Monday, May 17, 2010

கனவிலும் நினைக்க முடியாத அளவுக்கு எங்கள் பாடசாலைச் சூழல் உருக்குலைந்து போயிருந்தது : கிளிநொச்சி மகா வித்தியாலயப் பாடசாலை அதிபர் பங்கயற்செல்வன்


நிர்மூலமான சூழலில் சிதைவடைந்த கட்டிடங்களின் நடுவில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது கிளிநொச்சி மகா வித்தியாலயம். எல்லாவற்றையும் இழந்த பொழுதும் இழக்க முடியாத கல்விக்காய் ஏங்கும் பிள்ளைகளால் இந்தப் பாடசாலை மீண்டும் பொலிவு பெற்று வருகின்றது. தேவைகளும் பிரச்சினைகளும் என்று நாளாந்தம் பல்வேறு நெருக்கடிகளுடன் மனத்தால் சிதைவுகள் காயங்களை உடைய பிள்ளைகளுடன் தனது அடுத்த பயணத்தை தொடங்கியருக்கின்றது இந்தப்பாடசாலை. இந்தப் பாடசாலையின் முதல்வர் திரு பங்கயற்செல்வன், ஆசிரியை சுரமஞ்சரி, பாலேந்திரன், மாணவன் வேலு நிக்ஷன் முதலியவர்களுடன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக இந்த உரையாடலை நடத்தியிருந்தேன்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நடத்திய உரையாடல்

GTN ற்காக தீபச்செல்வன் :

கனவிலும் நினைக்க முடியாதளவுக்கு எங்கள் பாடசாலை உருக்குலைந்து போயிருக்கிறது என்று குறிப்பிடும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் பங்கயற்செல்வன் சிதைவுகளுக்குள்ளான அலுவலகம் ஒன்றுக்குள் இருந்து பேசுகின்றார். கூரையை இழந்து சிதைவின் அடையாளமாக அமைந்திருக்கிறது அவரது அலுவலகம். அருகில் வகுப்புக்கள் நடக்கின்றன. பல பணிகளுடன் அதிபர் பங்கயற்செல்வன் இருந்து கொண்டிருக்க அவரது அலுவலகத்திற்கு சென்று உரையாடத் தொடங்கினேன்.

நாலாம் கட்ட யுத்தத்தின் முன்பான உங்கள் பாடசாலையின் அடைவும் தற்போதைய நிலையும் எப்படி இருக்கிறது?



பங்கயற்செல்வன்:

எங்களுடைய பாடசாலையைப் பொறுத்தவரையில் 80 ஆண்டு வரலாற்றைக் கொண்டது. 80 வருடங்களைக் கொண்ட இந்த வரலாற்றில் சாதனைகளும் பெறுபேறுகளும் என்று வளர்ச்சியான நிலையிலேயே போய்க்கொண்டிருந்தது. இடப்பெயர்வுக்கு முன்னரான காலம் பெற்காலம் என்று நாங்கள் கருதுகிறோம். கிளிநொச்சி மகா வித்தியாலயம் ஒரு தடைவ அல்ல பல தடவைகள் இடப்பெயர்வைச் சந்தித்திருக்கிறது. கிளிநொச்சி நகரின் மத்தியில் இந்தப் பாடசாலை இருப்பதன் காரணமாக கிளிநொச்சி எந்த சந்தர்ப்பத்தில் போருக்கு முகம் கொடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்தப் பாடசாலை இடம்பெயருகின்ற ஒரு நிலமைக்கு தள்ளப்பட்டது. ஒவ்வொரு தடவையும் நாங்கள் இடம்பெயர்ந்து போய் மீண்டும் இந்த வளாகத்திற்கு திரும்பி வரும்பொழுது வெறும் கற்குவியல்களாக இருந்து பின்னர் கட்டி எழுப்பப்ட்ட வரலாறாக இருக்கின்றது.

எங்கள் பாடசாலையில் நாங்கள் இடம்பெயருவதற்கு முற்பட்ட காலம் பெறுபேறுகளிலும் சரி சாதனைகளிலும் சரி பௌதீக வளங்களிலும் நாங்கள் மிக உன்னதமாக இருந்த காலமாக இருந்தது. கா.பொ.த உயர்தர வகுப்புக்களில் மாணவர்கள் சாதாரணமாக 3 ஏ பெறுபெறு எடுக்கின்ற நிலமையும் கா.பொ.த சாதாரண தரத்திலே மாணவர்கள் சாதாரணமாக 10 ஏ பெறுபேறு எடுக்கின்ற நிலமையும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையிலே 25 முதல் 30 வரையான மாணவர்கள் சித்தி எய்துகின்ற நிலமையும் சாதாரணமாக எங்கள் பாடசாலையில் இருந்தது.

எங்களது பாடசாலையில் சாதாரணமான இலகுவான சூழ்நிலையில் மாணவர்கள் பெறுபேற்றைப் பெறுகின்ற அளவுக்கு நிலமைகள் சாதகமாய் இருந்தன. அப்படி ஒரு நிலையை ஆசிரியர்களும் மாணவர்களும் எங்களுடைய சமூகமும் தோற்றுவித்திருந்தது. கல்வியுடன் மட்டுமன்றி கல்வியுடன் இணைந்த புறநிகழ்வுகளிலும் எங்களது பாடசாலை அகில இலங்கை ரீதியாக சாதனைகளை படைத்து நின்றது கடந்த இடப்பெயர்வின் முன்னர். தமிழ்த்தினப்போட்டிகளாயினும் சரி, விளையாட்டுப்போட்டிகளாயினும் சரி நாடளாவிய ரீதியிலான எல்லாப் போட்டிகளிலுமே எங்களது பாடசாலை தனக்கென தனியான அடையாளங்களை பதித்து நின்ற காலம்.

மாணவர்கள் ஏறத்தாழ 2400க்கு மேற்பட்டவர்களும் ஆசிரியர்கள் 74 வரையிலான ஆசிரியர்களும் இடப்பெயர்வின் முன்னர் கல்வி கற்று வந்தார்கள். கல்வி கற்பித்து கொண்டு வந்தார்கள். ஆனால் இடப்பெயர்வு எங்கள் பாடசாலையின் சகல நிலமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 2008ஆம் ஆண்டு இரண்டாம் தவனையுடன் எங்கள் பாடசாலை இடம்பெயர்ந்தது. 2008 மூன்றாம் தவணையை தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் நாங்கள் வைத்து மாலைநேரப் பாடசாலையாக இயக்கினோம்.



2009 ஜனவரி தர்மபுரம் மாகா வித்தியாலயத்தில் வைத்து தனித்துவமாக இயக்குவதற்கு முடிவெடுத்தோம். ஆனால் அப்படி இயங்க முடியவில்லை. அன்று முதல் இடம்பெயர்ந்த எமது பாடசாலை தன் செயற்பாடுகளை முழுமையாக இழந்தது. பின்னர் நாங்கள் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து முகாங்களுக்கு சென்று மீண்டும் 2010 ஜனவரி மாதம் எங்களது பாடசாலைக்கு தரும்பிய பொழுது எங்களது பாடசாலை வளாகம் இப்படி இருக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்க முடியாத அளவுககு எங்கள் சூழல் உருக்குலைந்து போயிருந்தது.

முதல் முதல் கட்டப்பட்டிருந்த 2 மாடி கட்டிடம் சுக்குநூறாக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்தது. எந்தக் கட்டிடங்களுக்குமே கூரைகள் இருக்கவில்லை. ஆரம்பப் பிரிவு கட்டிடங்களில் ஒரு கட்டிடம்கூட இல்லாத நிலையில் அழிந்து போயிருந்தது. பாடசாலை வளாகத்தில் கால் வைக்க முடியாதளவுக்கு பாடசாலை யுத்தத்தால் மிக பாதிப்படைந்து போயிருந்தது. இப்பொழுது பாடசாலை தொடங்கி நான்கு மாதங்கள் ஆகின்றன. இதற்குள் பாடசாலைக்குள் நடமாடக்கூடியளவிற்கு சூழலை உருவாக்கியிருக்கிறோம். மாணவர்களுடைய எண்ணிக்கையுடன் ஒப்பிடுகின்ற பொழுது கட்டிடங்கள் போதாத நிலையில் இருக்கின்றன. 50 வீத கட்டிட வசதிகூட இல்லாத நிலையில் உள்ளது.



GTN ற்காக தீபச்செல்வன் :

போரினால் உங்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என்ன தாக்கங்களை எதர்ககொண்டுள்ளார்கள்? ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வகுப்பறை செயற்பாடுகள் எப்படி உள்ளன? அது தொடர்பான ஆய்வுகள் எதையாவது செய்திருக்கிறீர்களா?

பங்கயற்செல்வன்:

பாடசாலையில் மாணவர்கள் ஆசிரியர்கள், இறந்துபோனது பாதிக்கப்பட்டது என்ற பார்க்கிற பொழுது நாங்கள் அதிளவு பாதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கிறோம். மூன்று ஆசிரியர்களும் இரண்டு பணியாளர்கள் இறந்திருக்கிறார்கள். இரண்டு ஆசிரியர்கள் தமது துணைகளை இழந்ததோடு, நான்கு ஆசிரியர்கள் தமது குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் ஏறத்தாழ 60க்கு மேற்பட்ட மாணவர்கள் போரில் இறந்து போயிருக்கிறார்கள். இது எங்களுக்கு மிக வேதனை தருகின்ற விடயமாகும். கண்பார்வை இழந்த மாணவர்களும் பால் ஒன்றை இழந்த மாணவனும் இருக்கிறார். அதைவிட பலர் காயங்களுடன் இருக்கின்றார்கள்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் மிக நீண்ட காலமாக போருக்கு முகம் கொடுத்தால் எறிகனை ஷெல் பங்கர் வாழ்க்கை விமானக் குண்டு வீச்சின் பாதிப்பில் கூடுதலாக அவர்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாக இயல்பான கல்வியை அவர்கள் வழங்குவதிலும் மாணவர்கள் அதை பெற்றுக்கொள்வதிலும் இடர்களை நாங்கள் எதிர் கொள்கனிறோம். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளானதை நாங்கள் வகுப்பறைகளில் பார்க்க கூடியதாக உள்ளது. அது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்ற சூழலில் ஆசிரியர்கள் இன்னும் நிரந்தரமாக கிளிநொச்சிக்கு திரும்பவில்லை. 30 வீதமான ஆசிரியர்கள் மட்டும் தமது சொந்த இடத்தில் குடியேற வந்திருக்கிறார்கள். ஏனைய ஆசிரியர்கள் வவுனியாவில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாளாந்தம் வந்து செல்கின்றார்கள். அவர்களிடம் முழுமையான செயற்பாடுகளை நாங்கள் எதிர்பார்க்க முடியாத சூழ் நிலை இருக்கின்றது.

ஆனால் ஆசிரியர்களின் மாணவர்களின் தளராத மனம் மாணவர்களுடைய கல்வியை வளம் படுத்தும் என்று நான் நினைக்கின்றேன். முன்பு இந்த ஆசிரியர்கள்தான் எங்கள் பாடசாலையின் உச்ச கட்ட வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள். ஆனால் ஆசிரியர்கள் போரின் தாக்கத்திற்கு உற்பட்டதன் காரணமாக அவர்களிடம் இருந்து முழுமையான செயற்பாட்டை எதிர்பார்க்க முடியாமல் உள்ளது.

GTN ற்காக தீபச்செல்வன் :

இன்றைய சூழலில் பாடசாலையில் என்ன தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன?

பங்கயற்செல்வன்:

இந்தப்பாடசாலையைப்பொறுத்தவரையில் தேவைகளைத்தான் பட்டியல்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன. நிறைவுகள் என்று பார்க்கும்பொழுது அதன் பட்டியல் மிகச் சிறியதாக உள்ளது. பௌPதக ரீதியான தேவைகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் 50 வீதமான தேவையைக்கூட எட்டவில்லை. இரண்டு கட்டிடங்கள் மட்டும் கூரை போடப்பட்டுள்ளது. அதில் ஒன்பது வகுப்பறைகள் இருக்கின்றன. ஒரு மண்டபம் இருக்கின்றது. அந்த மண்டபத்தில் நான்கு வகுப்பறைகள் வைக்ககூடிய சூழ்நிலை இருக்கிறது. ஏறத்தாழ 35 வகுப்பறைகள் தேவையான சூழ்நிலையில் 13 வகுப்பறைகள் மட்டுமே இருக்கின்றன. அதிபர் அலுவலகத்தை நான் கூரையில்லாத ஒரு அலுவலகத்திலேதான் வைத்திருக்கிறேன். மழை பெய்தால் மழைநீர் முழுவதும் அலுவலகத்துக்கும் வரும். மாணவர்கள் படிக்ககூடிய வகுப்பறையை வீணாக்க கூடாது என்ற படியினால்தான் அந்த அலுவலகத்தை கூரையில்லாத மண்டபத்தில் வைத்திருக்கிறேன்.

கட்டிடங்கள் நிறைய தேவைப்படுகின்றன. திருத்தக்கூடிய கட்டிடங்களை திருத்த எங்களிடம் நிதி இல்லை. யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் யுனொப்ஸ் நிறுவனம் அமைத்து தந்த நான்கு கட்டிடங்கள் வெறும் அத்திவாரத்துடனும் கம்பிகளுடனும் காட்சி தருகின்றன. இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் செய்து தர வேண்டும். தளபாடங்கள் பெரும் பற்றாக்குறையாக உள்ளன. எங்களுடைய தளபாடங்களை தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் கொண்டுபோய் வைத்தோம் அங்கு முழுமையான தளபாடங்கள் இருப்பதாக அவதானிக்க முடியி;;ல்லை. அத்தோடு பொருத்தமற்ற தளவாடங்களில் மாணவர்கள் இருக்கின்ற நிலமையும் காணப்படுகின்றது.




GTN ற்காக தீபச்செல்வன் :

மீண்டும் பாடசாலையை கட்டி எழுப்புவதில் முக்கியமாக யாருடைய பங்கை எதிர்பார்க்கிறீர்கள்?

பங்கயற்செல்வன்:

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஆயிரம் ஆயிரம் மாணவர்கள் உலகம் எங்கும் வியாபித்து இருக்கின்றார்கள். அவர்களிடம் உதவுகின்ற வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவர்கள் கல்வி கற்ற இந்தப் பாடசாலையை அவர்கள் நினைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அவர்களால் முடிந்த உதவிகளை செய்து இந்தப் பாடசாலையை கட்டி எழுப்ப உத வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

தங்கள் கடினமான உழைப்பில் பெறும் நிதியில் சிறுதொகையை இந்தப் பாடசாலையின் அபிவிருத்திக்கு வழங்கினால் பொரும் உதவியாக இருக்கும். அவர்கள் இதற்காக சிறு சிறு குழுக்களாக சங்கங்களாக இயங்கி இந்த சிறிய சிறிய உதவியை செய்யலாம் என நான்; எதிர்பார்க்கிறேன். அது இந்தப்பாடசாலையை பாரிய அளவில் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். எமது பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று மிக நலிவடைந்து போயிருப்பதால் இன்று புலம்பெயர்ந்த எமது பாடசாலையின் பிள்ளைகளிடமும் உறவுகளிடமும் உதவிகளை எதிர்பார்கிறேன்.


GTN ற்காக தீபச்செல்வன் :

காலில் காயமடைந்த ஆசிரியை ஒருவர் ஊன்று கோல்களின் உதவியுடன் வகுப்பறைக்கு சென்று கொண்டிருக்கிறார். உயர்தர மாணவர்கள் ஆர்வமாக இருந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் முகங்கள் மௌனமாக பல செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. ஆரம்ப வகுப்பு ஒன்றில் ஆசிரியை சுரமஞ்சரி பாலேந்திரன் மாணவர்களுடன் கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

போரின் பிறகு வகுப்பறையில் சந்திக்கின்ற மாவர்களின் மனநிலை மற்றும் கல்வி நிலை எப்படி இருக்கின்றது. முன்னேற்றகரமான சூழலை உருவாக்க முடிகிறதா?



சுரமஞ்சரி பாலேந்திரன் :

இந்தப்பாடசாலையில் நான் ஒரு ஆரம்பரிவு ஆசிரியராக இருக்கின்றேன். சில விடயங்களை மறக்க வேண்டும். சில விடயங்கள் மறக்க முடியாதவை. சில இன்பமான காரியங்கள், மகிழ்ச்சிகரமான விடயங்கள், கவர்ச்சிகரமானவற்றை நினைவுக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. ஆரம்ப காலத்தில் மாணவர்கள் மிக விரும்பும் ஒரு சூழலில்தான் இந்த மாணவர்கள் கல்வி கற்று வந்தார்கள். தற்போது போரினால் நாங்கள் மிகுந்த பாதிப்புக்களை எங்களுக்குள்ளே தாங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆரம்ப பிரிவைச் சேர்ந்த இந்த சிறுவயது மாணவர்கள் பல சூழலில் இருந்து வருகின்றார்கள்.

தாய் தந்தையரை, சகோதரர்களை இழந்திருக்கிறார்கள். பழைய மாணவர்களாக இவர்களைப் பார்த்து கற்பிக்க முடியாதுள்ளது. தவிர அவர்களுக்கு இயல்பாக கல்வி கற்கக்கூடிய இடவசதிகள் மிகப் பற்றாக்குறையாக உள்ளன. 4 வகுப்புக்கள் இருக்க வேண்டிய மண்டபத்தில் 8 வகுப்புக்களை நடத்துகிறோம். இப்படி பல பிரச்சினைகளை எதிர் நோக்கியவர்களாக மாணவர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மகிழ்வு ஊட்டுகிற கவர்ச்சிகரமான கல்வியை வழங்குவதில் இடநெருக்கடி பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.



முன்பு நாங்கள் பெற்றோர்களின் உதவியுடன் ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு அடைக்கப்பட்ட வகுப்பறை ஒன்றை அமைத்திருந்தோம். அந்த வகுப்பறையில் இரண்டு மாதங்கள் மட்டுமே அந்த அடைக்கப்பட்ட வகுப்பறையில் கல்விச் செயற்பாடுகளல் ஈடுபட்டோம். மிக மகிழ்வுகரமாக கல்வி கற்பித்தோம். அவ்வளவு சொத்துக்களும் அழிக்கப்ட்ட நிலையிலே மீள இங்கு வந்திருக்கிறோம்.

மாணவர்கள் தங்கள் வலிகளை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தன்னை இருட்டு மயமாக்கி சோகத்தில் இருப்பதை காண்கின்றோம். அவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சித் தன்மையான கல்வி கற்பிக்கும் முறைதான் தேவைக்கபடுகின்றது. அதற்குரிய வளங்கள் எங்களுக்கு தேவைப்படுகின்றன. அவர்களுக்கு ஒரு சிறுவர் விளையாட்டு பூங்கா இருந்தால் அவர்கள் சோகங்களை மறக்கும் நிமிடங்களை உருவாக்க முடியும். ஆனால் பல விடயங்களுக்கு விடை காண முடியாதவர்களாக எங்கள் நாளாந்த செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.


GTN ற்காக தீபச்செல்வன் :

பாடசாலை வளாகத்தில் ஒற்றைக்காலை இழந்துபோன வேலு நிக்ஷன் என்ற மாணவன் ஊன்று கோல்களின் உதவியுடன் வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தான். எட்டாம் வகுப்பில் படிக்கும் நிக்ஷன் மிக வேகமாக பேசுகின்றான். அவனிடம் ஏதோ ஒரு ஆர்வமும் துடிப்பும் இருக்கிறது. தான் காலை இழந்து போன சம்பவத்தை விபரிக்கும் பொழுது அவனது முகத்தில் அதிர்ச்சியும் வலியும் தெரிகின்றன.

உங்கள் கல்வி நடவடிக்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது? பாடசாலைக்கு வருவதில் எதும் சிரமங்கள் நேர்கின்றனவா?



வேலு நிக்ஷன்

என்னை அம்மா அல்லது அப்பாதான் பாடசாலைக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள். முதலில் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்து தான் பாடசாலைக்கு வந்தேன். பின்னர் அன்பளிப்பாக எனக்கு ஒரு சைக்கிள் தரப்பட்டது. அதில்தான் என்னை ஏற்றி வந்து விடுகின்றார்கள். இப்பொழுது ஓரளவு பிரச்சினையில்லாது நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆமியிடம் சரணடைய வந்த வேளையில் அந்த இடங்களில் மிதிவெடி இருக்கின்ற என்பதால் திரும்பிச் சென்ற வேளையில் எங்களை தடுத்து இராணுவம் எறிந்த செல்லினால் நான் காயப்பட்டேன். எனது கால் அங்கு சிதைவடைந்தது. அந்த இடத்திலேயே எனது அண்ணா இறந்துபோனான். அம்மாவுக்கு முகம் முழுவதும் காயம். அக்காவுக்கு உடல் எங்கும் காயம்.

பின்னர் நான் கடலால்தான் கொண்டு வரப்பட்டேன். மன்னார், குருநாகல், வவுனியா என்று பல வைத்தியசாலைகளில் எனக்கு சிகிச்சைகள் நடந்தன. பின்னர் காயம் ஆறியதும் முகாமுக்கு என்னை அனுப்பினார்கள்.

(இந்த நேர்காணலை வெளியிடுபவர்கள் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நடத்திய உயைராடல் என்பதை குறிப்பிட்டு வெளியிடலாம்)

0 comments:

போரும் வாழ்வும்

வலைப்பதிவு பட்டியல்

உன்னதத்திற்கு வழங்கிய நேர்காணல்

-----------------------------------

நிந்தவூர் ஷிப்லிக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தமிழ் பத்திரிகையான தினகரன் தணிக்கை செய்து உரையாடலை வெளியிட்டுள்ளது. இது எமது உரையாடலை திசை திருப்ப நடந்த செயலாகும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற அடக்குமுறைகள் யுத்தத்திற்காக அரசு வெலவழிக்கும் பணங்கள் முஸ்லீம்கள் அப்பாவி சிங்கள மக்கள் முதலியோர் பாதிக்கப்படுவது முதலிவை பற்றி பேசிய பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கேவலமான நடவடிக்கை. இது மாதிரியான செயல்கள் ஊடக சுகந்திரத்திற்கும் உன்மைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.

தீபச்செல்வன்

சித்திராங்கனுக்கு வழங்கிய நேர்காணல்

தளவாய்சுந்தரத்திற்கு வழங்கிய நேர்காணல்