Monday, May 17, 2010

கனவிலும் நினைக்க முடியாத அளவுக்கு எங்கள் பாடசாலைச் சூழல் உருக்குலைந்து போயிருந்தது : கிளிநொச்சி மகா வித்தியாலயப் பாடசாலை அதிபர் பங்கயற்செல்வன்


நிர்மூலமான சூழலில் சிதைவடைந்த கட்டிடங்களின் நடுவில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது கிளிநொச்சி மகா வித்தியாலயம். எல்லாவற்றையும் இழந்த பொழுதும் இழக்க முடியாத கல்விக்காய் ஏங்கும் பிள்ளைகளால் இந்தப் பாடசாலை மீண்டும் பொலிவு பெற்று வருகின்றது. தேவைகளும் பிரச்சினைகளும் என்று நாளாந்தம் பல்வேறு நெருக்கடிகளுடன் மனத்தால் சிதைவுகள் காயங்களை உடைய பிள்ளைகளுடன் தனது அடுத்த பயணத்தை தொடங்கியருக்கின்றது இந்தப்பாடசாலை. இந்தப் பாடசாலையின் முதல்வர் திரு பங்கயற்செல்வன், ஆசிரியை சுரமஞ்சரி, பாலேந்திரன், மாணவன் வேலு நிக்ஷன் முதலியவர்களுடன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக இந்த உரையாடலை நடத்தியிருந்தேன்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நடத்திய உரையாடல்

GTN ற்காக தீபச்செல்வன் :

கனவிலும் நினைக்க முடியாதளவுக்கு எங்கள் பாடசாலை உருக்குலைந்து போயிருக்கிறது என்று குறிப்பிடும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் பங்கயற்செல்வன் சிதைவுகளுக்குள்ளான அலுவலகம் ஒன்றுக்குள் இருந்து பேசுகின்றார். கூரையை இழந்து சிதைவின் அடையாளமாக அமைந்திருக்கிறது அவரது அலுவலகம். அருகில் வகுப்புக்கள் நடக்கின்றன. பல பணிகளுடன் அதிபர் பங்கயற்செல்வன் இருந்து கொண்டிருக்க அவரது அலுவலகத்திற்கு சென்று உரையாடத் தொடங்கினேன்.

நாலாம் கட்ட யுத்தத்தின் முன்பான உங்கள் பாடசாலையின் அடைவும் தற்போதைய நிலையும் எப்படி இருக்கிறது?



பங்கயற்செல்வன்:

எங்களுடைய பாடசாலையைப் பொறுத்தவரையில் 80 ஆண்டு வரலாற்றைக் கொண்டது. 80 வருடங்களைக் கொண்ட இந்த வரலாற்றில் சாதனைகளும் பெறுபேறுகளும் என்று வளர்ச்சியான நிலையிலேயே போய்க்கொண்டிருந்தது. இடப்பெயர்வுக்கு முன்னரான காலம் பெற்காலம் என்று நாங்கள் கருதுகிறோம். கிளிநொச்சி மகா வித்தியாலயம் ஒரு தடைவ அல்ல பல தடவைகள் இடப்பெயர்வைச் சந்தித்திருக்கிறது. கிளிநொச்சி நகரின் மத்தியில் இந்தப் பாடசாலை இருப்பதன் காரணமாக கிளிநொச்சி எந்த சந்தர்ப்பத்தில் போருக்கு முகம் கொடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்தப் பாடசாலை இடம்பெயருகின்ற ஒரு நிலமைக்கு தள்ளப்பட்டது. ஒவ்வொரு தடவையும் நாங்கள் இடம்பெயர்ந்து போய் மீண்டும் இந்த வளாகத்திற்கு திரும்பி வரும்பொழுது வெறும் கற்குவியல்களாக இருந்து பின்னர் கட்டி எழுப்பப்ட்ட வரலாறாக இருக்கின்றது.

எங்கள் பாடசாலையில் நாங்கள் இடம்பெயருவதற்கு முற்பட்ட காலம் பெறுபேறுகளிலும் சரி சாதனைகளிலும் சரி பௌதீக வளங்களிலும் நாங்கள் மிக உன்னதமாக இருந்த காலமாக இருந்தது. கா.பொ.த உயர்தர வகுப்புக்களில் மாணவர்கள் சாதாரணமாக 3 ஏ பெறுபெறு எடுக்கின்ற நிலமையும் கா.பொ.த சாதாரண தரத்திலே மாணவர்கள் சாதாரணமாக 10 ஏ பெறுபேறு எடுக்கின்ற நிலமையும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையிலே 25 முதல் 30 வரையான மாணவர்கள் சித்தி எய்துகின்ற நிலமையும் சாதாரணமாக எங்கள் பாடசாலையில் இருந்தது.

எங்களது பாடசாலையில் சாதாரணமான இலகுவான சூழ்நிலையில் மாணவர்கள் பெறுபேற்றைப் பெறுகின்ற அளவுக்கு நிலமைகள் சாதகமாய் இருந்தன. அப்படி ஒரு நிலையை ஆசிரியர்களும் மாணவர்களும் எங்களுடைய சமூகமும் தோற்றுவித்திருந்தது. கல்வியுடன் மட்டுமன்றி கல்வியுடன் இணைந்த புறநிகழ்வுகளிலும் எங்களது பாடசாலை அகில இலங்கை ரீதியாக சாதனைகளை படைத்து நின்றது கடந்த இடப்பெயர்வின் முன்னர். தமிழ்த்தினப்போட்டிகளாயினும் சரி, விளையாட்டுப்போட்டிகளாயினும் சரி நாடளாவிய ரீதியிலான எல்லாப் போட்டிகளிலுமே எங்களது பாடசாலை தனக்கென தனியான அடையாளங்களை பதித்து நின்ற காலம்.

மாணவர்கள் ஏறத்தாழ 2400க்கு மேற்பட்டவர்களும் ஆசிரியர்கள் 74 வரையிலான ஆசிரியர்களும் இடப்பெயர்வின் முன்னர் கல்வி கற்று வந்தார்கள். கல்வி கற்பித்து கொண்டு வந்தார்கள். ஆனால் இடப்பெயர்வு எங்கள் பாடசாலையின் சகல நிலமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 2008ஆம் ஆண்டு இரண்டாம் தவனையுடன் எங்கள் பாடசாலை இடம்பெயர்ந்தது. 2008 மூன்றாம் தவணையை தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் நாங்கள் வைத்து மாலைநேரப் பாடசாலையாக இயக்கினோம்.



2009 ஜனவரி தர்மபுரம் மாகா வித்தியாலயத்தில் வைத்து தனித்துவமாக இயக்குவதற்கு முடிவெடுத்தோம். ஆனால் அப்படி இயங்க முடியவில்லை. அன்று முதல் இடம்பெயர்ந்த எமது பாடசாலை தன் செயற்பாடுகளை முழுமையாக இழந்தது. பின்னர் நாங்கள் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து முகாங்களுக்கு சென்று மீண்டும் 2010 ஜனவரி மாதம் எங்களது பாடசாலைக்கு தரும்பிய பொழுது எங்களது பாடசாலை வளாகம் இப்படி இருக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்க முடியாத அளவுககு எங்கள் சூழல் உருக்குலைந்து போயிருந்தது.

முதல் முதல் கட்டப்பட்டிருந்த 2 மாடி கட்டிடம் சுக்குநூறாக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்தது. எந்தக் கட்டிடங்களுக்குமே கூரைகள் இருக்கவில்லை. ஆரம்பப் பிரிவு கட்டிடங்களில் ஒரு கட்டிடம்கூட இல்லாத நிலையில் அழிந்து போயிருந்தது. பாடசாலை வளாகத்தில் கால் வைக்க முடியாதளவுக்கு பாடசாலை யுத்தத்தால் மிக பாதிப்படைந்து போயிருந்தது. இப்பொழுது பாடசாலை தொடங்கி நான்கு மாதங்கள் ஆகின்றன. இதற்குள் பாடசாலைக்குள் நடமாடக்கூடியளவிற்கு சூழலை உருவாக்கியிருக்கிறோம். மாணவர்களுடைய எண்ணிக்கையுடன் ஒப்பிடுகின்ற பொழுது கட்டிடங்கள் போதாத நிலையில் இருக்கின்றன. 50 வீத கட்டிட வசதிகூட இல்லாத நிலையில் உள்ளது.



GTN ற்காக தீபச்செல்வன் :

போரினால் உங்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என்ன தாக்கங்களை எதர்ககொண்டுள்ளார்கள்? ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வகுப்பறை செயற்பாடுகள் எப்படி உள்ளன? அது தொடர்பான ஆய்வுகள் எதையாவது செய்திருக்கிறீர்களா?

பங்கயற்செல்வன்:

பாடசாலையில் மாணவர்கள் ஆசிரியர்கள், இறந்துபோனது பாதிக்கப்பட்டது என்ற பார்க்கிற பொழுது நாங்கள் அதிளவு பாதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கிறோம். மூன்று ஆசிரியர்களும் இரண்டு பணியாளர்கள் இறந்திருக்கிறார்கள். இரண்டு ஆசிரியர்கள் தமது துணைகளை இழந்ததோடு, நான்கு ஆசிரியர்கள் தமது குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் ஏறத்தாழ 60க்கு மேற்பட்ட மாணவர்கள் போரில் இறந்து போயிருக்கிறார்கள். இது எங்களுக்கு மிக வேதனை தருகின்ற விடயமாகும். கண்பார்வை இழந்த மாணவர்களும் பால் ஒன்றை இழந்த மாணவனும் இருக்கிறார். அதைவிட பலர் காயங்களுடன் இருக்கின்றார்கள்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் மிக நீண்ட காலமாக போருக்கு முகம் கொடுத்தால் எறிகனை ஷெல் பங்கர் வாழ்க்கை விமானக் குண்டு வீச்சின் பாதிப்பில் கூடுதலாக அவர்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாக இயல்பான கல்வியை அவர்கள் வழங்குவதிலும் மாணவர்கள் அதை பெற்றுக்கொள்வதிலும் இடர்களை நாங்கள் எதிர் கொள்கனிறோம். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளானதை நாங்கள் வகுப்பறைகளில் பார்க்க கூடியதாக உள்ளது. அது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்ற சூழலில் ஆசிரியர்கள் இன்னும் நிரந்தரமாக கிளிநொச்சிக்கு திரும்பவில்லை. 30 வீதமான ஆசிரியர்கள் மட்டும் தமது சொந்த இடத்தில் குடியேற வந்திருக்கிறார்கள். ஏனைய ஆசிரியர்கள் வவுனியாவில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாளாந்தம் வந்து செல்கின்றார்கள். அவர்களிடம் முழுமையான செயற்பாடுகளை நாங்கள் எதிர்பார்க்க முடியாத சூழ் நிலை இருக்கின்றது.

ஆனால் ஆசிரியர்களின் மாணவர்களின் தளராத மனம் மாணவர்களுடைய கல்வியை வளம் படுத்தும் என்று நான் நினைக்கின்றேன். முன்பு இந்த ஆசிரியர்கள்தான் எங்கள் பாடசாலையின் உச்ச கட்ட வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள். ஆனால் ஆசிரியர்கள் போரின் தாக்கத்திற்கு உற்பட்டதன் காரணமாக அவர்களிடம் இருந்து முழுமையான செயற்பாட்டை எதிர்பார்க்க முடியாமல் உள்ளது.

GTN ற்காக தீபச்செல்வன் :

இன்றைய சூழலில் பாடசாலையில் என்ன தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன?

பங்கயற்செல்வன்:

இந்தப்பாடசாலையைப்பொறுத்தவரையில் தேவைகளைத்தான் பட்டியல்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன. நிறைவுகள் என்று பார்க்கும்பொழுது அதன் பட்டியல் மிகச் சிறியதாக உள்ளது. பௌPதக ரீதியான தேவைகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் 50 வீதமான தேவையைக்கூட எட்டவில்லை. இரண்டு கட்டிடங்கள் மட்டும் கூரை போடப்பட்டுள்ளது. அதில் ஒன்பது வகுப்பறைகள் இருக்கின்றன. ஒரு மண்டபம் இருக்கின்றது. அந்த மண்டபத்தில் நான்கு வகுப்பறைகள் வைக்ககூடிய சூழ்நிலை இருக்கிறது. ஏறத்தாழ 35 வகுப்பறைகள் தேவையான சூழ்நிலையில் 13 வகுப்பறைகள் மட்டுமே இருக்கின்றன. அதிபர் அலுவலகத்தை நான் கூரையில்லாத ஒரு அலுவலகத்திலேதான் வைத்திருக்கிறேன். மழை பெய்தால் மழைநீர் முழுவதும் அலுவலகத்துக்கும் வரும். மாணவர்கள் படிக்ககூடிய வகுப்பறையை வீணாக்க கூடாது என்ற படியினால்தான் அந்த அலுவலகத்தை கூரையில்லாத மண்டபத்தில் வைத்திருக்கிறேன்.

கட்டிடங்கள் நிறைய தேவைப்படுகின்றன. திருத்தக்கூடிய கட்டிடங்களை திருத்த எங்களிடம் நிதி இல்லை. யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் யுனொப்ஸ் நிறுவனம் அமைத்து தந்த நான்கு கட்டிடங்கள் வெறும் அத்திவாரத்துடனும் கம்பிகளுடனும் காட்சி தருகின்றன. இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் செய்து தர வேண்டும். தளபாடங்கள் பெரும் பற்றாக்குறையாக உள்ளன. எங்களுடைய தளபாடங்களை தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் கொண்டுபோய் வைத்தோம் அங்கு முழுமையான தளபாடங்கள் இருப்பதாக அவதானிக்க முடியி;;ல்லை. அத்தோடு பொருத்தமற்ற தளவாடங்களில் மாணவர்கள் இருக்கின்ற நிலமையும் காணப்படுகின்றது.




GTN ற்காக தீபச்செல்வன் :

மீண்டும் பாடசாலையை கட்டி எழுப்புவதில் முக்கியமாக யாருடைய பங்கை எதிர்பார்க்கிறீர்கள்?

பங்கயற்செல்வன்:

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஆயிரம் ஆயிரம் மாணவர்கள் உலகம் எங்கும் வியாபித்து இருக்கின்றார்கள். அவர்களிடம் உதவுகின்ற வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவர்கள் கல்வி கற்ற இந்தப் பாடசாலையை அவர்கள் நினைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அவர்களால் முடிந்த உதவிகளை செய்து இந்தப் பாடசாலையை கட்டி எழுப்ப உத வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

தங்கள் கடினமான உழைப்பில் பெறும் நிதியில் சிறுதொகையை இந்தப் பாடசாலையின் அபிவிருத்திக்கு வழங்கினால் பொரும் உதவியாக இருக்கும். அவர்கள் இதற்காக சிறு சிறு குழுக்களாக சங்கங்களாக இயங்கி இந்த சிறிய சிறிய உதவியை செய்யலாம் என நான்; எதிர்பார்க்கிறேன். அது இந்தப்பாடசாலையை பாரிய அளவில் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். எமது பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று மிக நலிவடைந்து போயிருப்பதால் இன்று புலம்பெயர்ந்த எமது பாடசாலையின் பிள்ளைகளிடமும் உறவுகளிடமும் உதவிகளை எதிர்பார்கிறேன்.


GTN ற்காக தீபச்செல்வன் :

காலில் காயமடைந்த ஆசிரியை ஒருவர் ஊன்று கோல்களின் உதவியுடன் வகுப்பறைக்கு சென்று கொண்டிருக்கிறார். உயர்தர மாணவர்கள் ஆர்வமாக இருந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் முகங்கள் மௌனமாக பல செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. ஆரம்ப வகுப்பு ஒன்றில் ஆசிரியை சுரமஞ்சரி பாலேந்திரன் மாணவர்களுடன் கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

போரின் பிறகு வகுப்பறையில் சந்திக்கின்ற மாவர்களின் மனநிலை மற்றும் கல்வி நிலை எப்படி இருக்கின்றது. முன்னேற்றகரமான சூழலை உருவாக்க முடிகிறதா?



சுரமஞ்சரி பாலேந்திரன் :

இந்தப்பாடசாலையில் நான் ஒரு ஆரம்பரிவு ஆசிரியராக இருக்கின்றேன். சில விடயங்களை மறக்க வேண்டும். சில விடயங்கள் மறக்க முடியாதவை. சில இன்பமான காரியங்கள், மகிழ்ச்சிகரமான விடயங்கள், கவர்ச்சிகரமானவற்றை நினைவுக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. ஆரம்ப காலத்தில் மாணவர்கள் மிக விரும்பும் ஒரு சூழலில்தான் இந்த மாணவர்கள் கல்வி கற்று வந்தார்கள். தற்போது போரினால் நாங்கள் மிகுந்த பாதிப்புக்களை எங்களுக்குள்ளே தாங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆரம்ப பிரிவைச் சேர்ந்த இந்த சிறுவயது மாணவர்கள் பல சூழலில் இருந்து வருகின்றார்கள்.

தாய் தந்தையரை, சகோதரர்களை இழந்திருக்கிறார்கள். பழைய மாணவர்களாக இவர்களைப் பார்த்து கற்பிக்க முடியாதுள்ளது. தவிர அவர்களுக்கு இயல்பாக கல்வி கற்கக்கூடிய இடவசதிகள் மிகப் பற்றாக்குறையாக உள்ளன. 4 வகுப்புக்கள் இருக்க வேண்டிய மண்டபத்தில் 8 வகுப்புக்களை நடத்துகிறோம். இப்படி பல பிரச்சினைகளை எதிர் நோக்கியவர்களாக மாணவர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மகிழ்வு ஊட்டுகிற கவர்ச்சிகரமான கல்வியை வழங்குவதில் இடநெருக்கடி பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.



முன்பு நாங்கள் பெற்றோர்களின் உதவியுடன் ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு அடைக்கப்பட்ட வகுப்பறை ஒன்றை அமைத்திருந்தோம். அந்த வகுப்பறையில் இரண்டு மாதங்கள் மட்டுமே அந்த அடைக்கப்பட்ட வகுப்பறையில் கல்விச் செயற்பாடுகளல் ஈடுபட்டோம். மிக மகிழ்வுகரமாக கல்வி கற்பித்தோம். அவ்வளவு சொத்துக்களும் அழிக்கப்ட்ட நிலையிலே மீள இங்கு வந்திருக்கிறோம்.

மாணவர்கள் தங்கள் வலிகளை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தன்னை இருட்டு மயமாக்கி சோகத்தில் இருப்பதை காண்கின்றோம். அவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சித் தன்மையான கல்வி கற்பிக்கும் முறைதான் தேவைக்கபடுகின்றது. அதற்குரிய வளங்கள் எங்களுக்கு தேவைப்படுகின்றன. அவர்களுக்கு ஒரு சிறுவர் விளையாட்டு பூங்கா இருந்தால் அவர்கள் சோகங்களை மறக்கும் நிமிடங்களை உருவாக்க முடியும். ஆனால் பல விடயங்களுக்கு விடை காண முடியாதவர்களாக எங்கள் நாளாந்த செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.


GTN ற்காக தீபச்செல்வன் :

பாடசாலை வளாகத்தில் ஒற்றைக்காலை இழந்துபோன வேலு நிக்ஷன் என்ற மாணவன் ஊன்று கோல்களின் உதவியுடன் வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தான். எட்டாம் வகுப்பில் படிக்கும் நிக்ஷன் மிக வேகமாக பேசுகின்றான். அவனிடம் ஏதோ ஒரு ஆர்வமும் துடிப்பும் இருக்கிறது. தான் காலை இழந்து போன சம்பவத்தை விபரிக்கும் பொழுது அவனது முகத்தில் அதிர்ச்சியும் வலியும் தெரிகின்றன.

உங்கள் கல்வி நடவடிக்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது? பாடசாலைக்கு வருவதில் எதும் சிரமங்கள் நேர்கின்றனவா?



வேலு நிக்ஷன்

என்னை அம்மா அல்லது அப்பாதான் பாடசாலைக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள். முதலில் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்து தான் பாடசாலைக்கு வந்தேன். பின்னர் அன்பளிப்பாக எனக்கு ஒரு சைக்கிள் தரப்பட்டது. அதில்தான் என்னை ஏற்றி வந்து விடுகின்றார்கள். இப்பொழுது ஓரளவு பிரச்சினையில்லாது நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆமியிடம் சரணடைய வந்த வேளையில் அந்த இடங்களில் மிதிவெடி இருக்கின்ற என்பதால் திரும்பிச் சென்ற வேளையில் எங்களை தடுத்து இராணுவம் எறிந்த செல்லினால் நான் காயப்பட்டேன். எனது கால் அங்கு சிதைவடைந்தது. அந்த இடத்திலேயே எனது அண்ணா இறந்துபோனான். அம்மாவுக்கு முகம் முழுவதும் காயம். அக்காவுக்கு உடல் எங்கும் காயம்.

பின்னர் நான் கடலால்தான் கொண்டு வரப்பட்டேன். மன்னார், குருநாகல், வவுனியா என்று பல வைத்தியசாலைகளில் எனக்கு சிகிச்சைகள் நடந்தன. பின்னர் காயம் ஆறியதும் முகாமுக்கு என்னை அனுப்பினார்கள்.

(இந்த நேர்காணலை வெளியிடுபவர்கள் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நடத்திய உயைராடல் என்பதை குறிப்பிட்டு வெளியிடலாம்)

எமது பண்பாடு அழிக்கப்படுவதையும் வரலாறு மறைக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர் வைத்தியக் கலாநிதி எஸ். யமுனாநந்தா


வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த தடயங்கள் கிடக்கின்றன என சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு நோக்கத்தில் கருத்துக்களை பரப்பும் சூழலில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொழுது வரலாற்று, பண்பாட்டு தடயங்களை அழிக்கப்படுகின்றன என்றும் குரல்கள் எழுகின்றன. பண்பாட்டின் வாயிலாகவே அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் வடகிழக்கில் தமிழர்களின் வரலாறு சார்ந்த விடயங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதாகவும் குறிப்பிடும் தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி எஸ். யமுனாநந்தா, அதற்கான நடவடிக்கைகளை குறித்த மையம் ஆரம்பித்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். பிராந்திய சுகாதார பணிமனையின் யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் கடமையாற்றும் கலாநிதி யமுனாந்தா அவர்களை குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக சந்தித்து இந்த நேர்காணலை செய்திருந்தேன்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நடத்திய உரையாடல்

GTN இற்காக தீபச்செல்வன்:


இனரீதியான பண்பாட்டு ரீதியான நெருக்கடிகள் எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான சூழலில் தமிழர் பாண்பாட்டு மையத்தை உருவக்கியதன் அவசியம் மற்றும் தேவை என்னவாயிருக்கிறது?

Dr. யமுனாநந்தா:


தமிழர்களின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் எமது வரலாற்றை உறுதிப்படுத்துவதன் மூலமே எமது இருப்பை பாதுகாக்கலாம். அதற்காகவே நாங்கள் தமிழர் பண்பாட்டு மையத்தை உருவாக்கினோம்.

கந்தரோடையில் 1918, 1919ம் நூற்றாண்டில் ஒரு அகழ்வாராட்சி நடைபெற்றது. அதில் ஜோண் போல் பீரிஸ் என்பவர் முப்பத்தைந்து நாணயங்களை கண்டெடுத்திருக்கிறார். அதேவேளை வல்லிபுரத்தில் இரண்டு நாணயங்களை அவர் எடுத்துள்ளார். இந்த நாணயங்கள் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள நாணயங்களுடன் ஒத்த இயல்பைக் காட்டுகின்றன. இவை புத்தர் இந்தியாவில் வாழ்ந்த காலத்து நாணயங்கள் அடுத்து இவை திராவிட பண்பாட்டுக்குரிய நாணயங்கள். இதன் மூலம் பண்டைய யாழ்ப்பாணத்து தமிழ் மக்களில் சிலர் பௌத்த தர்மத்தையும் குறிப்பிட்டளவு பின்பற்றியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஆனால் இதை சிங்கள பௌத்தர்கள் மறுத்து தங்களது நாகரிகம் இங்கிருந்தது என்ற தவறான ஒரு கருத்தை நிலைநாட்ட வருகிறார்கள்.

இத்தகைய வரலாற்று ஆதாரங்களை வலியுறுத்துவதன் மூலம் தான் எமது இனத்தின் இருப்பை உறுதிப்படுத்த முடியும். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். கந்தரோடையில் அலெக்ஸ்சாண்டர் மன்னர் காலத்து நாணயங்களும் எடுக்கப்பட்டன. அவர்கள் இதுதங்களுடைய நாடு இது என்று வரவில்லை. இது புவிசார் அரசியலில் பண்டைய காலத்திலும் யாழ்ப்பாணம் முதன்மை பெற்றுள்ளது என்பதனைக் காட்டுகின்றது. தற்காலத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த வருட அழிவிற்குப் பின்பும், எமது பண்பாட்டை உறுதிப்படுத்த வரலாற்று ரீதியாகவும் சமூக விஞ்ஞான ரீதியாகவும் எடுத்துக் கூற வேண்டும் என்பதற்காக தமிழர் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட்டது.


தமிழர்களுக்கு கற்பிக்கப்படும் வரலாறு தவறானது. தமிழர்களின் உண்மையான வரலாற்றை மானிப்பாய் இந்துக்கல்லூரியின் ஆசிரியர் ஜி.எஸ் நவரட்ணம் 1956இல் எழுதியுள்ளார். அந்த வரலாற்றுப்புத்தகமே உண்மையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தவறான வரலாற்றைக் கற்பித்து கேள்விக்குள்ளாக்கும் தன்மையை நாங்கள் மாற்ற வேண்டும். இலங்கையில வடகிழக்கில் சேர, சோழ, பாண்டியர்களின் நாகரிகங்களுக்கான தடயங்கள் உள்ளன. ஏனென்றால் எங்கள் நாகரிகம் தமிழகத்து நாகரிகத்தோடு தொடர்புடையது. ஆனால்; வட இந்திய அரசாங்கம் தமிழகத்தின் பழைய வரலாற்றை அறிந்திருக்கவில்லை போலுள்ளது. இந்திய இராஜதந்திரம் என்பது தங்களை தாங்களே தின்னும் இராஜதந்திரத்தை கடைப்பிடிக்கின்றது. அவர்கள் தமிழகத்துக்கும் யாழ்ப்பாணத்திற்கும் வடக்கு கிழக்குக்குமிடையிலான தொடர்பை அழிக்கும் விதத்திலேயே நடந்து கொள்கிறார்கள். எங்கள் பண்பாடு சார்ந்த விடயங்களை மாணவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, நிர்வாகிகளுக்கு, இராஜதந்திரிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

எங்களுடைய பண்பாட்டில் இரண்டு விதமான குடியிருப்புக்கள் ஏற்பட்டன என்பதற்கு குளங்களை அண்டிய இடங்களில் ஆலயங்களை அமைத்து குடியிருந்திருக்கிறார்கள். முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஆலயங்ளை எடுத்துக்கூறலாம். அடுத்து நகரங்களை அண்டிய குடியேற்றங்களாக யாழ்ப்பாண நகரத்தின் மையத்தில் வண்ணை வைத்தீசுவரர் ஆலயம் காணப்படுகிறது. சாவகச்சேரியில் இருந்த ஆலயம் உடைக்கப்பட்டு இப்பொழுது நீதிமன்றக் கட்டிடமாக உள்ளது. பருத்தித்துறையிலும் இவ்வாறு காணப்படுகிறது. இந்தப் பழைய பண்பாடு;களை நாங்கள் எடு;துக் கூற வேண்டியுள்ளது. 1990ல் தொல்பொருள் ஆராட்சியாளர் எச்.பி.பி டெல் பொலநறுவையில் ஒரு நடராஜர் சிலையை எடுத்திருக்கிறார். அது ஒரு வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட சிலை. அது சோழ நாட்டுக்குரியது. அடுத்து திருக்யோணேசுவரர் ஆலயத்தில் காணப்படுகின்ற கல்வெட்டுக்கள் “முன்னை குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை பின்னே பறங்கி பிடிக்கவே மன்னா கேள் பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போன பின் மானே வடுக்காய் விடும்”; என்று இருக்கிறது. அதாவது கோணேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டு இலங்கையை யார் யார் கைப்பற்றுவார்கள் என்று குறிப்பிடுகின்றது. இப்படி வரலாற்று ஆதாரங்களையும் சமகால விடயங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது எமது வரலாற்றையும் அதன் பண்பாட்டையும் இனங்காணமுடிகிறது. எனவே நாம் இவற்றை வலியுறுத்தவும் முன்னெடுக்கவும் தமிழர் பண்பாட்டு மையத்தை உருவாக்கியிருக்கிறோம்.

GTN இற்காக தீபச்செல்வன்:


தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் பௌத்த பண்பாட்டுக்கான தர்மத்துக்கான தடயங்கள் கிடைப்பதாக சொல்லப்படுகின்றது. அது எந்தளவு உன்மை?

Dr. யமுனாநந்தா:


தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தமிழர்கள் பின்பற்றிய பௌத்த தர்மங்களுக்கான சில தடயங்கள் இருக்கின்றதே தவிர அவை சிங்களவர்களுக்கு உரியதல்ல. இது மிகவும் முக்கியமானது. அதைச் சிங்களவர்கள் தங்களுடையது என்று குறிப்பிடுவது தவறானது இதை நாங்கள் எடுத்துக் கூறவேண்டும். அவர்கள் நில ஆக்கிரமிப்பின் அடிப்படையில் தான் பார்க்கிறார்கள். ஆனால் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் பௌத்த தர்மம் தமிழ் மக்களாலும் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து தென் இலங்கையில் இருந்து பௌத்தம் இங்கு வந்தது என்று கூறுவது தவறானது.

GTN இற்காக தீபச்செல்வன்:


அண்மைக் காலமாக முப்பது வருட காலப் போராட்டத்தின் தடயங்கள் மர்மமான முறையில்; அழிக்கப்பட்டு வருகின்றன. இறந்தவர்களின் நினைவுத் தூபிகளை, வீடுகளை சிதைப்பது முதலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அழிப்பு நடவடிக்கைகள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

Dr. யமுனாநந்தா:


எங்களுடைய வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூடியது. சி.எஸ் நவரட்ணம் எழுதியுள்ள இலங்கைத் தமிழர் வரலாறு 1900 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 1950 ஆம் ஆண்டு வரை வந்த வரலாறு ஒரு விதமானது. 1970 இற்கு பின்னர் வந்த எமது வரலாறு மிகவும் வித்தியாசமானது. அந்த போராட்டகால தடயங்களை அழிப்பதன் ஊடாக வரலாற்றை முற்று முழுதாக மாற்ற முடியாது. பழைய கால வரலாறு சார்ந்த விடயங்கள் பதிவுகள் இணையத்தளங்களில் இல்லை. ஆனால் அண்மைய எமது வரலாற்று சம்பவங்கள் எல்லாமே இணையத்தில் தொகுப்பில் உள்ளது. இப்படியான அழிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளுவது மனித நேயத்திற்கு முரணானது. இப்படி அவர்கள் அழித்தாலும் அண்மைக்கால வரலாற்றை யாரும் ஒளிக்க முடியாது. ஆங்கிலேயர்களின் தொல்பொருள் ஆராட்சிகளில் உள்ள பண்டைய தொல்பொருள் சார்ந்த விடயங்களை எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனொன்றால் வரலாற்றை அடிப்படையாக் கொண்டுதான் ஒரு சமூகத்தின் நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.



GTN இற்காக தீபச்செல்வன்:


வரலாற்று விடயங்கள் மற்றும் தொல்லியல் சார்ந்த விடயங்கள் குறித்து அண்மைக்காலமாக எழுந்திருக்கும் நிகழ்வுகள் குறித்து தொல்லியல் துறை மற்றும் வரலாற்றுத் துறை சார்ந்தவர்கள் நிறுவுகின்ற தன்மைகள் இல்லாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விஞ்ஞானத்துறை சார்ந்த அடிப்படையில் இவற்றை பாதுகாக்க முற்படும் நீங்கள் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு இதன் அவசியத்தை எப்படி எடுத்துக் கூற முடியும்?

Dr. யமுனாநந்தா:


நாங்கள் வரலாற்று அம்சங்களை பாதுகாக்க உறுதிப்படுத்த சில நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறோம். அவை குறித்து நாங்கள் இப்பொழுது வெளியே குறிப்பிடும் பொழுது அவை தடைப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அது ஒரு ஆபத்தான விடயமாயிருக்கிறது. கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் எனும் பொழுது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை பத்தை விட மிக குறைந்து போயுள்ளது. எங்கள் இளம் சமூகம் வரலாறு பண்பாடு மொழி முதலியவற்றை கற்பதன் மூலமே அதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். ஒரு சில பேராசிரியர்கள் எமக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். பேராசிரியர் குமாரவடிவேல், மற்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் வரலாற்று ஆசிரியர்களுடன் இணைந்துதான் இந்த பண்பாட்டு மையத்தை செயற்படுத்துகிறோம். அதன் மூலம் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எமது மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் வரலாற்றக் கல்வி தவறானது. அதிகாரங்களது செயற்பாடுகளால் வரலாற்றில் தொல்பொருளில் பல திரிபுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றையே மாணவர்கள் கற்கிறார்கள். அதைத்தான் அவர்கள் படிக்கிறார்களே தவிர தமிழர்களின் உண்மையான வரலாற்றை அவர்கள் படிக்கவில்லை என்பதுதான் இங்கு துக்கமான விடயம். அதை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை நாங்கள் பார்க்க வேண்டும். எங்கள் வரலாறு தென்பகுதி வரலாற்று ஆசரியர்கள் கொடுப்பதைத்தான் எமது மாணவர்கள் கற்க வேண்டியுள்ளது. இப்படியானவை எங்களுக்கு சரியான பின்னடைவை தருபவை.


GTN இற்காக தீபச்செல்வன்:


உங்களுடைய திட்டம் பண்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதா அல்லது தொல்லியல் சின்னங்களை சேகரிப்பதா?

Dr. யமுனாநந்தா:


மக்களிடம் பண்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு திட்டம் மற்றது பண்பாட்டு சின்னங்களை பேணுவது இன்னொரு திட்டம். ஏனென்றால் பண்பாட்டு சின்னங்கள் மிகவும் பெறுமதியானவை. விலை மதிக்க முடியாதவை. அவற்றை எந்த விலை கொடுத்தும் நாங்கள் விற்கக் கூடாது. அதை மற்றவர்கள் எடுத்துச் செல்ல விட முடியாது. எடுத்துக் காட்டாக ஒரு இடத்தில் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டால் இன்றைய சூழலில் விரைவாக இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படலாம். இவற்றை விழிப்புணர்வின் மூலம் நாங்கள் தடுக்க முடியும். அடுத்து அரசியல்வாதிகள், தீர்மானம் எடுக்கும் அதிகாரிகள் போன்றவர்களுக்கு எடுத்து கூறுதல் தொல் பொருள் சின்னங்களை பாதுகாக்கும் முறைகளையும் சொல்லுகிறோம். வரலாற்று கல்வியை இளஞ்சமூகத்திற்கு கொடுப்பதற்கான வழிகளையும் செய்கிறோம்.


GTN இற்காக தீபச்செல்வன்:


அபிவிருத்தி செய்யும் பொழுது பண்பாட்டு தடயங்கள் அழிவடைவதற்கு எதிரான குரல்களும் ஒரு புறம் எழுகின்றன. அபிவிருத்திக்காக அவற்றை அழிக்கலாம் என்ற மாற்று குரல்களும் மறுபறும் எழுகின்றன இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

Dr. யமுனாநந்தா:


பண்பாட்டின் ஊடாகத்தான் அபிவிருத்தி ஏற்பட வேண்டும்;. அபிவிருத்தி என்ற போர்வையில் பண்பாட்டு விடயங்களை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் சேது சமுத்திர திட்டத்தின் போது பல பொருளாதார முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டு தொடங்கப்பட்ட திட்டம் மிகப்பெரிய அளவில் சூழல் மாசுபடும் என்று எதிர்ப்புக்கள் எழுந்த சூழலிலும் முன்னெடுக்கப்பட்ட திட்டம் அங்கு இராமரால் கட்டப்பட்ட பாலம் இருக்கின்றது என்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. வரலாற்றுச் சின்னங்களை அழிப்பதற்காக திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்பவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.

நகர வீதி அபிவிருத்திகள் என்று சொல்லப்படுகின்றன வீதிகள் அகலமாக்கப்பட வேண்டும் என்பதற்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன. உள் நகரின் வீதிகளை அகலமாக்குவதற்கு பதிலாக புறநகர் ஒன்றை உருவாக்கலாம். யாழ்ப்பாணம் ஆலயமும் ஆலயம் சார்ந்த நகரமுமாக தொன்மைக்காலம் முதல் இருந்து வருகிறது. அபிவிருத்தி என்று சொல்லிக்கொண்டு பருத்தித்துறை வீதியை அகலமாக்கும் போது சங்கிலியன் தொகுப்பு எங்களுக்கு தெரியாமலே அழிந்துவிடும். வீதியை அகலமாக்கும் வர்த்தகர்கள் இலாப நோக்கம் கருதி வரலாற்றை மறைக்க முற்படுகிறார்கள். இதை நாங்கள் முற்றாக எதிர்க்கவேண்டும். அபிவிருத்தி என்பது நாகரிகத்தின் ஊடாகத்தான் செய்யப்பட வேண்டும். உதாரணமாக சீன அரசாங்கம் ஆபிரிக்காவுக்கு சென்று வானளாவிய ரீதியாக கட்டிடங்களைக் கட்டியது. ஆனால் நிலத்துக்கு கீழ் இருந்த எல்லா வளங்களையும் சுரண்டிக்கொண்டு சென்றது. அது போலத்தான் இங்கும் வந்து அபிவிருத்தி என்று சொல்லிக்கொண்டு கட்டிடங்ளைக் கட்டி மரங்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் அழித்து விட்டு சென்றால் பாலைவனமாகிப் போய் விடும்.

அலெக்ஸ்சாண்டர் காலம் முதல் இன்று வரை உலகத்தின் வல்லரசுகளின் ஆதிக்கங்களுக்கு உட்பட்ட போதும் நாங்கள் எங்கள் வரலாறு சார்ந்த விடயங்களை பாதுகாத்ததினால் தான் இன்றும் அடையாளத்துடன் இருக்கிறோம்.

GTN இற்காக தீபச்செல்வன்:


மாறிவரும் உலக சூழலை தமிழர்கள் எப்படி அல்லது நெருங்க வேண்டும் எதிர்கொள்ள வேண்டும்?

Dr. யமுனாநந்தா:


பண்பாடு நிலையானது நாகரிகம் வளர்ந்;து செல்வது. மாறிவரும் உலக சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம். உதாரணமாக தமிழ்மொழியில் ஆங்கில ஆக்கிரமிப்பை தவிர்க்க வேண்டும். ஆலய கலாசாரம் பாரம்கரியம் போன்றவற்றை பேண வேண்டும். தமிழர்கள் உலக கிராமத்துக்குள் இருக்கிறார்கள். உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்தாலும் தமிழ்மொழி விடயத்தில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும். மாற்றினங்களோடு நாங்கள் சேரும் போது தமிழ் மொழி ஆபத்துக்குள்ளாகின்றது. பெரும் அழிவிற்குப் பிறகும் சமய ஒழுக்கங்களாலேயே எங்கள் வாழ்க்கையையும் அமைதியை
யும் கட்டியெழுப்புகின்றோம். சமூச பண்பாட்டு வன்முறைகளை நாங்கள் தவிர்க்க வேண்டுமாக இருந்தால் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறையாக இருக்க வேண்டும்.

தட்டச்சில் உதவி : ஸ்ரீரமணன்


படங்கள் ‐ நன்றி இலங்கைத் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்றவரலாறு


குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Saturday, April 24, 2010

இந்தியாவின் யாழ்நகர தூதரகம் சீனாவை கண்காணிக்கவே - சுரேஷ் பிரேமச்சந்திரன்

சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர். பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்ட வேட்பாளராகப் போட்டியிடும் இவரை பொங்கு தமிழ் இணையத்தளத்திற்கென யாழ்ப்பாணத்தில் சந்தித்து உரையாடினார் கவிஞர் தீபச்செல்வன்.

நேர்கணல்: கவிஞர் தீபச்செல்வன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவிற்கான பின்னணி, பொங்குதமிழ் இணையத்தளத்தால் வெளியிடப்பட்ட கூட்டமைப்பின் தீர்வுத்திட்ட முன்மொழிவின் நகல், இந்தியாவுடனான உறவு மற்றும் போரின் பின்னான தற்போதைய அரசியல் சூழல் குறித்த கேள்விகளுக்கு இங்கு வெளிப்படையாகவும் காரசாரமாகவும் பதிலளிக்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

தீபச்செல்வன்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிளவிற்கு காரணமாக அமைந்த தீர்வுத் திட்டத்தின் நகல் ஒன்று கிடைத்திருப்பதாகக் கூறி பொங்குதமிழ் இணையத்தளம் அதனை கடந்த 14ம் திகதி வெளியிட்டிருந்தது. இந்த நகல் உண்மையில் கூட்டமைப்பினரால் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டத்தினுடையதா? நீங்கள் வெளியிட்ட தீர்வுத்திட்டம்தான் தற்போதைய பிளவுக்கு வழிவகுத்ததா? தமிழ் மக்களின் கடந்த கால வாழ்வு, போராட்டங்களின் தொடர்ச்சியாக இந்த தீர்வுத் திட்டம் அமைகிறதா?

சுரேஷ் பிரேமச்சந்திரன்:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டிருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களது 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் சில பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தாங்களாகவே வெளியேறிச் சென்றவர்கள். சிலர் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்து அங்கு வசித்து வருகிறார்கள்.

இதில் பிளவு என்று நீங்கள் சொல்லுவது கஜேந்திரகுமார் மட்டுமே. இவர் கொள்கை முரண்பாடு என்று சொல்லிக்கொண்டு வெளியேறியுள்ளார். கஜேந்திரனுக்கும் பத்மினிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களை கொடுத்திருக்குமாக இருந்தால் இந்தக் கொள்கை முரண்பாடு வந்திருக்குமா என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தங்களை விலத்தியதாக கூறுகிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு இடம் கொடுத்திருக்குமாக இருந்தால் அவர்களுக்கு நிச்சயமாக இந்த கொள்கை முரண்பாடு வந்திருக்காது.

கூட்டமைப்பின் கொள்கையை ஏற்றுக்கொண்டிருந்தால் யாழ் மாவட்டத்தில் தன்னை முதன்மை வேட்பாளராக்கியிருக்கக்கூடும் என்று கஜேந்திரன் சொல்கிறார். அவரது அரசியல் அறிவு அவ்வளவுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு இரண்டு ஆசனங்களை கொடுக்காமைக்கான காரணம் அவர்களது கடந்த கால நடவடிக்கைகள்தான்.

அரசியல் ரீதியாகவும் ஏனைய வழிகளிலும் அவர்கள் தங்கள் வேலைகளை குறுக்கிக் கொண்டார்கள். கஜேந்திரன் நோர்வேயிலும் பத்மினி லண்டனிலும் மிக நீண்ட காலமாக தங்கியிருந்தார்கள். இவர்கள் புலத்தில் சென்று மக்களைத் தட்டி எழுப்பினார்கள் என்று கூறுகிறார்கள். புலத்தில் இவர்கள் என்ன செய்தார்கள் என்று அங்குள்ளவர்களைக் கேட்டால் தெரியும்.

வன்னிப்போரின் இறுதிக் காலகட்டங்களில் அங்கு பல போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டங்களில் இவர்கள் தலை காட்டியிருக்கலாம். அந்தப் போராட்டங்களை அங்குள்ளவர்கள் நடத்திய பொழுது ஒரு சில நாட்கள் வெறும் நபர்களாக இவர்கள் கலந்து கொண்டார்களே தவிர அதை இவர்கள் நடத்தவில்லை. இவர்கள் புலத்தில் எதையும் செய்யவில்லை.

இதை யாரும் பிளவு என்று பார்க்கலாமா? இப்படியான இரண்டு பேர் பிரிந்திருக்கிறார்கள். நான் தினமும் தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியில் சென்று வருகிறேன். தமிழ் தேசியத்திற்கான மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் கேட்டார்கள் ஏன் இவர்களை விலக்கினீர்கள் என்று. அவர்களுக்கு தெளிவாகப் பதிலளித்திருக்கிறேன். 22 பேரில் சிலர் இப்படி பிரிந்து செல்வதை நீங்கள் பிளவு என்று குறிப்பிடாதீர்கள். மக்கள், கூட்டமைப்புடன் இருக்கிறார்களா என்பது எதிர்வரும் தேர்தலின் பின்னர், அந்த உண்மை தெளிவாக வெளியில் வரும். தமது சொந்த பிரச்சாரத்திற்காக பிளவுபட்டதாக சொல்கிறார்கள்.

அடுத்து தீர்வுத் திட்டம் குறித்துக் கேட்டிருந்தீர்கள். இது இறுதி நகல் அல்ல. ஆனால் அந்த தீர்வுத்திட்டத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் சில விடயங்கள் இதில் ஒத்துள்ளன. இந்தத் தீர்வுத் திட்டத்தை வாசிக்க கூடிய யாரும் சொல்லுங்கள், இது தமிழ் தேசியத்தை மறுதலிக்கிறதா? இது தமிழர் தாயகத்தை மறுதலிக்கிறதா? இது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கிறதா? என்பதை இதை வாசித்தவர்கள் சொல்ல வேண்டும். தமிழ் மக்களின் தேசியம், அவர்களின் தாயகம், அவர்களின் தன்னாட்சி உரிமை என்ற சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்தான் இந்தத் தீர்வுதிட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இராணுவ விடயங்களுடன் அரசியல் விடயங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் கையாண்டிருந்தார்கள். அதற்கு பிற்பாடுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதைக் கையாளத் தொடங்கியது. எங்கள் கையில் அப்பொழுதுதான் பொறுப்பு வந்தது. அதற்கு முன்பு நாங்கள் பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டங்களிலும் மனிதாபிமானப் பிரச்சினைகள், மனிதப் படுகொலைகள் என்று மனித உரிமை சார்ந்த விடயங்களை எடுத்துரைத்தோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு கொண்டுவரும் விடயங்கள் குறித்து பேசியிருந்தோம்.

விடுதலைப்புலிகள் ஒரு பலமான அமைப்பாக இருந்தார்கள். அவர்களை அழித்து விட்டார்கள். இன்று எங்களுக்கு இராணுவ பலம் இல்லை. பேரம் பேசுகிற ஆற்றல் இல்லை. மக்களை எப்படியான நிலைக்கு உள்ளாக்கியிருக்கின்றது என்றால் ஒருவரும் இல்லாமல், வேரோடும், வேரடி மண்ணோடும் இடம்பெயர்க்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு அந்த மக்கள் யாருடனும் பேசமுடியாமல், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் பார்க்க முடியாமல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக, வன்னி முழுக்க முழுக்க இராணுவ இடமாக்கப்பட்டிருக்கிறது. மக்கள் யாரும் இருக்கவில்லை. மக்களின் மனநிலைகளும், மனஉணர்வுகளும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி போகவேண்டும் என்பதும், கால்நடைகளுக்கு என்ன நடந்தது? வீட்டுக்கு என்ன நடந்தது? தங்கள் சொத்து, எதிர்காலம், வாழ்க்கை, பிள்ளைகள் என்ற நெருக்கடி மனஉணர்வு என்பது அவனவனுக்கு ஏற்படும் போதுதான் அதனை புரிந்து கொள்ள முடியும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பார்க்க மட்டும்தான் முடியும். வேதனையை அனுபவிக்க முடியாது. என்னுடைய வீடு அழிவடைந்தால்தான் எனக்கு அதன் வலி புரியும். எங்கள் எண்ணத்தின்படி அந்த மக்கள் குடியேற்றப்பட வேண்டும்.

எமது இனப்பிரச்சனைக்கான தீர்வு நோக்கியும் நாங்கள் போக வேண்டும். எங்கள் கைகளில் மக்களைக் குடியேற்றக் கூடிய அந்த அதிகாரம் இருக்குமென்றால் அந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கொழும்பிடம் கேட்டுக்கொண்டிருக்க தேவையில்லை. நாங்கள் வெளிநாடுகளுடன் பேசலாம். அல்லது வெளிநாட்டிலுள்ள தமிழ் மக்களுடன் பேசலாம்.

மூன்று இலட்சம் மக்கள் என்பது கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வரையான வீடுகளை உள்ளடக்கியது. இவற்றில் பெரும்பான்மையான வீடுகளுக்கு கூரைகள் மற்றும் கதவுகள் மாற்றினால் போதுமானது. சில வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டிருக்கும். ஆகவே இதனை பாகுபடுத்தி ஒவ்வொரு வீட்டிற்கும் எவ்வளவு வழங்குவது என்பதை சொல்வதற்கு எம்மிடம் அந்த அதிகாரம் இருக்க வேண்டும். இந்த அதிகாரம் இப்பொழுது கொழும்பிடம்தான் இருக்கிறது.

இந்த அதிகாரம் ஒரு தீர்வுக்கூடாகத்தான் எங்களிடம் வரலாம். அந்த தீர்வானது குறைந்த பட்சம் ஒரு இடைக்கால தீர்வாகவாவது இருக்கலாம். விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான தீர்வை முன்வைக்கும் பொழுது இனப்பிரச்சினை பற்றிய தீர்வுக்கு நீண்டகாலம் எடுக்கலாம், ஆனால் மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றார்கள்.

ஆகவேதான் மக்களை மீளக்குடியேற்ற, புனருத்தாரணம் செய்ய, அபிவிருத்தி வேலைகளைச் செய்ய, இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை என விடுதலைப்புலிகள் அதை முன் வைத்தார்கள். அன்று ஒரு இடைக்கால நிர்வாக சபை தேவையாக இருந்தது. அன்றைய மக்களின் பிரச்சினையை விட பத்து மடங்காக பிரச்சினைகள் இன்று கூடியிருக்கின்றன. இந்த நிலையில் குறைந்த பட்சம் அந்த அதிகாரங்களை கையிலெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டியதன் அடிப்படை- முதலாவது தமிழ் மக்களின் நிலமை. இதைக் கவனத்தில் எடுக்காமல் நாங்கள் தத்துவம் பேசிக்கொண்டிருக்க முடியாது. அதற்காக எதனையும் நாங்கள் விட்டுக்கொடுத்து அந்த தீர்வுத்திட்டத்தை கொண்டு வர முடியாது. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையை வைத்துக்கொண்டு, அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுகின்றதோ என்னவோ, முதலில் அதற்கு சர்வதேச ஆதரவை திரட்ட வேண்டும்.

சர்வதேச சமூகம் இன்றுவரை தனிநாடு என்ற தீர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை நாங்கள் கேட்கிற பொழுது நிறைய நாடுகள் அதற்கு ஒத்துழைக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. உதாரணமாக சமஷ்டி அமைப்பு முறை. அது அமெரிக்காவில் இருக்கிறது. அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ளது. இந்தியாவில் அரைகுறை நிலையில் உள்ளது.

நாங்கள் சமஷ்டி முறையிலான தீர்வை முன்வைக்கும் பொழுது அதை யாரும் பிழை என்று குறிப்பிட முடியாது. அப்படியென்றால் அவர்களது நாட்டில் அது இருக்க முடியாது. அரசாங்கம் அதை தர மறுத்தால் அதன்மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும். நிர்ப்பந்திக்கப்படும். நாங்கள் தனி நாட்டுக்கு குறைவான ஒரு விடயத்தைதான் கேட்கிறோம். ஏற்கனவே விடுதலைப் புலிகள் பேசிய விடயங்களை எல்லாம் கவனத்தில் எடுத்து, 2005 இல் சந்திரிகா முன் வைத்த அறிக்கை. ஒஸ்லோவில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட உடன்பாடு. இதை பிரபாகரன் எற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னாலும் அதற்கு முன் வந்த மூன்று மாவீரர் தின உரைகளில் அவர் இதைப்பற்றி பேசி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அந்த அடிப்படையிலேதான் இந்த தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்வுத்திட்டம் என்பது தீர்வை நோக்கி நாங்கள் இராணுவ ரீதியான ஆற்றல் எதுவும் இல்லாமல், பேரம் பேசக்கூடிய சக்தி எதுவும் இல்லாமல், முழு மக்களும் வீதியில் கொண்டு வந்து அடைக்கப்பட்ட சூழலில் சர்வதேச ஆதரவுகளை எடுக்க கூடிய வழிமுறைகள் ஆராயப்பட்டுத்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சில வரிகளை மட்டும் வைத்துக்கொண்டு இது பற்றி பேச முடியாது. இந்தத் தீர்வுத் திட்டம் ஏன் வந்தது. எப்படியான காலத்தில் வந்தது. இவை எல்லாம் கவனத்தில் எடுத்தால்தான் அதற்கான கருத்தை ஒழுங்கான முறையில் கொடுக்க முடியும். கருப்பு வெள்ளைத் தாளில் வரும் பிரதிக்கு யாரும் வியாக்கியானம் சொல்லலாம். யாரும் தத்துவ விளக்கங்கள் சொல்லலாம். யாரும் சரி என்று சொல்லலாம். யாரும் பிழை என்று சொல்லலாம். அது அவர்களது ஜனநாயக உரிமை மாத்திரமல்ல. அதை விளக்கத்திற்கும் உட்படுத்தலாம். உண்மையில் அது அந்த கால கட்டத்துடனும் தேவைகளுடனும் இதைப் பொருத்தி பார்க்க வேண்டும்.

தீபச்செல்வன்:

உங்களுக்குள் ஏற்பட்ட பிளவு அல்லது முரண்பாட்டுக்கு வேறு என்ன காரணம் இருக்கிறது? அவர்கள் விலகினார்களா? அல்லது விலக்கப்பட்டார்களா?


சுரேஷ் பிரேமச்சந்திரன்:

அதை முரண்பாடு என்று சொல்ல முடியாது. அதைப் பற்றி அவருடன் மணித்தியாலக் கணக்காக உரையாடியிருக்கிறோம். நாங்கள் அடிப்படையில் எதையும் விட்டுக் கொடுத்ததாக இல்லை. நாங்கள் விட்டுக்கொடுத்திருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். அதை நாங்கள் தொடர்ச்சியான விவாதத்திற்கு உட்படுத்தலாம். எங்களுடைய நிலைப்பாட்டையும் அவர்களுடைய நிலைப்பாட்டையும் விவாதத்திற்கு உள்ளாக்கலாம். அதற்கு மேலாக அவர்கள் சில சட்டத்தரணிகளை அழைத்துக் கொண்டு வந்தார்கள். ஒரு பொது இணக்கப்பாட்டை காண்பதற்காகவும் கூட்டை உடைக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த தீர்வுத் திட்டத்தை கூட நாங்கள் கைவிடுவதாக சொல்லியிருந்தோம்.

தேர்தலிற்கு பிற்பாடு எல்லோருடைய இணக்கப்பாட்டுடன் தீர்வுத்திட்டம் தயாரிக்க வேண்டும் என்றார். தனக்கு இணக்கப்பாடு இல்லை என்று கூறிவிட்டு லண்டன் போய்விடுவார். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இது ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதுபோல. அப்படியொரு அதிகாரத்தை அவருக்கு தர முடியாது என்று நாங்கள் கூறினோம்.

எந்த விடயத்திலும் பெரும்பான்மை முடிவுகளை அங்கீகரிக்கப் பழக வேண்டும். நாங்கள் இயன்ற வரையில் ஏகமனதாக இணக்கப்பாடுகளை உருவாக்குவது சரி. விட்டுக் கொடுப்புக்கள் செய்யாமல் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் செய்ய முடியாது. இதைத்தான் அவருக்கு நாங்கள் சொன்னோம். அதை ஏற்றுக்கொண்டு எழுத்து மூலமாக புதிய தீர்வுத் திட்டம் ஒன்றை அடுத்த தேர்தலில் பின்னர் புதிய உறுப்பினர்களுடன் தயாரிக்கலாம் என்று கூறியிருந்தோம்.

அவரை நாங்கள் வெளியேற்றவில்லை. அவருக்கு வீட்டோ அதிகாரத்தை கொடுக்கவில்லை என்பதற்காக அவர் தானாக வெளியேறினார். இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்புதான் லண்டனிலிருந்து வந்தார். வந்தவுடன் விலத்திப் போவதற்கான சந்தர்ப்பத்தை பார்த்தாரே தவிர கூட்டமைப்பில் வேலை செய்வதற்கான சந்தர்ப்பத்தை பார்க்கவில்லை.

தீபச்செல்வன்:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. உங்களது நிகழ்ச்சி நிரல் என்ன?

சுரேஷ் பிரேமச்சந்திரன்:

நூற்றுக்கு நூறு வீதம் இது பிழையான கருத்து. பதினெட்டு வருடத்திற்கு பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு இணங்கத்தான் நாங்கள் டெல்லியை சந்தித்தோம். இந்திய பிரதமருடன் ஒரு சுற்றுப் பேச்சு வார்த்தையை நடத்தினோம். இந்த விஜயம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லியுடன் நெருக்கமான உறவை பேண வேண்டும் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் விருப்பமாக இருந்தது. அதற்கு ஏற்ப டெல்லியுடன் பேசுமாறு எங்களுக்கு சொல்லப்பட்டது. அதனால் நாங்கள் தொடர்ந்து பேசி வந்தோம்.

டெல்லிக்கு இலங்கை தொடர்பாகவோ, தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவோ, ஈழத் தமிழர் தொடர்பாகவோ வேறுபட்ட நிகழ்ச்சி நிரல் இருக்கலாம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் பேரம் பேசும் ஆற்றல். தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் இல்லாமல் போகும் என்றால் எங்களுக்கு பேரம் பேசும் ஆற்றல் இல்லை. ஆகவே இராணுவ பலத்தை வைத்திருக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரே கருத்தைதான் கொண்டிருந்தது.

ஓவ்வொரு முறையும் பேசும் பொழுது விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள். அவர்களை ஜனநாயகப் பாதைக்கு கொண்டு வர முடியும் என்று எடுத்துச் சொன்னோம். புலிகளின் அழிவுக்கு, இலங்கை அரசுகூட சொல்கிறது இந்தியாவின் ஒப்புதலுடன்தான் யுத்தம் புரிந்தாக சொல்கிறது. இந்தியாவின் அனுசரணை இல்லாமல் இலங்கை இந்த யுத்தத்தில் வென்றிருக்க முடியாது. அதை இலங்கை ஜனாதிபதியும் சொல்கிறார்.

தங்களைப் பற்றி மோசமான கருத்தை தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது இந்தியாவுக்கு தெரியும். எங்களுக்கு ஒரு தீர்வு தேவை என்றால் யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் இந்தியாவின் பங்களிப்பு வந்தேயாகும். தனது நாட்டுக்கு குந்தகமான தீர்வென்றால் இந்தியாவுக்கு அதைக் குழப்பக் கூடிய வல்லமையும் உண்டு. அதுதான் இலங்கைக்கும் பிடிக்கும்.

அண்மைக்காலமாக இந்தியா எங்களுடைய எதிர் சக்தியாக நடவடிக்கைகளில் இறங்கயிருந்தாலும் எங்களுடைய நட்பு சக்தியாக அதை மாற்ற வேண்டும். அவர்களை வைத்துக்கொண்டுதான் இலங்கை அரசாங்கம் இந்த யுத்தத்தை நடத்தி முடித்திருக்கிறது. அதே இந்தியாவைத்தான், இந்திய இராணுவம் வருவதற்கு முன்பாக, ஐக்கிய நாடுகள் சபையிலும் வேறு பல இடங்களிலும் இலங்கையில் இன அழிப்பு நடக்கிறது என்று இந்திரா காந்தி பேச வைத்திருந்தார்.

இலங்கை இனப் பிரச்சினையை உலகம் முழுக்க கொண்டு போக இந்தியா பெரிய பங்கு வகித்தது. ராஜிவ் காந்தியின் கொலைக்கு பிறகு அதில் பெரிய மாற்றங்கள் வந்திருந்தன. பின்னர் இலங்கை அரசுக்கு சார்பாக இந்தியா மாறியிருந்தது. இலங்கை அரசாங்கம் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது. இந்த யுத்தத்தில்கூட இலங்கைக்கு சார்பாக இந்தியா நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

ஆனால் இன்று இனப் பிரச்சனைக்குரிய தீர்வை காண்பதில் இந்தியாவை நட்பு சக்தியாக்க வேண்டிய தேவையுள்ளது. உலகத்தில் இன்று எங்கு பேசினாலும் அமெரிக்காவுடன் பேசினாலும் நோர்வேயுடன் பேசினாலும் அவர்கள் இந்தியாவுடன் பேசுங்கள் என்றே சொல்லுகிறார்கள். அவர்கள் 90 வீதமான பங்கை வகிக்கின்றார்கள். இந்தியாவிற்கு பின்னால் நாம் நிற்போம் என்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவுடன் பேசக் கூடாது இந்தியாவுக்கு கிட்ட போகக்கூடாது என்றால் இந்த பிரச்சினைக்கு வேறு என்னதான் வழி?

இலங்கையிலிருந்து 18 கிலோ மீற்றர் தூரத்தில்தான் இந்தியா இருக்கிறது. இலங்கையில் நடக்கக்கூடிய விடயங்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். இந்தியாவின் பொருளாதார நலன்களுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். இன்று பருத்தித்துறையில் வீதிகளை திருத்த சீன அரசு வந்திருக்கிறது. இந்தியா இன்று சொல்லுகிறது, யாழ்ப்பாணத்தில் தான் ஒரு துணைத் தூதுவராலயம் போடப் போவதாக. அவர்கள் தமிழ் மக்களுக்கு விசாக் கொடுக்கும் ஆசையிலா திறக்கிறார்கள்?

இங்கு சீனாக்காரர்கள் வந்து விட்டார்கள். அவர்களை கண்காணிக்க அவர்களுக்கு ஒரு அலுவலகம் தேவைப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் துணைத் தூதுவராலயம் அமைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் போடத்தான் போகிறார்கள். எங்களைக் கேட்டா போடப் போகிறார்கள்.

இதனால் அவர்களை எங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வர வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நிகழ்ச்சி நிரலுக்குள் அவர்களை கொண்டு வர வேண்டும். எங்களது அடிப்படை விடயங்களை விட்டுக்கொடுக்காமல் அவர்களை அந்த தீர்வுக்கு கொண்டு வரப் பார்க்கலாம். இந்தியாவுடன் பேசுவதால் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் போவதா? இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதால் அவரது நிகழ்ச்சி நிரலுக்குள் போவதா? அது ஒரு சிறு பிள்ளைத்தனமான கருத்து அதில் எந்தவித அர்த்தமும் இல்லை.

தீபச்செல்வன்:

கடந்த காலத்தில் அரச தரப்பை குற்றம் சாட்டி அவர்களிடமிருந்து வாக்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற வகையில் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றன. கூட்டமைப்புக்குள் இருந்தவர்களின் மீதே சேறு பூசும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழ் மக்களை பொறுத்த வரையில் இது மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என்றே நான் நினைக்கிறேன். இந்த நிலை உங்களுக்கு எப்படியுள்ளது.

சுரேஷ் பிரேமச்சந்திரன்:

நீங்கள் குறிப்பிடும் விடயம் நிச்சயமாக நடைபெறுகிறது. அரசாங்கத்திற்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வது. அது முடிந்து விட்டது. இப்பொழுது இரண்டாவது பிரச்சினை இருக்கிறது. தமிழ் மக்களுக்காக பேசக் கூடிய ஆற்றல் யாருக்கு உண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரமே. தமிழ் தேசியக் கூட்டமைப்பை சின்னாபின்னப்படுத்த வேண்டும், சிதறடிக்க வேண்டும், தமிழ் மக்கள் மத்தியில் அதற்குள்ள மரியாதையை இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அரசாங்கம் விரும்புகிற விடயம். இந்த விடயத்தை நிறைவேற்றுவது யார்? ஒன்று இந்த தேர்;தலை பயன்படுத்தும் சுயேச்சை குழுக்கள் என்று நிறைய வந்துள்ளன. அத்துடன் ஆளும் கட்சி இருக்கின்றது. ஆளும் கட்சிக்கு சாதகமான சுயேச்சை கட்சிகள் இருக்கின்றன. எங்களில் இருந்து பிரிந்து சென்றவர்களும் அதே காரியத்தைதான் செய்கிறார்கள்.

திருகோணமலையிலிருந்து சம்பந்தரை தோற்கடிக்க வேண்டும். யாழ்பாணத்தில் சுரேஸையும் மாவையையும் தோற்கடிக்க வேண்டும் என்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து அரசு சார்பாக போனாலும்கூட யாராவது தமிழர்கள்தான் போக வேண்டும். ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் ஒரே ஒரு ஆசனம்தான் தமிழர்களுக்கு கிடைக்கும். கொஞ்ச வாக்கு அதிகமாக கிடைத்தால் ஒரு போனஸ் ஆசனம் கிடைக்கும். அங்கு ஒரே ஒரு தமிழ் பிரதிநிதிதான் வரப் போகிறார். அங்கு தமிழ் பிரதிநிதி வராவிட்டால் அங்கு சிங்களப் பிரதிநிதிதான் வரப்போகிறார். அப்படியானால் அங்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமே இல்லாமல் போய்விடும்.

வடகிழக்கின் தலை நகரமாக கருதும் திருகோணமலையில் இருக்கும் ஒரு ஆசனத்தை இழக்கும் நிலமையை எங்களில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு தேசியத்தைப் பற்றி என்ன தெரியும்? அல்லது வடகிழக்கு இணைப்பைப் பற்றி என்ன தெரியும்? நீங்கள் தாயகம் என்று எதைக் கூறுகிறீர்கள்? இது எல்லாவற்றுக்குமான சுயநிர்ணய உரிமை பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?

இது வெறும் சேறடிப்பு மாத்திரமல்ல. அரசாங்கம் சம்பந்தரை அரசியலில் இருந்து இல்லாமல் செய்ய விரும்புகிறது. இதனால் தமிழ் தேசிய தலமையை முற்று முழுதாக அழித்து விடலாம் என்று அரசாங்கம் நினைக்கிறது. அந்த விருப்பத்தை இன்று ஈடேற்றுவது யார்? எங்களில் இருந்து பிரிந்து சென்ற கஜேந்;திரகுமார் பொன்னம்பலம். அவர்தான் சம்பந்தர் தோற்கடிக்கப்பட வேண்டும் என நூற்றுக்கு நூறு வீதம் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

சம்பந்தர் தமிழ் தேசியத்தை கைவிட்டவர் என்ற அவருடைய வாதம் முதலில் பிழையானது என்பதற்கு அப்பால் வடக்கையும் கிழக்கையும் இணைக்கிற தலைநகர் திருகோணமலையின் பிரதிநிதித்துவத்தையே இல்லாமல் செய்ய வேண்டும் என சொல்லக் கூடிய ஒருவர் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கப் போகிறேன் என்று சொன்னால் எப்படி சரியாக இருக்கும்? இது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? அவர் தெரிந்தோ தெரியாமலோ அரசாங்கத்தினுடைய அந்த நிகழ்ச்சி நிரலுக்குள் ஆட்பட்டிருக்கிறார். இது சேறுபூசுதல் என்பதற்கப்பால் தமிழ் தேசியத்தை அழிக்கிற வேலையைதான் செய்கிறது.

தீபச்செல்வன்:

கடந்த காலத்தில் தமிழ் கட்சிகள் ஒன்று பட வேண்டும் என்பதை பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் வலியுறுத்தி வந்தார்கள். தமிழ் காங்கிரஸ் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் கூட்டமைப்பின் தலைவர் முதலியவர்கள் பிரிந்து சென்றவர்கள் வந்து இணைய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்கள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறர்கள்?

சுரேஷ் பிரேமச்சந்திரன்:

நிச்சயமாக, என்னைப் பொறுத்தவரை அடிப்படையில் முரண்பாடு என்பது பிழையானது. அவர்கள் தாங்கள் அறிந்த வகையில் தமது கருத்துக்களை கூறுகின்றார்கள். எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதற்காக சித்தார்தனைக்கூட நாங்கள் இணைத்துக் கொள்ள விரும்பினோம். சித்தார்த்தன் கடைசி வரை பார்க்கலாம் பார்க்கலாம் என கூறியிருந்தார். கடைசியில் அவர் வரவில்லை. ஆனந்தசங்கரியுடனும் பேசினோம். அவர் தனக்கு யாழ்ப்பாணத்தில் ஆறு ஆசனம் கேட்டார். அதனால்தான் எங்களுக்கு அவருடன் ஓர் இணக்கப்பாட்டிற்கு வர முடியவில்லை. நாங்கள் எல்லோருமே ஒர் அணியில் வருவதற்கான முயற்சியை மேற் கொண்டோம். அந்த வகையில் கஜேந்திரகுமாரை மீண்டும் வந்து இணைய நாங்கள் அழைப்பு விடுகிறோம்.

தீபச்செல்வன்:

தொடக்க காலத்தில் சாத்வீகப் போராட்டம் பிறகு ஆயுதப் போராட்டம் தற்பொழுது அரசியல் ரீதியான ஒரு போராட்டமென தமிழ் மக்களுக்கு முன்னால் விரிந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதை எப்படி கையாளுகிறது? தமிழ் மக்களை இதற்காக எப்படி அணி திரட்ட முடியும்?

சுரேஷ் பிரேமச்சந்திரன்:

ஆயுதப் போராட்டத்தையோ சாத்வீகபோராட்டத்தையோ நடத்த முயலும் பொழுது மக்களுடைய மன உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பயந்து போயிருக்கிறார்கள். மக்கள் சுட்டு வீதிகளில் வீசப்பட்ட, இராணுவ ஆட்சிக்குள்தான் இன்னும் இருக்கிறார்கள். மக்களுக்கு முன்னாலும் பின்னாலும் இராணுவம்தான். மக்கள் கூட்டத்திற்கு வரப் பயப்பிடுகிறார்கள். மக்கள் வாக்களிக்க பயப்படுகிறார்;கள். இப்படியான நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். இந்த நிலமையில் எங்களுக்கு இருக்கும் பலம் என்னவென்றால் இனப்பிரச்சினை தீர்வுக்கு சர்வதேச ரீதியாக ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதுதான்.

அந்த சாதகமான சூழலை மையப்படுத்தி அதன் ஊடாக ஒரு தீர்வை நோக்கி போவது எப்படி? அப்படியான தீர்வை நோக்கி செல்லும் பொழுது இலங்கை அரசாங்கம் அதற்கு ஒத்து வராமல் இருக்குமாக இருந்தால் நிச்சயமாக சர்வதேச சமூகம் எங்கள் பக்கம் இருக்கும். சர்வதேச சமூகம் எங்களுடன் நிற்கும் அந்தக் கால கட்டத்தில் மக்களை திரட்டி தீர்வுத் திட்டத்தை கொண்டு வர சாத்வீகமான போராட்டத்தை நடத்த முடியும். அதற்கு முன்பாக மக்களுக்கு தைரியம் அளித்து அவர்களை மீளக் குடியேற்றி அந்த மக்கள் தங்கள் கால்களில் நிற்கும் ஒரு நிலை வந்தால்தான் மக்கள் சிந்திப்பதற்கான சூழல் தோன்றும்.

சுற்றி வர இராணுவம். வெளியில் போவதற்கும் மலசலம் கழிப்பதற்கும் வழியில்லாமல் வேறு விடயங்களை பேச முடியாது. அந்த மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வு வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். தொழிலை தொடங்க வேண்டும். எங்கள் சனம் பிச்சைக்காரராக இருந்த சமூகம் அல்ல. இன்று மிக மோசமான பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். அந்த வழி முறையில் போனால்தான் நிச்சயமாக இந்த பேராட்டத்தை கொண்டு செல்ல முடியும்.

தட்டச்சில் உதவி: காந்தீபன்

நன்றி : பொங்குதமிழ்

Friday, April 9, 2010

பயமும் அச்சமும் இயலாமையும் நிறைந்த காலம் - துவாரகன்

ஈழத்தின் போர்க்கால கவிஞர்களில் ஒருவரான துவாரகன் ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றைச் சேர்ந்தவர். ஈழத்தில் ஏற்பட்ட போர் வன்முறை இராணுவ ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் என்பவற்றின் தாக்கங்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவரது கவிதைகள் இயல்பு பற்றிய கனவை அவாவிக் கொண்டிருப்பவை. நளினமும் நகைச்சுவையும் மிஞ்சிய மொழியும் புதிய வகையிலான சொல்லாடல் முறையும் என்று இவரது கவிதைகள் ஈழ போர்க்கால கவிதைகளில் கவனம் பெறுகின்றன. யாழ்ப்பாணத்தின் இருள் படிந்த காலத்தை அச்சம் மரணம் என்பன ஆளுகை செய்த நாட்களை அவரது கவிதைகள் பாடியிருப்பதுவே இவரது கவிதைகளின் தனித்த அடையாளமாக தெரிகிறது. யாழ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர் தற்பொழுது வன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் இவரை உன்னதம் இதழுக்காக சந்தித்து இந்த நேர்காணலைச் செய்திருந்தேன்.
தீபச்செல்வன் :

உங்களுடைய கவிதைகளின் தனித்த கவனத்தைப் பெறுபவை யாழ்ப்பாணத்தின் இருள் படிந்த அச்சமான மரணங்கள் நிறைந்த காலம் பற்றிய கவிதைகள்தான் என நினைக்கிறேன். அந்த நாட்களின் வாழ்வை உங்கள் கவிதைகளில் முழுமையாக பதிவு செய்திருக்கிறீர்களா? அந்த நாட்களில் உங்களுடன் இந்தப் பணியை செய்தவர்களை குறிப்பிடுங்கள்?

துவாரகன் :
யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு கிழக்கின் ஏனைய பிரதேசம் மற்றும் எமது மக்கள் செறிந்து வாழும் தென்னிலங்கையுடன் எந்தத் தொடர்புகளும் இல்லாமல் யாழ்ப்பாணம் முழுமையாக மூடுகைக்கு உட்பட்டிருந்த காலங்களில் பல கவிதைகளை எழுதியிருந்தேன். ஆனாலும் சிலவற்றைத்தான் பிரசுர வடிவில் கொண்டுவர முடிந்தது. கவிதைகளை எழுதினாலும் பிரசுரச்சூழல் சாத்தியமின்மை மற்றும் எல்லோருக்குமே உயிர் அச்சுறுத்தல் இருந்த காலம் அது. தினம் தினம் ஆயுதங்கள் மக்களை வேட்டையாடி அலைந்த காலம். அதனால் எழுதவேண்டிய இன்னும் பலவற்றை எழுத முடியவில்லை. ஓரளவு பிரசுரச் சாத்தியத்தை ஏற்படுத்திய கலைமுகம், தாயகம், ஆகிய யாழ்குடாநாட்டு சஞ்சிகைகளிலும் இணைய சஞ்சிகைகளிலும் தொடர்ந்து எழுத முடிந்தது.

பயமும் அச்சமும் இயலாமையும் நிறைந்த காலம் அது. நண்பர்களுடன் கதைக்கும்போது எழுதிய பல கவிதைகளைப் பற்றி பிரதியில்லாமலே கவிதையாகச் சொல்வதுண்டு. கவிதைகளை எழுதிய அந்த வேகம் தணிவதற்கு முன்னரே நானே கிழித்தும் எறிந்திருக்கிறேன். பிரசுரமான பல கவிதைகளால் வீட்டாரிடமே ஏச்சு வாங்கியும் இருக்கிறேன். கலைமுகத்தில் வெளிவந்த கவிதைகள் அந்தக் காலகட்டத்தின் உக்கிரத்தை வெளிக்கொண்டு வருவதாக நண்பர்கள் குறிப்பிடுவார்கள். எனது ‘கோழி இறகும் காகங்களும்> பல் நா சுவையறியாது> புணர்ச்சி> மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்> எல்லாமே இயல்பாயுள்ளன> மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்> குப்பைமேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறி நாய் பற்றிய சித்திரம்> இது போன்ற பல கவிதைகளில் அந்தக் காலத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.

இன்னும் செய்திருக்க வேண்டும். ஆனால் மரணம் முன்னால் வந்து எல்லோரையும் காரணமில்லாமே அச்சுறுத்திக் கொண்டிருந்ததால் ஓரளவுதான் எழுத முடிந்திருக்கிறது.

அப்போததைய காலகட்டத்தை கவிதை வடிவமாகப் பதிவு செய்தவை மிகக் குறைவு என்றே நினைக்கிறேன். பதிவு செய்தவர்களுள் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் ஹரிகரசர்மா ‘யாழ்;ப்பாண நாட்குறிப்பு’ என்ற தலைப்பில் முரண்வெளி வலைப்பதிவில் தொடராக அக்கால இருண்ட வாழ்வை எழுதியிருந்தார். இராகவன் சில புனைவுகளில் அவற்றை வெளிக் கொண்டு வந்துள்ளார். தவிரவும் சித்தாந்தன்> ந. சத்தியபாலன்> அஜந்தகுமார்> வேறு கவிஞர்களும் எழுதியிருந்தார்கள். பிரசுரவாய்ப்பு> மற்றும் தணிக்கை நிலையில் பத்திரிகையாளர்கள் அதிக கவனம் செலுத்தியதால் பிரசுரமான பல படைப்புக்களும் உயிர் வேறு உடல் வேறு போலத்தான் வெளிவந்தன.

தீபச்செல்வன் :
ஈழத்து கவிதைகளின் தனியான அடையாளம் என்பது போரும் வாழ்வும் அதன் தவிப்பு நிலைகளும் எதிர் வினைகளும் விமர்சனங்களும் என்று விரிகின்றன? ஈழத்து கவிதைகள் தட்டையானவை என்று குறிப்பிடும் ஜெயமோகன் போன்றவர்களது கருத்தை போர்ச் சூழல் அதன் அழுத்தங்களில் வாழ்ந்து கொண்டு இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

துவாரகன் :
ஈழத்துக் கவிதைகளை அப்படி தட்டையானவை என்று கூறி சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது. 80 களில் இருந்து ஈழக்கவிதைகள் போருக்குள் இணைந்த வாழ்வை துயரத்துடன் வெளிப்படுத்துகின்றன. அதுவே எங்கள் மக்களின் தலைவிதியாகிப் போனதால் ஈழக்கவிஞர்களிடம் கவிதைகள் அவர்களின் உண்மையான வாழ்வனுபவத்தினூடாகவே வருகின்றன.

சிலவேளை தமிழகத்திலோ புலம்பெயர் தேசங்களிலோ இருந்து கொண்டு அந்த அனுபவம் இல்லாமல் கேள்வி ஞானத்துடன் கவிதை செய்பவர்களின் படைப்புக்கள் தட்டையானவையாக இருக்கலாம். உண்மையான படைப்பு எப்போதும் காலம் கடந்தும் வாழக்கூடியதே. சேரன், ஜெயபாலன், இளவாலை விஜயேந்திரன், சோலைக்கிளி, பா. அகிலன் எஸ்போஸ், கருணாகரன் போன்றவர்களின் கவிதைகள் ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கையை மிக நுண்மையாகச் சொன்னவைதான். இன்று அவர்களின் கவிதைகளின் இயங்குதளம் வேறுபட்டிருந்தாலும் அந்தக் காலப்பதிவுகளை தட்டிக் கழிக்க முடியாதுதானே.

இங்கும் கவிதை செய்பவர்கள் இருக்கிறார்கள்தான். அவர்களின் படைப்புக்கள் தட்டையானவையா இருக்கின்றனதான். ஏன் தமிழகத்தில் இல்லையா? புகலிடத்தில் இல்லையா? ஆனால் நின்று நிலைக்கும் படைப்புக்களை நாம்தான் சாட்சியாக இனங்காணவேண்டும். எங்களுக்கு போருக்குள் வாழ்வது ஒரு வாழ்வாகிப் போனது. அந்த வாழ்வை ஒரு கவிதை வெளிப்படையாகச் சொன்னாலும் அது எங்கள் மக்களின் இரத்த சாட்சியங்களாக வருகின்றன. சேரனின் ‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ இன்றும் ஒரு சாட்சியாக இல்லையா? எனவேதான் ஈழக்கவிதைகள் தட்டையானவை என்று கூறுபவர்களின் கூற்றை முற்றுமுழுதாக ஏற்க முடியாது.

தீபச்செல்வன் :

ஈழத்தில் சமகாலத்தில் கவிதைகள் எழுதி வருபவர் என்ற அடிப்படையில் தற்காலத்து கவிதைகளின் எழுச்சிகள், நிலமைகள், போக்குகள் எவ்வாறிருக்கின்றன? ஈழத்து வாழ்வைப் பதிவு செய்வதில் அவை முழுமை பெறுகின்றனவா?

துவாரகன் :
தற்கால வாழ்வை பலர் எழுதி வருகிறார்கள். ஆனால் எழுதும் வேகம் போதாது என்று நினைக்கிறேன். காலம் நேரம் புரியாமல் இன்றும் சீசன் கவிதை எழுதுபவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் பலர் காத்திரமாகச் செயற்படுகிறார்கள்.

தீபச்செல்வனின் கவிதைகள் கடந்த ஐந்தாறு வருட நெருக்கடிக் காலத்திலிருந்த மக்களின் துயர்கள் குறித்துப் பேசுவதுபோல் இளங்கவிஞர்களில் யாரும் அதிகமாக எழுதவில்லை. அவரின் இரண்டு தொகுப்புக்கள் கூட வந்திருக்கின்றன.

தற்கால வாழ்வு பற்றி எழுதுபவர்களுள் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் நா. சத்தியபாலன், தா. ஜெயசீலன், இயல்வாணன், சித்தாந்தன், யாத்திரிகன், தானா விஷ்ணு, அஐந்தகுமார், தேஜஸ்வினி, மருதம் கேதீஸ், பெரிய ஐங்கரன், போன்ற இன்னும் பலர் எழுதுகிறார்கள். புதியவர்களுள் தபின், வேல் நந்தன், சுதர்சன், ஆகியோரும் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறார்கள்.

சமகாலக் கவிதைகளில் எழுச்சிகள் என்று கூறமுடியாது. மக்களின் வீழ்ந்த வாழ்வு பற்றி மிக அமைதியாகவே பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனை நாங்கள் கூட்டம் போட்டு சுவரொட்டி ஒட்டிக் கொண்டாட முடியாது. ஏனென்றால் இன்னமும் பிரசுரச் சூழல் அச்சம் தரும் நிலையிலேயே உள்ளது. அதனால்தான் எழுத வேண்டிய பலர் மெளனம் சாதித்து வருகிறார்கள்.
தீபச்செல்வன் :
தமிழகத்தில் உள்ள பல நண்பர்கள் என்னிடம் ஈழத்து இதழியற் சூழலைப் பற்றிக் கேட்பார்கள். ஒரு நல்ல இதழைக் கொண்டு வருவதில் தடைகள்இ அச்சுறுத்தல்கள் என்று பாரிய போராட்டங்கள் காணப்படுகின்றன? இன்றைய உலகச் சூழலுக்கு ஏற்ப வாழ்வை பேசும் பகிரும் பதிவு செய்யும் இதழ்கள் ஈழத்தில் வருகிறதா?

துவாரகன் :
ஈழத்தில் பல சஞ்சிகைகள் தொடர்ந்து வருகின்றன. சில காலம் தவறி வருகின்றன. இவற்றில் அவரவர் அரசியலுக்கு ஏற்ப விடயத்திலும் கவனஞ் செலுத்துகின்றன.

ஈழத்தில் தொடர்ந்து நாற்பதாண்டுகளாக வெளிவருகின்ற ‘மல்லிகை’யில் மூத்தவர்கள் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். ஆனால் நவீன இலக்கியப் புரிதல்களை ஏற்றுக் கொள்ளாமல் அது தொடர்ந்தும் ஒரே தடத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டுகிறது. ‘ஞானம்’ சஞ்சிகையில் நிரம்ப புதியவர்கள் எழுதுகிறார்கள். விவாதங்களுக்கு இடங்கொடுக்கிறது. ஆனால் அதிகமான சந்தர்ப்பங்களில் அந்த விவாதங்கள் மேலோட்டமான வாசகர் கடிதங்களாகவே அமைந்து விடுவதுதான் துரதிஷ்டமாக உள்ளது.

இதேபோல் தொடர்ந்து வெளிவருகின்ற இன்னொரு சஞ்சிகைதான் ‘ஜீவநதி’> இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது. ஞானம் மல்லிகையில் எழுதியவர்கள் தவிர புதியவர்களும் இதில் எழுதி வருகிறார்கள். இம்மூன்று சஞ்சிகைகளும் தொடர்ந்து மாதம் தவறாமல் தொடர்ச்சியாக வெளிவந்து ஈழச் சூழலுக்குத் தம்மாலான இலக்கியப் பணியைத் தொடர்கின்றன.

மற்றும் திருகோணமலையிலிருந்து ‘நீங்களும் எழுதலாம்’ என்ற கவிதை இதழ் வருகின்றது. ‘செங்கதிர்’ ‘படிகள்’ என்ற இதழ்களும் கிழக்கிலிருந்து வெளிவருகின்றன. யாழிலிருந்து காலம் தப்பியேனும் ‘தாயகம்’ தேசிய கலை இலக்கியப் பேரவையினால் வெளிக் கொண்டுவரப்படுகிறது.

இவை தவிர ‘கலைமுகம், அம்பலம்’ ஆகியன வெளிவருகி;ன்றன. இவ்விரண்டு சஞ்சிகைகளுடன் கிழக்கிலிருந்து ‘மறுகா’வும் வெளிவருகின்றது. இம்மூன்று சஞ்சிகைகளும் ஒரு விதத்தில் நவீன இலக்கியத்தின் வெளிகளைத் திறந்து விடுவதில் ஆர்வம் காட்டுகின்றன. இன்றைய உலகப் போக்குக்கு ஏற்ப வாழ்வைப் பேசும் படைப்புக்களை எதிர்பார்த்த அளவில் தராவிட்டாலும் அவற்றின் விடயதானங்கள் கவனத்திற் கொள்ளத்தக்கவையாக உள்ளன.

இவை தவிர வேறும் சில சஞ்சிகைகள் துறை சார்ந்து. நிறுவனம் சார்ந்து வெளிவருகின்றன. ஆனந்த விகடன் குமுதம் பாணியிலான வெகுஜன இதழ் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவற்றின் விற்பனை நிலையோ படுமோசமாகத்தான் இருக்கிறது. முன்னர் ‘வேடிக்கை’ என்றொரு இதழ் வந்தது. தற்போது ‘இருக்கிறம்’ என்ற இதழைக் கொண்டு வருகிறார்கள்.

இங்குள்ள இதழியற் சூழல் தமிழ்நாட்டைப் போன்றல்ல. அங்கு நிறுவனம் சார்ந்து பல சஞ்சிகைகள் பெரியளவு முதலீட்டுடன் இயங்குகின்றன. விநியோகம் மற்றும் எழுத்துத் துறை சார்ந்து அங்கு இயங்குபவர்கள் அதிகம்.

இன்னமும் ஈழப் படைப்பாளிகளின் படைப்புக்களில் ஒரு தொகுதியையோ அல்லது வெளிவருகின்ற சஞ்சிகைகளையோ அரசு சார்ந்து கொள்வனவு செய்வதிலே ஒர் ஒழுங்கான முறைமை இன்னமும் பேணப்படவில்லை. சில பெரிய நூலகங்கள் மாத்திரம் இலங்கையில் வெளிவரும் நூல்களை அல்லது சஞ்சிகைகளை வாங்குகி;ன்றன. இந்த நிலையில் இதழியற் சூழலும் அன்றிலிருந்து மந்த நிலையில்தான் உள்ளது.

தீபச்செல்வன் :

எழுத்துக்களை பிற சமூகத்துடன் பகிருவதில் பல்வேறு தொடர்புகளைச் செய்வதில் காலத்திற்கு ஏற்ற விரைவான பணிகளை செய்ய இணையங்கள் வலைப்பதிவுகள் எந்தளவு உதவுகின்றன? ஈழத்து எழுத்துக்களுக்கான உரையாடல்களை செய்ய அவை உதவுகின்றனவா?

துவாரகன் :
அண்மைக்காலங்களில் இணையம் மற்றும் வலைப்பதிவுகளின் ஊடான தொடர்புகள் படைப்பாளிகள் மத்தியில் பெருகி வருகின்றன. என்றாலும் தமிழகம் மற்றும் புகலிடத்தில் இவற்றுக்கூடான உரையாடல்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன. ஈழத்தைப் பொறுத்தவரையில் மிகச் சொற்பமாகத்தான் உள்ளது.

எங்களது எழுத்துக்களை ஏனைய சமூத்தினர் மத்தியில் கொண்டு செல்வதற்கு வேண்டுமானால் இந்தக் களத்தை நன்றாகப் பயன்படுத்த முடியும்.

மற்றும்படி இணைய வழித் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் எல்லாமே காத்திரமான ஆழமான உரையாடல்களுக்கு வழிவகுக்கின்றன என்று கூறமுடியாது. சிலர் பொழுதுபோக்குக்காக தாங்கள் அன்றாடம் நாட்குறிப்பு எழுதுவதைப்போல் மிகச் சாதாரணமாக எழுதுவதைக்கூட இணையத்தில் உலாவ விடுகின்றனர். மற்றும்படி பரபரப்புக்காகவும் பிரபல்யம் பெறவேண்டும் என்பதற்காகவும் சிலர் வருகின்றார்கள். இவையெல்லாவற்றையும் இலக்கியச்செயற்பாடு என்ற கணக்கில் எடுக்க முடியாது.

என்னதான் நிகழ்ந்தாலும் நூல்களுக்கும் சஞ்சிகைகளுக்கும் உள்ள பெறுமதியை இணையம் மற்றும் வலைப்பதிவுகளால் குறைத்துவிட முடியாது. அவற்றினூடாகவே மிக நீண்ட விவாதங்கள் செயற்பாடுகள் நிகழ்ந்துள்ளன.

புகலிடத்தில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழாpன் செயற்பாடுகள் அதிகமும்; இணைய வழியானதாக மாறிவிட்டதால் அவர்களுடன் ஏனையவர்கள் உரையாடுவதற்கு காலத்திற்கு ஏற்ற சாத்தியமான வழியாக அவை மாறிவிட்டன. என்னதான் இருந்தாலும் எல்லா உரையாடல்கள் மற்றும் படைப்புக்களும் நூல் வடிவம் பெற்றால்தான் அது சாதாரண மக்களையும் சென்று சேரக்கூடியதாக இருக்கும்.

தீபச்செல்வன் :

ஈழத்து மக்களின் வாழ்கை இப்பொழுது என்ன நிலையில் இருக்கிறது. பாரிய அழிவுகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்த அவர்கள் இன்றும் பல சூழ்ச்சிகளுக்கும் அதிகாரங்களுக்கும் இடையில் சிக்கி தவிக்கிறார்கள் என நினைக்கிறேன். இந்த மனிதர்களின் காலத்தையும் வழிகளையும் பற்றி குறிப்பிடுங்கள்?

துவாரகன் :
உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் காலத்திற்குக் காலம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் எங்கள் மக்களின் வாழ்வு மட்டும் மீண்டும் மீண்டும் பழைய நிலைகளுக்கே திரும்பி விடுகிறது. கிறிஸ் கம்பத்தில் ஏறுபவன் மீண்டும் வழுக்கிக் கீழே வந்து கொண்டிருக்கும் நிலைதான் அது. இவ்வளவும் இழந்த பின்னரும் இன்னமும் ஏமாற்றுபவர்களும் சூழ்ச்சிக்காரர்களும் இந்த மக்களைச் சுற்றிய வண்ணமே இருக்கிறார்கள். இதுதான் ஏன் என்று தொpயவில்லை. கடவுளால் சபிக்கப்பட்டவர்களின் வாழ்வுபோல் எல்லாமே நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது. பிள்ளைகளின் எதிர்காலம் என்பதோ எங்கள் மக்களின் வளர்;ச்;சி என்பதோ எந்த வகையில் என்பது தொpயவில்லை.

முதலாளித்துவமும் உலகமயமாக்கலும் எங்களிடம் இருக்கும் சொற்ப அடையாளங்களையும் அடித்துச் சென்று கொண்டிருக்கின்றன. எதிர்காலம் என்பதே கேள்விக் குறியாகத்தான் உள்ளது இனங்களுக்கிடையில் சாpயான புரிந்துணர்வு ஏற்பட்டால் ஓரளவு சாத்தியமான வாழ்வுக்கு இடம் இருக்கும் என்று நினைக்கிறேன். தவிரவும் எரியிற வீட்டில் பிடுங்குபவர்கள்போலத்தான் நாம் சந்திக்கும் எல்லோருமே இருக்கிறார்கள்.

தீபச்செல்வன் :

வன்னியில் மீள்குடியேற்றம் செய்ய பகுதியில் ஆசிரியராக பணியாற்றுகிறீர்;கள். வாரத்தில் 5 நாட்கள் அங்குதான் தற்பொழுது தங்கியிருக்கிறீர்கள். அந்த மாணவர்களின்இ மக்களின் மனநிலைகள் எப்படி உள்ளன? அவர்கள் எப்படியான வாழ்வை அங்கு தொடங்கியிருக்கிறார்கள்?

துவாரகன் :
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் நாங்கள் பாடசாலைகளுக்குச் சென்றபோது எங்களுக்கு வெறும் கட்டடங்கள்தான் மிஞ்சியிருந்தன. சில இடங்களில் அவையும் இல்லை. ஓரிரண்டு வாரங்களிற்குள் தளபாடம் மற்றும் பாடநூல்கள், சீருடைகளைத் தருவித்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

இங்கு சாதாரணமாக வேலை செய்ய முடியாது. கொஞ்சம் அர்ப்பணிப்புடனும் பொறுமையுடனும்தான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாருமே எங்கள் பி;ள்ளைகள். அவர்கள் இழந்தவை அதிகம். அவர்களி;ன் வாயிலிருந்து வரும் கதைகளை அவர்களின் அனுபவங்களை பொறுமையுடன் கேட்க வேண்டியிருக்கிறது. பிள்ளைகளைப் படிக்கும் நிலைக்குக் கொண்டு வருவதற்கு பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. மீளவும் எல்லா வகையிலான கற்றல் கற்பித்தல் முறைகளையும் மீட்டவேண்டியிருக்கிறது.

அதிகாரத்தையும் அடக்குமுறையையைும் இங்கு நிர்வாகம் சார்ந்த நிலையில் கூட நினைத்துப் பார்க்கமுடியாது. கொஞ்சம் எல்லா நிலைைகளிலும் விட்டுக் கொடுப்பு, சமூகப் பெறுமானம் குறித்து சிந்தித்தே காரியம் செய்ய வேண்டியுள்ளது. வேறு பிரதேசத்தில் கற்கும் மாணவர்களுக்குரிய எல்லா அளவுகோல்களையும் இந்தப் பிள்ளைகளிடம் செயற்படுத்த முடியாது. வழிப்படுத்தல், வளப்படுத்தல் இரண்டுமே மிக அவசியமாக உள்ளது.

போக்குவரத்துப் பிரச்சனை, குடிநீர். இருப்பிடம், எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தித்தருகிறார்கள்.

மனிதாபிமானம் இன்னமும் செத்துவிடவில்லை என்பதற்கு சாட்சியாக மக்கள் தங்களுக்குள் உதவி வருகிறார்கள். சில இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸ்படையினரும் மக்களின் வாழ்விடங்களைத் துப்பரவு செய்து கொடுத்து வருகிறார்கள். நான் வேலைசெய்யும் பிரதேசத்தில் பாடசாலை வளவுகளை துப்பரவு செய்து கொடுப்பது முதல் மீள் பணிகளில் பலர் இணைந்து செயற்படுகிறார்கள். இவை கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் பின்னால் ஓரு அரசியல் இருப்பதுதான் மீளவும் அச்சத்தைத் தருவதாக உள்ளது.

தீபச்செல்வன் :

இன்றைய ஈழத்து அரசியல் சூழலில் தமிழ் கட்சிகளது உள் மோதல்கள் பல வகையில் தீவிரம் பெற்று வருகின்றன. இங்கு தமிழ் மக்களது உயிர்க் கனவையும் மீள் வாழ்வையும் குறித்து அவர்களில் யார் பேசுகிறார்கள்? ஈழத் தமிழ் அரசியலில் எத்தகைய சூழல் தேவைப்படுகிறது?

துவாரகன் :
உடைந்து போன கட்டிடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் தேர்தல் பிரசார சுவரொட்டிகளையும் கூடாரங்களுக்கு அருகில் விநியோகிக்கப்படும் பிரசுரங்களையும் பார்க்கும்போது கோபம்தான் வருகிறது. உள்மோதல்கள் இன்று நேற்று வந்தவையல்ல. துரதிஷ்டமாக அதற்கு எங்களிடம் நீண்ட வரலாறே இருக்கிறது. இன்னமும் இவர்கள் மக்களுக்காக சிந்தித்து ஒற்றுமையாக செயற்படவில்லையானால் இவர்கள் எல்லோருமே புத்திசாலிகள் என்று கூறுவதிலோ நாங்கள் தமிழ்மக்கள் என்று கூறுவதிலோ எந்த அர்த்தமும் இருக்கப் போவதில்லை. எங்களுக்கு வேண்டுவதெல்லாம் எங்கள் வாழ்வுதான். அதற்கான சாத்தியமான வழிகள் குறித்துத்தான் யோசிக்க வேண்டும்.


தீபச்செல்வன் :

புலம்பெயர் இலக்கியத்தில் உங்களது கவனத்தை செலுத்தி வருகிறீர்கள். இதழ்கள் கவிதைகள் கதைகள் என்று பல வாசிப்புக்களை நிகழ்த்தியிருக்கிறீர்கள்? அந்த இலக்கிய சூழலையும் வாழ்வையும் பற்றிக் குறிப்பிடுங்கள்?

துவாரகன் :
ஈழத்தமிழாpன் புலம்பெயர்வு நிகழ்ந்து கால்நூற்றாண்டு கடந்து விட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தற்போது வாழ்ந்து வருகிறார்கள். பலர் இலக்கியத்தளத்தில் தம்மை இனங்காட்டியிருக்கிறார்கள். ஈழத்து வாழ்வு, புகலிட வாழ்வு, கலாசார முரண்பாடு குறித்தெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

150 ற்கு மேற்பட்ட இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. கவிதை சிறுகதை நாவல் நாடகம் ஆகிய துறைகளில் காத்திரமாக பலர் செயற்பட்டு வருகிறார்கள். குறிப்பிட்டுக் கூறக்கூடிய பல படைப்பாளிகளைப் புகலிச் சூழல் உருவாக்கியிருக்கிறது. ஷோபாசக்தி, சக்கரவர்த்தி, திருமாவளவன், கலாமோகன், பார்த்திபன், நிருபா, சுமதி ரூபன், றஞ்சினி, ஆழியாள், என்று இன்னும் பலர் தம்மை அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். தனித்தனியாக துறைகள் குறித்தும் ஆளுமைகள் குறித்தும் பேசவேண்டியிருக்கிறது.

அங்கிருந்து வெளிவரும் படைப்புக்களில் அகதிநிலை பற்றியும் அடையாள இழப்புப் பற்றியும் அதிகமாகப் பேசப்படுகின்றது. தவிரவும், அந்நியம், பண்பாட்டுக் கலப்பு, இரட்டை வாழ்வு, மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளின் நிலை, மொழிக்கலப்பு ஆகியவை குறித்தும் வெளிவருகின்ற படைப்புக்கள் கவனத்தைக் குவிக்கி;ன்றன. நல்ல பல படைப்புக்களை புகலிடச் சூழல் தந்திருக்கிறது. இவையெல்லாம் ஈழப்படைப்புக்களின் இன்னொரு கட்டத் தொடர்ச்சியாகத்தான் உள்ளன.

தீபச்செல்வன் :
உன்னதம் இதழ் வாயிலாக தமிழக மக்களுடன் வேறு எதையாவது பகிர விரும்புகிறீர்களா?

துவாரகன் :
தமிழகத்துடன் இன்று நேற்றல்ல. நூற்றாண்டு காலத் தொடர்ச்சி உள்ளது. எங்கள் வாழ்வில் செல்வாக்குச் செலுத்துபவர்கள் என்று சொல்லப்படுகிறது. எங்களைப் புரிந்து கொள்ளுங்கள், எங்கள் வாழ்வை எங்களிடம் தாருங்கள். என்றுதான் எல்லோரிடமும் கேட்கவேண்டியுள்ளது. ஒரு குடிலில் வாழும் சாதாரண மனிதனின் சொற்ப கால வாழ்வுகூட மண்ணில் அநியாயமாக மாண்டுபோக யாரும் காரணம் ஆகக் கூடாது. தமிழ் இலக்கியத்தில் தலை நிமிர்ந்து நிற்பதுபோல் நாங்கள் எங்கள் வாழ்விலும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். நூற்றாண்டு கால அடிமைச் சமூக வாழ்வு இனி யாருக்கும் தேவையில்லை. எங்களுக்குத் தேவையானதெல்லாம் எங்கள் வாழ்வு ஒன்றுதான்.

நேர்காணல் : தீபச்செல்வன்

நன்றி : உன்னதம் 

Saturday, March 13, 2010

எனது இனத்தின் உரிமைக்காக மறுவாழ்வுக்காக போராட வேண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற வேட்பாளர் : சிவஞானம் - சிறிதரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக களமிறங்கும் சிவஞானம் சிறிதரன் ( B A ) கிளிநொச்சியைப் பூர்வீகமாக் கொண்டவர். வன்னியில் நடந்த உக்கிரமான போரில் இறுதி வரை அகப்படடு பல்வேறு துன்பங்களை அனுபவித்த அவர் பின்னர் தடுப்பு முகாமிற்குள் வாழ்ந்தார். கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயம் என்ற பாடசாலை உட்பட கிளிநொச்சியில் உள்ள பல பாடசாலைகளில் அதிபராக கடமையாற்றியவர். செஞ்சிலுவைச் சங்க தொண்டராகவும் அந்த அமைபில் மாவட்ட தலைமைத்துவ பதவியிலும் இருந்து பணியாற்றியவர். முழுக்க முழுக்க போர் சூழலில் அலலது போராட்ட சூழலில் வாழ்ந்தவர். தமிழ் மக்கள் அடுத்த கட்டம் அரசியல் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கருதி நாடாளமன்றத் தேர்தலில் இறங்கியுள்ள அவரை உன்னதம் இதழுக்காக பிரத்தியேகமாக சந்தித்து இந்த நேர்காணலை செய்திருந்தேன்.


தீபச்செல்வன்:

தொடர்ச்சியாக போராட்ட சூழலில் வாழ்ந்து வந்திருக்கின்றீர்கள். தொடர்ந்து போருக்கு இiராகிய வன்னியில் கிளிநொச்சியில் வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களது வாழ்வுக்கு போர் எத்தகைய அனுபவங்களை தந்திருக்கின்றன. ஏத்தகைய மாற்றங்களை தந்திருக்கின்றன அடுத்த கட்டத்திற்கு செல்லும் நம்பிக்கையை எப்படி உருவாக்கிக் கொண்டிர்கள்?

சிறீதரன் :

எனக்கு அறிவு தெரிந்த காலத்திலிருந்து ஏறத்தாழ மூன்று தசாப்த காலங்கள் முழுமையான போருக்குள்ளேயே வாழ்ந்து வந்திருக்கின்றேன். தமிழ் மக்கள் மீதான பொருளாதாரத்தடைகள், பாரிய இராணுவத்தாக்குதல்கள், தொடர்ச்சியான ஏதிலி வாழ்க்கை, சொத்துக்களை இழந்து அல்லது சூறையாடப்பட்டு நிராதரவான நிலை, உலகமே எங்களை அநாதைகளாக்கிய நிலை, என்று யோசிக்கும் அளவுக்கு போரின் வடு என்னை புடம்போட்டிருக்கிறது.

கண்ணுக்கு முன்னே கண்ட கொடிய போரின் அவலங்கள் உலகில் எங்குமே நடந்திருக்காது என்றுதான் எண்ணுகிறேன். என்றாலும் எமது உரிமைகளுக்காக நாங்கள் பிறந்து வளர்ந்து அள்ளி விளையாடிய மண்ணுக்காக மரபு வழித் தாயகத்திற்காக இறுதி மூச்சு வரை குரல் கொடுக்க வேண்டும் என்ற பேரவா மனதில் உள்ளது.

நாங்கள் மலைபோல் நம்பியிருந்த போராட்டம், நம்பிக்கைத் துரோகங்களாலும் காட்டிக்கொடுப்புக்களாலும் அழிக்கப்பட்டு தமிழினம் தனக்கென ஒரு தலைமைத்துவம் இல்லாது அரசியல் அனாதைகளாக ஒடுங்கி வாழும் இன்றைய சூழலில் எனது இனத்தின் உரிமைக்காக, மறுவாழ்வுக்காக இயன்றவரை பாடுபட வேண்டும் என்ற எண்ணமே எனது அரசியல் பிரவேசமாகியது.

தீபச்செல்வன்:

இறுதிப்போரில் உலகத்தில் நடந்திராத மீறல்களும் கொலைகளும் நடந்திருக்கின்றன. அந்தப் போரில் அகப்பட்டு பல்பேறு துயரங்களை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள். இறுதிப்போரில் நிகழ்ந்த அனுபவங்களை பல்வேறு வகையில் பதிவு செய்து வருகிறார்கள். உங்களது அனுபவங்களை பகிரகூடிய நிலையில் இருக்கிறர்களா? அந்தப் போரையும் அது நிகழ்த்தப்பட்ட முறையையும் எப்படி பொருத்திப் பார்க்க விரும்புகிறீர்கள்?

சிறீதரன் :

மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் வரை தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதிப் போர் என்பது வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. போர் என்பது வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும். இலங்கையின் ஹீறோசிமா, நாகசாகியாக கிளிநெச்சி, முல்லைத்தீவு உள்ளன. 2008ஆம் ஆண்டின் ஆவணி முதல் இலங்கை செஞ்சிலுவைச் சங்க வாகனம் மூலம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான தபால் சேவையை கிளிநொச்சிக் கிளை செய்து வந்தது அதன் செயலாளராக நான் இருந்தேன்.

2009 சனவரி 8ம் திகதி தபால் பொதியுடன் வவுனியா வந்து பின்னர் பாதை மூடப்பபட்டதால் போக
முடியாத சூழலில் வவுனியாவில் தங்கியிருந்தேன். எனது மனைவி தன் வயிற்றிலே 7 மாதங்கள் நிரம்பிய குழந்தைகயுடனும், ஏனைய 4 குழந்தைகளுடனும் யுத்தத்தின் இறுதி வாசல் வரை சென்று பின் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நலன்புரி முகாமில் வசித்து அங்கிருந்து மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்தார். ஒவ்வொரு தமிழனும் அநுபவித்த மரண வேதனையை எனது குடும்பமும் அநுபவித்தது. தமிழர்களின் உரிமைப்போர் - பயங்கரவாதம் எனும் அர்த்தம் பூசப்பட்டு அவர்கள் வாய்பேசாத ஊமைகளாக்கப்பட்டனர். தமிழர்கள் தமக்கான அதிகாரம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம் பற்றி ஏதும் பேசக்கூடாது என்பதற்காக தமிழர்கள் மீது யுத்தம் ஆக்கிரமிக்கப்பட்டது.

உலகத்தில் எங்குமே நடக்காத ஈவிரக்கமற்ற யுத்தமாகும். கொத்துக்குண்டுகளும் தொடர் செல் மழைகளும் உணவுக்காக, ஒரு நேர கஞ்சிக்காக காத்திருந்த மக்களை அரசு காவுகொணட கோர யுத்தம். இதன் மூலம் அவர்கள் திருப்தி அடைந்தார்கள் என்பதுதான் முக்கிய விடயம்.

தீபச்செல்வன் :

வன்னி மக்கள் பலர் தொடர்ந்தும் தடு;ப்புமுகாமில் தடுக்கப்பட்டுள்ளார்கள். பல மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தடுப்பில் உள்ளார்கள். நீங்கள் தடுப்பு முகாமில் தங்கிருந்த பொழுது ஏற்பட்ட அனுபவங்கள் எப்படி இருக்கின்றன? இன்றைய வாழ்வுச் சூழலில் தடுப்பு முகாம் வாழ்க்கை எத்தகைய நிலையில் இருக்கிறது? முகாமிலிருந்து வெளியில் வரும் பொழுது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?


சிறீதரன் :

வயல்வளம் அள்ளிக்கொடுக்க, கடல்வளம் கைகொடுக்க தென்னை, மா, பலா, பனையுடன் நாங்கள் கையேந்தாது ஈழத்தின் பல பாகங்களில் வாழ்ந்தவர்களுக்கு அரிசியும் கடலுணவும் கொடுத்து செழிப்போடு வாழ்ந்த மக்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு தமது சொத்துக்களை இழந்து அங்கங்களை இழந்து கூடியிருந்தவர்களின் உயிர்களை இழந்து மனம் பேதலித்தவர்களாக தறப்பாள் கொட்டகைகளில் யாரோ கொடுக்கும் அரிசிக்காகவும,; தண்ணிக்காகவும் எந்தநாளும் வரிசையில் காத்து வாழும் வாழ்க்கை. எப்பொழுது தமது சொந்த வீடுகளில் நிம்மதியாக வாழ்வோம் என்ற ஏக்கப்பெருமூச்சு இதுதான் தடுப்பு முகாமில் தொடரும் வாழ்க்கை.

தீபச்செல்வன் :

போர் அல்லது போராட்டச் சூழல் வாழ்ந்துவிட்டு அரசியலுக்குள் பிரவேசிக்கிறர்கள். நாடாளமன்ற அரசியலில் ஏன் இறங்கத் தீர்மானித்திர்கள்? ஈழத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பளராக இறங்குவது எப்படி முக்கியம் பெறுகிறது?

சிறீதரன் :

இன்று தமிழர்களின் அரசியலகூட தலைமைத்துவம் அழிக்கப்பட்டு அவர்கள் அநாதரவாக்கப்படடுள்ளார்கள். கிளிநொச்சி மாவட்டம் கடந்த 30 வருடங்களாக எந்தவொரு பாரரளுமன்ற பிரிதிநிதித்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. எமது மாவட்ட மக்களினதும் தமிழ் மக்களினது அரசியல் உரிமைக்காக, வாழ்வுரிமைக்காக குரல் கொடுக்கவேண்டிய தேவை இன்று ஒவ்வொரு தமிழ் புத்திஜீவிகளுக்கும் உண்டு. இந்த நிலையில் காலத்தின் தேவையால் எனது அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.

அதிலும் இன்று தமிழர் உரிமைக்காக விடுதலைப்புலிகளின் காலத்திலிருந்து தராகி டி.சிவராம், ஜோசப்பரராசசிங்கம், சட்டவாளர் ரவிராஜ் போன்றோரின் பெரு முயற்சியாலும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப்புலிகளால் கட்டிணையாக்கப்பட்ட கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பலரின் தியாகமும் இரத்தமும் வேர்வையும் கலந்து உருவாக்கப்பட்டு தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சி என்பதால் அதன் ஊடாக அரசியலில் களமிறங்கினேன்.

தீபச்செல்வன் :

ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளை அழிக்கவும் ஈழத் தமிழ் அரசியல் வலுவை சிதைக்கவும் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை அல்லது சூழ்ச்சிகளை மேற்கொள்வதை பார்க்க முடிகிறது. இந்த எண்ணத்தை இலகுபடுத்தும் வகையில் சில தமிழ் கட்சிகளும் அரசியல் வாதிகளும் செயற்படுகிறார்கள் போலத் தெரிகிறது. இவை எத்தகைய ஆபத்தை ஈழத் தமிழ் அரசியலில் ஏறபடுத்தும் என கருதுகிறீர்கள்?

சிறீதரன் :

தமிழர்களின் பேரம்பேசும் ஆற்றலை இல்லாதொழிப்பதே இன்று தமிழ் மண்ணில் பல கட்சிகள் சுயேட்சை குழுக்களாக களமிறக்கப்பட்டதன் அர்த்தமாகும். தமிழர்கள் சனாதிபதி தேர்தலில் காட்டிய ஒற்றுமையை இத்தேர்தலில் முழுமையாக காட்டவேண்டும். தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைப்பதென்றால் அது ஒற்றுமையின் கீழேயே கிடைக்கும். படிப்படியாக எங்களுடைய இன அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன.

எங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது. மொழியை மூன்றும் தரத்தில் கூட வைத்து பார்க்;கமாட்டார்கள் போலுள்ளது. மாறி மாறி வரும் சிங்கள அரசுகள் தங்களுக்குள் முரண்படுகள் இருந்தாலும் தமிழர்களை அழிப்பதில் தமிழர்களின் மொழி கலாசாரத்தை சிதைத்து உரிமைக்குரலை நசிக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றன. ஆனால் தமிழர்கள் குறிப்பாக புத்திஜீவிகள் பணத்திற்காக பதவிக்காக இனத்தைக் காட்டிக்கொடுக்கும் இன அடையாளத்தை அழிக்கும் செயற்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதுதான் வேதனை. இந்நேரம் எம் உரிமைகளை வென்றெடுக்க நாம் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். ஒரே அணியின் கீழ் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

தீபச்செல்வன்:

போரின் பிறகு ஈழத்தமிழர்களின் அரசியலில் என்ன ஓட்டம் இருக்கப்போகிறது? கனவுகள் நிறைவோத சூழலில் ஈழப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இனி ஈழ அரசியலில் வரும் பிரதிநிதிகள் எத்தகைய பங்கை ஆற்ற வேண்டும்?

சிறீதரன் :

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான ஈழப்போரில் 200000 க்கு மேற்பட்ட மக்களையும் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளையும் இந்த மண்ணில் விதையாக்கியிருக்கிறோம். இன்று தம் பிள்ளைகளுக்கு ஒரு மெழுகுவர்த்தி கொழுத்தி ஆறுதலடையக்கூட அவர்களின் தாய் தந்தை சகோதரங்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அப்பாவி இளைஞர் யுவதிகள் 15000 மேற்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். ஏதுமறியா அந்த அப்பாவிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மருத்துவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பல தாய் தந்தையர்களுக்கு தம் பிள்ளைகள் எங்கே இருக்கின்றார்கள் என்பது கூட தெரியாது. அவர்கள் உயிருடன் இருக்ககின்றார்களா? இல்லையா? என்பதைக் கூட அறியமுடியாத சூழல், வன்னியில் முழுச்சொத்துக்களும் சூறையாடப்பட்டுள்ளன. தாங்கள் வசதியாக சந்தோசமாக வாழ்ந்த வீடுகளின் அத்திவாரங்களைக்கூட பாரர்க்கமுடியவில்லை. எல்லாவற்றையும் இழந்து 12 தகரத்திற்குள்ளும் தறப்பாள்களுக்குள்ளும் அடிமைகளாக வெறுமையாக ஒடுங்கிவாழும் வாழ்க்கைதான் கிடைத்திருக்கிறது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கு வவுனியா வடக்கு மன்னாரின் மடுப்பிரதேசம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களின் துவிச்சக்கர வண்டிகள், மோட்டர் வாகனங்கள், பாரவூர்திகள், சிற்றூர்திகள், பேருந்துகள், உழவு இயந்திரங்கள் இவற்றுக்கு என்ன நடந்தது.

இந்த நிலையில் ஈழ அரசியலில் வரும் பிரதிநிதிகள் எதை முன்வைப்பார்கள் என்பது பிரச்சனைதான். இவ்வளவும் நடந்தும் எந்த தீர்வும் இல்லாமல் பழைய வாழ்க்கைகக்கு போயுள்ள மக்களுக்கு தங்களை தாங்களே நிர்ணயிக்கக்கூடிய சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுப்பதே முதல் பணியாகும். புலத்தில் வாழும் தமிழர்களையும் நிலத்தில் வாழும் தமிழர்களையும் இணைத்து மாறிவரும் உலகச்சூழலுக்கேற்ப உலக அரங்கில் எமது உரிமைப்பிரச்சனையை விளக்கி தீர்வு காணப்படவேண்டியது மிக முக்கிமான எமது கடமையாகும்.

தீபச்செல்வன் :

இந்தத் தேர்தலில் உங்களது வாக்குறுதிகள் எப்படி அமைகின்றன? அவை எந்தளவு ஈழ மக்களின் வாழ்வு, கனவு, நம்பிக்கை, ஏக்கம் என்பனவற்றில் பொருந்தி நிற்கின்றன? அவற்றை எப்படி சாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

சிறீதரன் :

எமது மக்களுக்கான உரிமைகளுக்காக படிப்படியாக எல்லோரையும் இணைத்து தமிழர்கள் ஓரணியாகி விடுதலைக்காக நிம்மதியான வாழ்வுக்காக எமது அடையாளத்தை காப்பதற்காக குரல் கொடுத்து தீர்வு ஒன்றை விரைவாக அடையவேண்டும். எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் - தலைமைத்துவம் சிதறடிக்கப்பட்டு வெறுப்பு விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு நீதியான வாழ்வுக்கு உதவவேண்டும் என்பதே எனது நோக்கம்.

தீபச்செல்வன் :

ஈழ மக்கள் சார்பாக உன்னதம் இதழ் ஊடாக தமிழக மக்களுடன் வேறு எதையாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?

சிறீதரன் :

காலம் காலமாக எமது தாயக மக்களுக்காக உயிர்த்தியாகம் கூட செய்தவர்கள் தமிழகமக்கள். எங்கள் மக்களின் உரிமைக்காக உணர்வு ரீதியாக என்றும் குரல் கொடுத்து வருகிறார்கள். நாம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவதற்கு தமிழக மக்களின் பங்கு மிக முக்கியமானது. இந்தியா எங்கள் ஈழப்போராட்டத்தை அழித்தாலும் தமிழக மக்கள் அதற்கு உயிரூட்டுகிறார்கள். எங்களை அரசியல் அநாதைகள் ஆக்கி எந்த தீர்வும் இல்லாமல் செய்து எமது உறுதியான தலைமைத்துவத்தை அழித்து எங்களை தொடர் அகதிகளாக்கி இந்திய மக்களின் நன்கொடை என்ற தகரங்களை வழங்கி எமது மக்களை அவலத்துடன் அழகுபார்க்கிறது இந்திய அரசு. இந்நிலையிலும் தமிழக மக்களின் பங்களிப்பு கிடைத்து வருகிறது.

நேர்காணல் : தீபச்செல்வன்

தட்டச்சு உதவி : ரமணன்

நன்றி : உன்னதம் மார்ச் 2010

Wednesday, January 20, 2010

ஜனநாயகத்தை நிலைநாட்டவே ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்கிறோம் - இராமலிங்கம் சந்திரசேகரன்



மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரனுடன் உரையாடல்

இலங்கையின் ஜனாதிபதித்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத்தளபதியும் முப்படைகளின் கூட்டுத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவும் முக்கிய போட்டியாளர்களாக களமிறங்கியிருக்கிறார்கள். யுத்தக் குற்றவாளிகளாக கருதப்படுகிற இவர்கள் இருவரும் யுத்த வெற்றியை முன்னிருத்தியே தங்கள் பிரசாரங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் இருவருக்கும் இடையிலான மோதல் நிலை தீவிரம் பெற்றிருக்கிறது. யார் ஆதரிப்பது என்ற நிலையில் அரசியல் கட்சிகளும் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் மக்களும் இருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற சில கட்சிகள் இணைந்து மகிந்தாராஜபக்ஷவுக்கு எதிராக தங்கள் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத்பொன்சேகாவை களம் இறக்கியிருக்கிறார்கள்.



மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரே தமிழர். பண்டாரவலயில் பிறந்து வளர்ந்தவர். இவர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். ஆட்சி மாற்றம் ஒன்றின் முலமே அமைதியைக்கொண்டு வர முடியும் எனறு கூறுகிற இராமலிங்கம் சந்திரசேகரன் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே சரத்பொன்சேகாவை ஆதரிக்கிறோம் என்று சொல்கிறார். அடுத்த ஜனாதிபதியாக சரத்பொன்சேகா ஆட்சிபீடம் ஏறுவார் என்றும் அவர் நிறைவேற்று ஜனாதிபதி முறமையை ஒழிப்பார் என்றும் கூறுகிறார். இந்த தேர்தல் நிலமைகள் பற்றியும் கடந்த கால அரசியல் நிலரங்கள் பற்றியும்; இலங்கையின் பாராளமன்ற உறுப்பினரான இராமலிங்கம் சந்திரசேகரனுடன் உன்னதம் இதழுக்காக இந்த உரையாடலைச் செய்திருந்தேன்.

01
தீபச்செல்வன்:

இந்தத் தேர்தலில் நீங்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறமையை ஒழிப்பதற்காக ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக சொல்லுகிறீர்கள். இதுபோல கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஷவுடன் நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் தோல்வியில் முடிந்துபோயிருந்தது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு வேட்பாளர்களையும் யுத்தக் குற்றவாளிகளாகவே பார்கின்ற நிலையில் உங்களது நிலைப்பாடு சர்ச்சைக்குரியதாகவும் சிக்கலுக்குரியாதகவும் இருக்கிறதே?

இராமலிங்கம் சந்திரசேகரன்

நடைப்பெறப்போகிற தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சரத்பொன்சேகா அவர்களை ஆதரிக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியானது ஒரு இடதுசாரிக் கட்சி. ஒரு இடதுசாரிக்கட்சி ஒரு இராணுவத்தளபதியைத் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வது என்பது சர்ச்சைக்குரிய விடயம்தான் இதில் எந்த வாதமும் கிடையாது. ஆனாலும் நாட்டின் யதார்த்த நிலமைகள் எவ்வாறு இருக்கின்றது என்று பார்க்க வேண்டும். அந்த யதார்த்த நிலமையில்தான் இன்று நாங்கள் சரத்பொன்சேகாவை ஆதரித்து நிற்கின்றோம். ஆனால் கடந்த காலங்களில் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி வாக்குறுதிகளை பெற்றுக் கொண்டு நாட்டின் ஜனாதிபதிகளை உருவாக்கிய வரலாறும் இருக்கிறது. ஆனால் 2005ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணிக்கும் மகிந்தாரஜபக்ஷவுக்கம் இடையில் உடன்படிக்கை ஒன்று செய்து கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கையில் 7ஆவது கோரிக்கையாக இம்முறை பதிவிக்காலத்தோடு நிறைவேற்று ஜனாதிபதி முறமையை ஒழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்திருந்தது. அதற்கு அவர் இணக்கம் தெரிவித்து பின்னர் அவரால் உருவாக்கப்பட்ட கொள்கை பிரகடனமான ‘மகிந்த சிந்தனை’யில் உள்ளடக்கி மக்களிடம் சென்று வாக்குறுதி அளித்து வாக்குகளை கேட்டார். மக்களுக்கு உறுதியளி;திருந்தார்.

மக்களுக்கு உறுதியளித்தவற்றை நிறைவேற்றாது இன்று மறுபடியும் மகிந்தராஜபக்ஷ ஜனனாதிபதித் தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றார். இவ்வாறான சூழ்நிலையில்தான் மக்கள் விடுதலை முன்னணியான நாங்கள் இந்த நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறோம். 2005ஆம் ஆண்டு மக்களுக்கு வாக்கறுதி வழங்கி மக்கள் ஆனையைப் பெற்றுக்கொண்டு பின்னர் அதை மீறி செயற்படுகின்ற ஜனாதிபதிதான் இந்ததத் தேர்தல் களத்தில் இருக்கின்றார். மக்களுக்கு பொய்வாக்குறுதி அளித்த மக்களை ஏமாற்றிய ஒருவர்தான் இந்தக் களத்தில் இருக்கின்றார். ஆகவேதான் இந்த ஜனாதிபதிக்கு இம்முறை மக்களிடம் வாக்கு கேட்பதற்கு அருகதையில்லை என்பதை நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம்.

மகிந்ராஜபக்ஷ அவர்கள், கடந்த ஆறு மாதத்திற்கு முதல் நடத்த யுத்தவெற்றியோடு நாட்டில் ஜனாதிபதியாக அல்ல மாகாராஜாவாக மாறிவிட்டார். மன்னராக மாறிவிட்டார். அப்படியிருந்து கொண்டு யாருடைய கதைகளுக்கும் செவிமடுக்காமல் தான் தோன்றித்தனமான முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தார். இவர் மீண்டும் ஜனாதிபத் தேர்தலை நடத்த தீர்மானித்தபோது. ஐய்யா மகிந்தராஜபக்ஷ அவர்களே ஜனாதிபத்; தேர்தலை மீண்டும் நடத்த வேண்டாம் என்று எங்கள் கட்சியின் செயலாளர் கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். எனக்கும் உனக்கும் 2005ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி நிறைவேற்று அதிகார முறமை ஒழிக்கப்படவேண்டுமே ஒழிய இனியும் ஒரு ஜனாதிபதித் தேர்தலை நடத்த கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதை அவர் கனவத்தில் எடுக்கவில்லை. பின்னர் கட்சி மாநாடு ஒன்று நடத்தி இதனைத் தெரிவித்திருந்தோம். பின்னர் நாடு முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியும் கொழும்பில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சென்று ஆட்பார்ட்டங்களை நடத்தியும் தெரிவித்திருந்தோம். மக்கள் ஆனையை மீறுவாய் என்றால் நிச்சயமாக உன்னை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தெரிவித்திருந்தோம். அதற்கு பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வோம் என குறிப்பிட்டோம். அதை மகிந்தாராஜபக்ஷ அவர்கள் கணக்கில்கூட எடுக்கவில்லை. ஜே.வி.பியால் அப்படி ஒரு பொதுவேட்பாளரை நியமிக்க முடியுமா? அல்லது மகிந்தராஜபக்ஷவுக்கு போட்டியிடக்கூடிய தகுதி உள்ளர் யாராவது இருக்கிறரா? என்ற வாதங்களுடன் அவர் இருந்தார்.

இப்படியான சூழ்நிலையில்தான் மகிந்தராஜபக்ஷவுக்கும் சரத்பொன்சேகாவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. அப்பொழுது இதற்கு மாற்றமான நடவடிக்கை ஒன்றுக்கு செல்ல வேண்டிய தேவை சரத்பொன்சேகா அவர்களுக்கும் இருந்தது. சரத்பொன்சேகா அவர்கள் ஜனாதிபத்தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்று கதைகள் வந்திருந்தன. அப்பொழுது வெறுமனே தனியாக ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட மகிந்தராஜபக்ஷவுக்கு இணையாக பேட்டியற்ற களத்தை போட்டிக் களமாக மாற்ற வேண்டிய தேவை எங்களுக்கு இருந்தது. இதன் காரணமாகவே மக்கள் விடுதலை முன்னணி சரத்பொன்சேகாவை களத்தில் இறக்கியிருக்கிறது. தனியாக பேட்டியிட்டு இந்தத் தேர்தலில் எங்களால் எதையும் சாதிக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது எங்கள் கொள்கைக்கு ஒத்தவராது. மகிந்தவையும் ஆதரிக்க முடியாது.

இப்படியான நிலையில் வெறுமனே நூற்றுக்கு 70 அல்லது 80 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டு தனது குடும்ப ஆதிக்கத்தை நாட்டின்மீது சர்வாதிகாரமாக நிலைநாட்டி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளுவதற்கான பேராசை மிக்க ஆட்சியை நடத்துவதற்கு ஏதுவான களம் ஏற்பட்டிருக்கும். நாஙகள் இந்தக் களத்தில் கட்சி சாராத பொதுவேட்hளர் ஒருவரை தெரிவு செய்தால் அது நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய விடயம் என்று கருதினோம். இப்படியான பொதுவேட்பாளரை நாங்கள் 1980 களிலிருந்து தேடி வந்தோம். இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறமையை நிர்மானித்த ஐக்கிய தேசியக் கட்சியும் கூட அதற்கு எதிராக திரும்பியிருக்கிறது. ஜெனரல் சரத்பொன்சேகாவிடம் குறுகிய காலத்தில் நாட்டின் ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்வதற்கான நடவடிக்கைகைள எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். இந்த நாட்டில் ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்தவற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புகின்றோம்.

02
தீபச்செல்வன்:

கடந்த காலத்தில் நடந்த யுத்ததில் யுத்தக் குற்றங்கள் நிறையவே நடைபெற்றிருக்கிறது. இது சிங்கள மக்களுக்கு இராணுவ வெற்றியாக இருக்கலாம். தமிழ் மக்களுக்கு இது மறக்க முடியாத சோகத்தையும் இழப்பையும் வழங்கியிருக்கிறது. இங்கு களத்தில் போட்டியிடுகிற இரண்டு முக்கியமான வேட்பாளர்களும் யுத்தக் குற்றத்தில் சம பங்கு வகிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்படிhன நிலையில் உங்களால் ஜெனரல் சரத்பொன்சேகாவை வைத்து எப்படி ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதுகிறீர்கள்?

இராமலிங்கம் சந்திரசேகரன்:

இந்த யுத்தக் குற்றம் சம்பந்தமாக பேசுபவர்கள் வேறு யாருமில்லை அமெரிக்கா, ஐ.நா, மற்றும் சில மேற்குலகநாடுகள். இந்த நாடுகளுக்கு இலங்கையில் யுத்த குற்றம் பற்றி விசாரணை செய்வதற்கு என்ன அருகதையிருக்கிறது? யுத்தக் குற்றம் புரியாமல் இருக்கின்ற மனிதாபிமானத்துடன் நடக்கின்ற நபர்கள் கேட்பார்கள் என்றால் இதற்கு பதில் அளிக்க வேண்டிய தேவையுள்ளது. இலங்கையில் யுத்த காலத்தைக் காட்டி தங்கள் அரசியல் இருப்புகளையும் நகர்வுகளையும் மேற்கொள்ளுகிறார்களா ஏன்ற கேள்வியும் இருக்கிறது? உலக வரலாற்றில் இப்படிததான் நடந்திருக்கிறது.

நீங்கள் குறிப்பட்டதுபோல தென்பகுதி சிங்கள மக்களுக்கு இது யுத்த வெற்றி தமிழ் மக்களுக்கு பெரும் சோகம். ஆனால் கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் யுத்தம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்ததது. இந்த யுத்தத்தை இரண்டு சாராரும் முன்னெடுத்தார்கள். இரண்டு தரப்பினதும் துப்பாக்கி ரவைகள் பேசிக்கொண்டிருந்தன. இறைச்சி வாயால் பேசுவதற்கு பதிலாக இருப்பு வாயால் பேசினார்கள். அதுக்கு ஈவஇரக்கம், மனிதாபிமானம், உணர்ச்சிகள், உணர்வுகள் இல்லை. யுத்தம் மிலேச்சத்தனமானது. யுத்தததின் முடிவுகளும் மிலேச்சத்தனமானவை. இதற்கு ஒருவரை இருவரை பொறுப்பு கூற முடியாது. இந்த யுத்ததிற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. வரலாற்றில் ஆடசி செய்த யுத்தத்தை நிர்மாணித்த அனைவரும் யுத்தக் குற்றவாளிகள்தான். தமிழரசியல்வாதிகள் அரசாங்கங்கள் சிங்கள அரசியலவாதிகள் அனைவரும் யுத்ததின் நிர்மாணக் கர்தாக்கள்.

மறுபுறத்தில் இந்தியா, அமரிக்கா, நோர்வே, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், அனைவரும் இதன் நிர்மாணக் கர்த்தாக்கள். அனைவரும் யுத்தக் குற்றவாளிக் கூண்டிலில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.

03
தீபச்செல்வன்:

யுத்த களங்களில் நடந்த மீறல்களை வெளிப்படுத்துகின்ற புகபை;டபடங்கள் வெளிhகியுள்ளன. அண்மையில்கூட துவாரகா என்ற பெயரில் ஒரு பெண்ணின் சிதைக்கப்படட உடலின் படம் வெளியாகியிருந்து. அது புலிகளின் நிதர்சனம் பிரிவு மகளீர்போராளி இசைப்பிரியா. அவர் கடுமையான பாலியல் சித்திரவதை செயயப்பட்டு சித்திரவதையினாலே கொல்லப்பட்டிருக்கிறார். அதற்கு முன்பு சில போராளிகள் இராணுவ சீருடை அணிந்தவர்களினால் சுட்டுக்கொல்லப்படும் காட்சியும் வெளிவந்திருந்தது. இப்படியான புகைப்படங்களும் ஒளிக்காட்சிகளுடம் இதுவரை வெளிவராது தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கிற சம்பவங்களும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிறது. இந்த நிகழ்வுகளை எப்படி பார்க்கிறிர்கள்?

இராமலிங்கம் சந்திரசேகரன்

நீங்கள் குறிப்பிட்ட அந்தப் புகைப்படங்களை ஒளிக்காட்சிகளை ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன். துவாரகா எனப்பட்ட அந்த சகோதரி, பாலச்சந்திரனின் உடல் அவற்றைப் பார்த்தேன். அதுபோல பல போரளிகளைச் சின்னாபின்னமாக்கியதை பெண்கள் மானபங்கப்படுத்தப்ப்பட்டதை நான் ஊடகங்கள் வாயிலாக பார்த்திருக்கிறேன். இது உண்மையில் வேதனையளிக்கின்ற விடயம். இந்த இளைஞர்கள் யுவதிகள் வேறு யாருமில்லை அவர்கள் எங்கள் சகோதரிகள்., சகோதரர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த சகோதரர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வுகளை ஏற்படுத்தாதன் விளைவாகவும் இது நடந்திருக்கிறது.

தோழரே! இப்படி இந்த யுத்தகளததில் மாத்திரமல்ல இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி ஒரு போராட்ட அமைப்பாக இருந்தபோது 10ஆயிரம் இளைஞர்களை படுகொலை செய்தார்கள். 20 ஆயிரம் இளைஞர் யுவதிகளை சிறையிலடைத்தார்கள். 1971 ஏப்பிலர் 16 ஆம் திகதி கதிர்காமப் பிரதேசத்தின் அழகியாக தெரிவு செய்யப்பட்ட மின்னம்பேரியை கொண்டு சென்று மானபங்ககப்படுத்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக நடந்து வரப்பண்ணி சுட்டு உயிரோடு புதைத்த பாவிகளும் இந்த நாட்டில் இருக்கின்றார்கள். 1989ஆம் ஆணடு 60 ஆயிரம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். புலிகள் தங்களது போராளிகள் 20 ஆயிரம் பேர் இறந்ததாக குறிப்பிட்டார்கள். முக்கள் விடுதலை முன்னணி 60 ஆயிரத்திறகு அதிகமானவர்களை இழந்திருக்கிறது.

முள்ளுக்கம்பியால் கட்டி உயிரோடு ரயரில் போட்டு எறிக்கப்படடு, சித்திவரவதைக்கு உள்ளாக்கப்பட்டு ஆறுகளில் மிதக்கப்பட்ட வரலாறும் இருக்கிறது. பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மானபங்ககப்படுத்தப்பட்ட வரலாறும் இருக்கிறது. ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 1988ஆம் ஆண்டு எமது கட்சியின் சகோதரர் ஒருவரையும் சகோதரி ஒருவரையும் கடத்தியிருந்தார்கள். அன்று இரவு முழுவதும் அந்த சகோதரியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு மறுநாள் அந்தச் சகோதரியின் மார்பகங்களை வெட்டி அந்த சகோதரியின் வாயில் திணித்து விட்டு அந்தத் சகோதரரின் ஆண்குறியை வெட்டி அந்த சகோதரியின் பெண்குறியில் திணித்து இரண்டு நாட்களாக கண்காட்சிக்கு வைத்திருந்தார்கள். அன்று சிங்கள இளைஞர்கள் யுவதிகளுக்கு அவ்வாறான அநீதிகளை இளைத்தவர்கள் பாதுகாப்புப் படையிலிருந்த காவாளிகள். அவ்வாறான காவாளித்தனமானவர்கள் தமிழ் பிரதேசங்களுக்கு செல்லும்பொழுது என்ன செய்திருப்பாhகள் என்று இந்த சம்பவங்களோடு உப்பிட்டு பார்க்கிறபோது புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி நிகழ்ந்ததை உறுதிப்படுத்த மேலும் மேலும் சான்றுகள் வெளியாகிக் கொண்டிருக்கினறன. அந்தக் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு தண்டனையை அளி;க்க வேண்டும்.

இந்த படுகொலைகளுக்கு இலங்கை இராணுவம் மாத்திரம் காரணமல்ல. இராணுவத்தை இந்த நிலமைக்கு கொண்டு வந்ததிலிருந்து புலிகளை அந்த இடத்திற்கு தள்ளியதிலிருந்து இவற்றை வழி நடத்திய, யுத்தத்தை முன்னெடுத்துச் சென்ற இந்தியா அமரிக்கா நோர்வே ஐ.நா அனைவரும் பதில் சொல்லியாக வேண்டும். இந்த மக்களின் அவலத்திற்கு காரணமான ஒவ்வொருவரும் கூண்டில் நிறுத்தி எங்களுக்கு நியாhம் பெற்றுத் தர வேண்டும்.

04
தீபச்செல்வன்:

சரத்பொன்சேகாவுடன் நீங்கள் இணைந்து நிற்கின்றீர்கள். உங்களுடன் மறுபறத்தி;ல் இணைந்து நிற்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியில் மக்களுக்கு நம்பகம் இல்லாத தன்மை இருக்கிறது. ரணில்விக்கிரமங்கவினுடைய தந்திரம் போன்றவற்றால் தமிழ் மக்களிடம் கசப்பானவராக இருக்கிறார். சரத்பொன்சேகாவை ஆதரிக்கிற உங்கள் நிலைப்பாடும் ஐக்கியசேதியக் கட்சியுடன் சேர்ந்து நிற்கின்ற நிலமையும் தவறான விளைவுகளைத் தந்தால் என்ன செய்ய முடியும்?

இராமலிங்கம் சந்திரசேகரன்

அப்படியான சந்தேகங்கள் எழுவதில் நியாம் இருக்கின்றது. ஆனால் அப்படியான நிகழ்வுகள் நிகழக்கூடாது என்பதே அனைவரருடைய விரும்பும். அவ்வாறான விளைவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தன்னாளான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணி நம்புகின்றது. அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். சரத்பொன்சேகா அவர்களுக்கு குறுகிய வேலைத்திட்டம் ஒன்றை கொடுத்திரு;கிறோம். அவர் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டியிருக்கும். அதில் முன்மையானது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பிறகு பாராள மன்றத்தை களைக்க வேண்டும். காபாந்து அரசாங்கம் கொண்டு வர வேண்டும். அந்தக் காபாந்து அரசாங்கத்தின் கீழ் பராளமன்றம் அமைச்சரவை கொண்டு வர வேண்டும். அடுத்து பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும். அந்த பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்கு சுயாதீன ஆனைக்குழுக்கள் நிறுவ வேண்டும். ஆதன் கீழ் நாட்டின் நியாhன தேர்தல் ஒன்றை கட்சி சாராத சரத்பொன்சேகா நடுநிலையாக நின்று செற்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இலங்கையில் முதன் முதலில் சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு வாய்யப்பிருக்கிறது.

கைது செய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கு அதிகமான இளைஞர்கள் இவர்களை விடுதலை செய்வதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகைள துரிதமாக முன்னெடுக்கப்படும். ஊடனடியாக சரத் பொன்சேகா ஆட்சி பீடமேறி அடுத் நிமிடமே கவளத்தில் கொள்ள வேண்டும். அதுபோல இடம்பெயர்ந்த மக்களின் மீள் வாழ்வுக்கு சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆவளை செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம். அதற்கு அவர் இணக்கம் தெரிவித்திருக்கிறார். அதற்கான சாத்திளயங்கள் இருப்பதை திடமாக நாங்கள் நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே கோரிக்கைகளை முன்வைத்து சரத்பொன்சேகாவை ஆதரித்து நிற்கின்றோம்.

இது நாள் வரை ஒரு அரசியல் கட்சியின் தலைவரை ஆதரித்தோம். அவருக்கு பின்னுக்கு அரசில் இருந்தது. அரசியல் வாதிகள் இருந்தார்கள். அமைச்சார்கள் பாராளமனற உறுப்பினர்கள் இருந்தார்கள். சரத்பொன்சேகாவுக்கு அவ்வாறு கிடையாது. அவரு;கு என்று ஒரு கட்சி கிடையாது. புhராளமன்ற உறுப்பினர் கிடையாது. பாராளமன்றம் கிடையாது. இவர் முன் வைக்கின்ற கூற்றுக்களை நிறைவேற்றுவதற்கு பராளமன்றத்தில் ஒரு சூழல் அமையும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்.

ஐக்கியதேசியக் கட்சியோடு நாங்கள் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லை. நாங்கள் சரத்பொன்சேகாவோடுதான் கூட்டுச் சேர்ந்திருக்கிறோம். நீங்கள் கேட்கலாம் அப்டியென்றால் எப்படி ஒரே மேடையில் இருந்து பேசுகிறிர்கள் என்று. 2005 ஆம் ஆண்டுகூ;ட நாங்கள் மகிந்த ராஜபக்ஷவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டபோது ஹெல உறுமயக் கட்சியும் மக்கள் ஐக்கிய முன்னணியும் கமுனிஸ்ட் கட்சியும் உடன்படிக்கை செய்து கொண்டது. அப்பொழுதும் நாங்கள் மகிந்தராஜபக்ஷவோடு மட்டுமே உடன்படிக்கை செய்து கொண்டிருந்தோம். அதுபோல இன்று சரத்பொன்சேகாவோடு உடன்படிக்கை செய்து கொண்டிருக்கிறோமே தவிர ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்படிக்கை செய்யவில்லை. சரத்பொன்சேகாவை வெல்ல வைப்பதற்காக அவர்களும் நாங்களும் இணைந்து ஆதரவளிக்கிறோம். வெல்ல வைப்பதற்கு மாத்திரமே அவர்களுடன் இணைந்து நிற்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சியோடு எந்தக் கூட்டு உடன்படிக்கையும் நாங்கள் செய்து கொள்ளவில்லை.

05
தீபச்செல்வன்:

யுத்த வெற்றியை அரசாங்கம் தன் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்துகிறது. அதேபோல தடுப்பு முகாமில் உள்ள மக்களை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிப்பதும் புகைப்படங்களை எடுத்து ஊடகங்களில் வெளியிடுவதும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக மீள குடியமர்த்த கொண்டு செல்லுவதும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதும் அரசியல் நலன்களுக்காக முன்னெடுக்கபடுகிறது. இங்கு நேர்மையான விடுவிப்பு மீள்குடியேற்றம் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இது குறித்து என்ன கருதுகிறர்கள்?

இராமலிங்கம் சந்திரசேகரன்

வடபகுதி மக்ளுக்கு வசந்தம் பிறக்கவில்லை. ஆனால் வடக்கின் வசந்தத்தை முன்னெடுக்கும் அமைச்சர்களுக்கு வசந்தம் பிறந்திருக்கிறது. பசில்ராஜபக்ஷ அவர்களுக்கு வசந்தம் பிறந்திருக்கிது. ர்pஷாட்பதியுதின் அர்களுக்கு வசந்தம் பிறந்திருக்கிறது. இவர்கள் மக்களுக்கு வழங்கிய கொட்டில்களை களவாடியவர்கள். மக்களுக்கு வழங்கிய சோற்றுப்பர்hசலை களவாடியவர்கள். இப்படியான செப்படி வித்தைகளை கண்டு மக்கள் ஏமாறக்கூடாது. அவைகளுக்கு ஆக்கப+ர்வமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று சரத்பொன்சேகா அவர்கள் கண்டியில் வைத்து வழங்கிய உறுதியுரையில் மிகத்தெளிவாக மீள்குடியேற்றம் மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சந்பம்தமாக வாய்ப்பேச்சு அல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

இடமப்பெயர்ந்து வந்த மக்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறாhர்கள் என்று கடந்தகாலங்களில் பாராளுமன்றத்தில் நான்தான் முதன் முதலில் குறிப்பிட்டிருந்தேன். அப்படி குறிப்பிட்டதால் அரசசார்ப்பு ஊடகங்கள் யாவும் எங்களுக்கு எதிராக நின்று, புலிகளுக்கு ஆதரவாக பேசிவிடடேன் என்று பிரசாரம் செய்தன. அன்றிலிருந்து இன்று வரை மிகத் தெளிவாக இருக்கிறோம். சிறைச்சாலையில் உள்ள தமழிர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று. இன்று குடியேற்றம் நடப்பதாக கூறுகிறார்கள். அதுவும்கூட இன்னுமொரு சிறைச்சாலையாகத்தான் இருக்கின்றன. இதுநாள் வரை அவர்களுக்கு எந்த மானியங்களும் வழங்க்கப்படவில்லை. அவர்களது வாழ்க்கையை மீள கட்டியெழுப்படாது அவர்களது பிள்ளைகள வாழவை மீள கட்டியெழுப்படாது இருக்கின்ற நிலையில் இந்த மக்களது வாழ்க்கையில் எப்படி வசந்தம் பிறக்க முடியும்?

இந்த மூன்று லட்சம் மக்கள் மத்தியில் நாங்கள் தேடிப் பார்க்கின்ற பொழுது சுமார் 8 ஆயிரத்திற்கு அதிகமான பிள்ளைகள் பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இன்று உடல் ஊனமுற்றவர்களாக இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான முதியவர்கள் யாருமற்ற அனாதரவான நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கபிறார்கள். கிழக்கில் 49 ஆயிரத்திற்கு அதிகமான பெண்கள் விதவைகள் ஆக்கப்ட்டிருக்கிறார்கள். இது இலகுவான விடயமல்ல. இது சவால் மிக்க நேரம். இதை தனினொரு நபரால் சாதிக்க முடியாது. முழு நாடும் முழு நாட்டின் பலத்தையும் இதற்காக பிரயோகிக்க வேண்டும் என்று 2009ஆம் ஆண்டு மே 24ஆம் திகதி ஒரு அறிக்கை ஒன்றை அரசாங்கத்திற்கு சமர்பித்திருந்தோம். இந்த விடயத்தில் அரசாங்கம் சரியான கவனத்தில் எடுக்காது இதில் தனது இருப்பை தனது அரசிலை இருபபை செலுத்தி இந்த மக்களை அரசியல் பகடைக்காய்களாக்குவது எப்படி என்கின்றதை பார்த்தாhகளே தவிர இந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏறபடுத்தி வில்லை என்பது எங்கள் கருத்து.

06
தீபச்செல்வன்:

ஜே.வி.பி அமைப்பு ஆரம்பகாலத்தில் சோசலீச இடதுசாரிச் சிந்தனை கொண்ட அமைப்பாக இருந்திருக்கிறது. அரசாங்கத்தை எதிர்பதில் நீங்கள் புலிகளின் பக்கம் இருந்தாலும் புலிகளுக்கு எதிராகவே கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கிறர்கள். உங்களுககுக மக்கள் ஆதரவு இருப்பதுபோல புலிகளுக்கு மக்கள் வழங்கிய பெரிய ஆதரவினாலேயே அவர்களால் பெரியதொரு அமைப்பாக வளர்த்திருக்க முடிந்தது. எப்படியிருந்தாலும் உங்களுடைய ஆயுதப் போரட்ட அமைப்பிற்கு நிகழ்ந்த மாதிரியே விடுதலைப்புலிகளுக்கும் இறுதிக்காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஜனநாயக மனிதாபிமானமற்ற வகையில் மிலேச்சத்தனமாகவும் கோரத்தனமாகவும் மிருகத்தனமாகவும் சிதைத்து மக்களுக்கும் கடுமையன அழிவையும் சேகத்தையும் வழங்கியிக்கிறது உங்களால் இந்த சிதைப்பை எப்படி பார்க்க முடிகிறது.?

இராமலிங்கம் சந்திரசேகரன்:

ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியான பேராட்டங்களை மிலேச்சத்தனமாக அடக்கி தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ளுவது முதலாளித்துவத்தின் பண்பு. அதுபோலவேதான் புலிகள் அமைப்பு படு மிலேச்சனமாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்ட்டிருக்கிறது. அவர்கள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அழிப்புக்கு அரசாங்கம் மாத்திரமல்ல காரணம். புலிகள் அமைப்பு என்பது சர்வதேச ரீதியில் பலம் வாய்த அமைப்பாக அஇருநதது. ஆப்படி சர்வதேச ரீதியாக பலம் வாய்ந்த அமைப்புக்கு இவ்வாறான அழிவிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகைள அலலது அரசியல் தந்திரோபாயங்களை கையாள முடியாது போனது ஏன் என்ற கேள்வி எங்களுக்கு இருக்கின்றது.

இந்தக் காரணம் ஒரு புறமாகவும் அரச படைகளின் ஆதிக்கம் மறுபுறத்திலும் இருக்கிறது. அரச படைகளின் தந்திரபாயமான நகர்வுகளினால் இவர்கள் அழிவுகளை சந்தித்தார்கள் என்று காணுகிறோம். இரண்டு பக்கமும் துப்பாக்கிகள் பேசிக்கொண்டிருந்தன. அப்பொழுது பலம் வாய்ந்த துப்பாக்கி வெற்றி பெற்றிருக்கிறது. நான் முதலில் குறி;பபடுடதது போல துப்பாக்கிள் ஈவஇர்கமற்ற முறையில் நடந்து கொண்டது. எங்களுக்கு 1989ஆம் ஆண்டு நடந்து கொண்டதுபோல அதே நிகழ்வு நிலமை இன்று புலிகளுக்கு; நிகழ்ந்திருக்கிறது. நாங்கள் இடதுசாரி அமைப்பு என்றும் விடுதலைப் புலிகள் விடுதலைப் போரட்ட அமைப்பு என்றும் குறிப்பிட்டிருந்திர்கள். மக்கள் விடுதலை முன்னணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. 1971ஆம் ஆண்டிலும் சரி 1989 ஆம் ஆண்டிலும் சரி மக்கள் விடுதலை முன்னணி சிஙகள இலங்கை;காக போராடவில்லை.

ஆனால் விடுதலைப் பலிகள் தங்கள் தாரக மந்திரமாக சொல்லிக்கொண்டிருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் ‘தாகம் தமீழ்ழ தாயகம்’ என்கின்ற கோட்பாடு. இந்த நாட்டை பிரிக்கின்றதை நாங்கள் எதிர்கின்றோம். ஒரு நாட்டைப் பிரிப்பது என்பது அந்த நாட்டின் தொழிலாள வர்க்கத்தை பிரிப்பதற்கு சமனானது. தொழிலாளர் வர்கத்திற்குரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரி சந்தர்பங்கள் இல்லாமல் போகலாம். அத்தோடு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தாயகம் என்று குறிப்பிடுகின்ற பொழுது மறுபுறத்தில ;நாங்கள் தென்பகுதியில் வாழுகின்றோம். வடகிழக்கில் மாத்திரமல்ல தமிழர்கள் வாழுகின்றார்கள். இந்த நாடு முழுவதும் வாழுகிறார்கள். வடக்கிழக்கு தமிழ் மக்களுக்கு தயாகம் என்கின்றபோது வடகிழக்கு தவிhந்த இடங்களில் வாழ்கின்ற மக்களுக்கு எது தாயகம் என்கின்ற கேள்வி எழுகின்றது.

ஒரு பக்த்தில் தாய் நாடு இருக்கின்ற தமிழர்களும் இன்னொரு புறத்தி; தாய்நாடு இல்லாத தமிழர்கள் இன்னொரு புறத்தில் இருக்கின்றார்கள். இன்று இலங்கையில் 74 சதீத மக்கள் தமிழ் சிங்கள மக்களே வாழுகிறார்கள். கொழும்பு நகரத்தில் இருக்கின்ற வியாhபார நிலையங்கள் அனைத்தும் தமிழ் வியாபாரிகள் கையிலதான் இருக்கின்றன. அப்படி தனி நாடு ஒன்று ஏற்படுகின்றபோது சிஙகள இனவாதிகள் சொல்லுவார்கள் உங்களுக்கு தனிநாடு இருக்கிறது. எங்களையும் முஸ்லீம்களையும் விரட்டியடித்திருக்கிறார்கள். உங்கள் ஈழத்திற்கு போங்கள் என்று சொல்லுவார்கள். கர்நாடகாவில் காவிரி கங்கை கூடுகின்றது. பக்கத்தில் தமிழ் நாடும் ஆந்திராவும் இருக்கின்றது. இந்த தேசத்தை திராவிட தேசம் என்றார்கள். முன்பு திராவிட தேசம் ஒன்று சேருங்கள் என்று போராடியவர்கள் இன்று காவிரியில் ஓடுகின்ற தண்ணீரைக் குடுப்பதற்கு மறுக்கிறார்கள்.

அப்படியான சந்தர்பத்தில் நாளை இங்கொரு ஈழம் உருவாக்கப்படுகின்ற பொழுது நாளை அங்கு சிங்கள இராச்சயிம் உருவாகும். இங்கு ஈழ ராஜ்சியம் உருவாகும். ஈழப்படைகள் தமது எல்லைப் பிரசேதத்தை காப்பதற்கான நடவடிகெ;கைளை எடுப்பார்கள். அந்த எல்லையை வவுனியாவல் போடுவதா? முதவாச்சியில் போடுவதா? அநுராதபுரத்தில் போடுவதா? ஏன்ற பிரச்சினைகள் உருவாகும். மறுபறுத்தில் சிஙகளப் படைகள் தங்கள் எல்லைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும். அதனால் சதா காலமும் யுத்தம் இந்த நாட்டில் நடைபெறும். அப்படியான வேளையில் அமரிக்கா இந்தியா நோர்வே தங்கள் ஆயுளுதங்களை இரண்டு சாராருக்கும் கொடுத்து நன்றாக யுத்தத்தை தொடருங்கள் என்று எங்கள் வளங்களை சூறையாடும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

அப்டியான சந்தர்பத்தில் இந்த நாட்டில் ஒரு வர்க்கப்போரட்டத்தைப் பற்றியோ சோசலிச சமூதாயத்தின் விடுதலை பற்றியோ இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களின் இன ஒற்றுமை பற்றியோ சிந்தித்துக்கூட பார்க்க முடியாத நிலை ஒன்று ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

தனிப்பட்ட ரீதியாக அவர்களின் தியாகங்கள் அர்பணிப்புகளுக்கு தலை வணங்குகிறோம். பிரபாகரன் இறுதி இந்த வன்னி நிலப்பரப்பிலிரந்து உயிர் நீத்திருக்கிறார்கள். அதற்காக தலை வணங்குகின்றோம். உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக இருந்தவர்கள் ஏன் இப்படிப்பட்ட அழிவுகளைச் சந்தித்தார்கள் என்ற கேள்வியிருக்கிறது. ஆனால் பிரிவினை பற்றி முன்னெடுத்த கொள்ளையை அடிப்படையிலேதான் மக்கள் விடுதலை முன்னணி விடுதலைப் புலிகளை எதிர்த்திருந்தது;. இன்று அவர்களுக்கு அவலங்கள் அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்று அதற்கு மாற்றமாக அரசியல் நிலை ஒன்றுக்கு தமிழ் மக்கள் செல்ல வேண்டியுள்ளது.

07
தீபச்செல்வன்:

நீண்ட காலத்தின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களது இந்தப் பயணம் மக்கள் எப்படி இங்கு வாழ்கிறார்கள் என்பதை உஙகளுக்கு தரிசனமாக காண்பித்திருக்கும். தெற்கில் உள்ள நிலவரங்களுடன் இங்கத்தைய நிலவரங்கள் எந்தளவு வேறுபடுகின்றன?

இராமலிங்கம் சந்திரசேகரன்:

தென்னிலங்கையில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் ஒரு சில ஊடகங்கள் யாழ்பாணத்து மக்களைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தவை அனைத்தும் பொய் என்பதை நேரடியாக பார்க்கும் பொழுது நிருபணமாகிறது. பல கிராமங்களுக்கு சென்று பார்த்தேன். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் தொழில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

30 வருட யுத்தத்தால் ஒவ்வவொரு குடும்பத்திலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார். கடந்த வன்னி இறுதி யுத்த்தில் பாதிக்கப்ப்டட குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் அனைவரும் வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற மக்களது வாழ்க்கையில் பல்வேறு சிதைவுகள் பல்வேறு இடிபாடுகள் ஏற்பட்டுள்ளன. அந்த சிதைவுகளையும் இடிபாடுகளையும் நிவர்த்தி செய்து தமிழர்களுக்கே உரிய பன்பாட்டைக் கொண்ட யாழ்ப்பாணத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். அண்மையில் இந்தியாவிலுள்ள கவிஞர் ஜெயபாலனுடன் உரையாடி பொழுது அவரிடம் ஒரேயொரு வாhத்தை கேட்டேன். ஐய்யா ஜெயபாலன் அவர்களே எங்களுக்கு பழைய ஜெயபாலன் வேண்டும். பழைய ஜெயபாலனின் கவிதைகள் முழு நாட்டுக்கும் உரியது. அவரது இலக்கியத் தடங்களை நான் தேடிப் பார்கின்ற பொழுது ஒடுக்கப்படுகின்ற மக்களின் பால் மேலோஙகி; நிற்கிறது. கடந்காலத்தில் பல கல்விமான்கள் அனைவரையும் உருவாக்கிய மண். அவைகளுக்கு இன்று சிதைவுகள் இடிபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த சிதைவுகளை இடிபாடுகளை நிவர்hத்தி செய்து கொண்டு பழைய யாழ்ப்பாணத்தை கட்டி எழுப்ப வேண்டிய தேவையிருக்கிறது. இவ்வாறான நிலையிலும் தமிழர்களுக்குரிய பாரம்பரியத்தை பண்பாட்டை கட்டிக் காக்கின்றவர்கள் இன்னும் துடிப்போடு இருக்கின்றார்கள் என்பதை இங்கு பார்த்தேன். எதிர் வரும் காலத்தில் இவை அனைத்திற்கும் இந்த மக்கள் பதில் சொல்லுவர்hகள்.
08
தீபச்செல்வன்:

வடக்கு கிழக்கில் வலிந்த சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறலாம் என்ற ஐய்யம் மக்கிளிடம் இருக்கிறது. பூர்வீகமாக மக்கள் வாழுகின்ற நிலத்திலிருந்து அவர்களை பிடுங்குவது அல்லது அந்த நிலத்தை பறிப்பது மிகுந்த நியாமற்றது. இந்த ஐய்யத்தை நீங்கள் எப்படி பார்க்கறிர்கள்?

இராமலிங்கம் சந்திரசேகரன்:

வலிந்த குடியேற்றம் என்பது நீண்ட காலமாக இந்தப் பகுதியில் இருக்கின்ற பிரச்சினை. ஓரு மக்கள் ஒரு பிரதேசத்தில் வாழுகின்ற போது அவர்களது பிறப்பை கேள்விக்குறியாக்கிவிட்டு அந்தப் பிரதேசங்களில் அவர்களது பாரம்பரியத்திறகு உட்பட்ட nhபருட்கள் அனைத்தையும் செயலற செய்து விட்டு இன்னொரு மக்கள் கூட்டத்தை குடியேற்றம்ம செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இதை மக்கள் விடுதலை முன்னணியாகிய நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் திடமாக குறிப்பிடுகின்றோம்.

இந்த வலிந்த குடியேற்றங்கள் திருகோணமலை மாவட்டத்திலேயே கூடுதலாக நடைபெற்றிருக்கின்றது. அண்மையில் நான் அங்கு சென்று பாhத்தேன். அங்கு சிங்கள மக்களை குடியேற்றவதைவிட பல்லாயிரக்கணக்கான வியாhபாரிகளுக்கு நிலங்கள் தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளன. அதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு பிரதேசத்தை அழிப்பதற்கு ஒரு மக்கள் கூட்டத்தை அழிப்பதற்கு அல்லது அந்த மக்களை சிறுபான்யைமாக சிதைப்பதை நோக்கமாக கொண்டு குடியேற்றங்கள் நடைபெற்றிருந்தால் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நன்றி: உன்னதம் ஜனவரி 2010

போரும் வாழ்வும்

வலைப்பதிவு பட்டியல்

உன்னதத்திற்கு வழங்கிய நேர்காணல்

-----------------------------------

நிந்தவூர் ஷிப்லிக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தமிழ் பத்திரிகையான தினகரன் தணிக்கை செய்து உரையாடலை வெளியிட்டுள்ளது. இது எமது உரையாடலை திசை திருப்ப நடந்த செயலாகும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற அடக்குமுறைகள் யுத்தத்திற்காக அரசு வெலவழிக்கும் பணங்கள் முஸ்லீம்கள் அப்பாவி சிங்கள மக்கள் முதலியோர் பாதிக்கப்படுவது முதலிவை பற்றி பேசிய பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கேவலமான நடவடிக்கை. இது மாதிரியான செயல்கள் ஊடக சுகந்திரத்திற்கும் உன்மைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.

தீபச்செல்வன்

சித்திராங்கனுக்கு வழங்கிய நேர்காணல்

தளவாய்சுந்தரத்திற்கு வழங்கிய நேர்காணல்