுக்கு"
சில்லறைக்கொள்கைகளையும், வரட்டுப்பிடிவாதங்களையும் புறந்தள்ளிவிட்டு ஒற்றுமைப்படுவதற்கான முயற்சிகளில் இறங்குவோம்.நம்மோடு சிங்கள சகோதரர்களும் கண்டிப்பாக இணைவார்கள்.ஏனெனில் அடிப்படையில் நாமெல்லாம் மனிதர்கள்.ஒருவருக்கொருவர் சமனானவர்கள்.யாரும் யாரையும் அடக்க முயல்வதோ அடங்கிப்போவதோ விண் வீம்பு.

தீபச்செல்வன் (25) இறுதியாய் என்ன சொல்ல போகிறீடகள்
நிந்தவூர் ஷிப்லி:-
இந்த செவ்வியில் நீங்கள் கேட்டிருப்பது 24 வினாக்கள.....உண்மையில் அத்தனைக்கும் விரிவான விடையளிக்கும் நிலையில் நானில்லை என்பது ஒருபுறமிருக்க நமது உரையாடல் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்திற்கொண்டு காலதாமதமின்றி இதனை அச்சேற்ற வேண்டும் என்கிற பதைபதைப்பில் என்னால் முடிந்தவரை உங்களோடு உரையாடியுள்ளேன்.இது சமபூரணமான உரையாடல் இல்லை.இன்னும் பல விடயங்களை ஆழமாகவும் நீளமாகவும் நாம் அலசவேண்டியுள்ளது.கண்டிப்பாக இது ஒரு ஆரம்பமே.தற்போது இலக்கிய கருத்தாடல்கள் உரையாடல் வடிவில் அரங்கேறுவது அரிதாகவே நிகழ்கின்றது.பேட்டியை விட இது போன்ற உரையாடல்கள் மிக அவசியம். இந்த உரையாடலில் வினாக்கள் சற்று அதிகம் என்றே எண்ணத்தூண்டுகிறது.குறைந்த ஆனால் காத்திரமான விடயங்கள் பற்றி அலசும்போது அது அதிகளவான பின்னூட்டங்களை கருக்கட்டும் என நினைக்கிறேன் .வரும் எழுத்தாளனான எனக்கு இந்த உரையாடல் மிகப்பெரிய உந்துதலைத்தருகிறது.இதை ஆரம்பமாகக்கொண்டு (உரையாடல்-01 என்று குறிப்பிடுவோமே).தொடர்ந்தும் பல விடயங்களை பலரையும் இணைத்துக்கொண்டு உரையாடுவோம்.இறைவன் உதவுவான்.வாய்ப்புக்கு கோடான கோடி நன்றிகள்.



தீபச்செல்வன்:- நன்றி ஷிப்லி இது பிரயோசனமான சந்திப்பு என்று நினைக்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுதவும் புதிய பரப்புக்களை கண்டடையவும் வாழ்த்துகிறேன். நன்றி.

போரும் வாழ்வும்

வலைப்பதிவு பட்டியல்

உன்னதத்திற்கு வழங்கிய நேர்காணல்

-----------------------------------

நிந்தவூர் ஷிப்லிக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தமிழ் பத்திரிகையான தினகரன் தணிக்கை செய்து உரையாடலை வெளியிட்டுள்ளது. இது எமது உரையாடலை திசை திருப்ப நடந்த செயலாகும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற அடக்குமுறைகள் யுத்தத்திற்காக அரசு வெலவழிக்கும் பணங்கள் முஸ்லீம்கள் அப்பாவி சிங்கள மக்கள் முதலியோர் பாதிக்கப்படுவது முதலிவை பற்றி பேசிய பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கேவலமான நடவடிக்கை. இது மாதிரியான செயல்கள் ஊடக சுகந்திரத்திற்கும் உன்மைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.

தீபச்செல்வன்

சித்திராங்கனுக்கு வழங்கிய நேர்காணல்

தளவாய்சுந்தரத்திற்கு வழங்கிய நேர்காணல்