Monday, May 17, 2010

எமது பண்பாடு அழிக்கப்படுவதையும் வரலாறு மறைக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர் வைத்தியக் கலாநிதி எஸ். யமுனாநந்தா


வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த தடயங்கள் கிடக்கின்றன என சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு நோக்கத்தில் கருத்துக்களை பரப்பும் சூழலில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொழுது வரலாற்று, பண்பாட்டு தடயங்களை அழிக்கப்படுகின்றன என்றும் குரல்கள் எழுகின்றன. பண்பாட்டின் வாயிலாகவே அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் வடகிழக்கில் தமிழர்களின் வரலாறு சார்ந்த விடயங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதாகவும் குறிப்பிடும் தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி எஸ். யமுனாநந்தா, அதற்கான நடவடிக்கைகளை குறித்த மையம் ஆரம்பித்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். பிராந்திய சுகாதார பணிமனையின் யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் கடமையாற்றும் கலாநிதி யமுனாந்தா அவர்களை குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக சந்தித்து இந்த நேர்காணலை செய்திருந்தேன்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நடத்திய உரையாடல்

GTN இற்காக தீபச்செல்வன்:


இனரீதியான பண்பாட்டு ரீதியான நெருக்கடிகள் எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான சூழலில் தமிழர் பாண்பாட்டு மையத்தை உருவக்கியதன் அவசியம் மற்றும் தேவை என்னவாயிருக்கிறது?

Dr. யமுனாநந்தா:


தமிழர்களின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் எமது வரலாற்றை உறுதிப்படுத்துவதன் மூலமே எமது இருப்பை பாதுகாக்கலாம். அதற்காகவே நாங்கள் தமிழர் பண்பாட்டு மையத்தை உருவாக்கினோம்.

கந்தரோடையில் 1918, 1919ம் நூற்றாண்டில் ஒரு அகழ்வாராட்சி நடைபெற்றது. அதில் ஜோண் போல் பீரிஸ் என்பவர் முப்பத்தைந்து நாணயங்களை கண்டெடுத்திருக்கிறார். அதேவேளை வல்லிபுரத்தில் இரண்டு நாணயங்களை அவர் எடுத்துள்ளார். இந்த நாணயங்கள் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள நாணயங்களுடன் ஒத்த இயல்பைக் காட்டுகின்றன. இவை புத்தர் இந்தியாவில் வாழ்ந்த காலத்து நாணயங்கள் அடுத்து இவை திராவிட பண்பாட்டுக்குரிய நாணயங்கள். இதன் மூலம் பண்டைய யாழ்ப்பாணத்து தமிழ் மக்களில் சிலர் பௌத்த தர்மத்தையும் குறிப்பிட்டளவு பின்பற்றியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஆனால் இதை சிங்கள பௌத்தர்கள் மறுத்து தங்களது நாகரிகம் இங்கிருந்தது என்ற தவறான ஒரு கருத்தை நிலைநாட்ட வருகிறார்கள்.

இத்தகைய வரலாற்று ஆதாரங்களை வலியுறுத்துவதன் மூலம் தான் எமது இனத்தின் இருப்பை உறுதிப்படுத்த முடியும். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். கந்தரோடையில் அலெக்ஸ்சாண்டர் மன்னர் காலத்து நாணயங்களும் எடுக்கப்பட்டன. அவர்கள் இதுதங்களுடைய நாடு இது என்று வரவில்லை. இது புவிசார் அரசியலில் பண்டைய காலத்திலும் யாழ்ப்பாணம் முதன்மை பெற்றுள்ளது என்பதனைக் காட்டுகின்றது. தற்காலத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த வருட அழிவிற்குப் பின்பும், எமது பண்பாட்டை உறுதிப்படுத்த வரலாற்று ரீதியாகவும் சமூக விஞ்ஞான ரீதியாகவும் எடுத்துக் கூற வேண்டும் என்பதற்காக தமிழர் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட்டது.


தமிழர்களுக்கு கற்பிக்கப்படும் வரலாறு தவறானது. தமிழர்களின் உண்மையான வரலாற்றை மானிப்பாய் இந்துக்கல்லூரியின் ஆசிரியர் ஜி.எஸ் நவரட்ணம் 1956இல் எழுதியுள்ளார். அந்த வரலாற்றுப்புத்தகமே உண்மையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தவறான வரலாற்றைக் கற்பித்து கேள்விக்குள்ளாக்கும் தன்மையை நாங்கள் மாற்ற வேண்டும். இலங்கையில வடகிழக்கில் சேர, சோழ, பாண்டியர்களின் நாகரிகங்களுக்கான தடயங்கள் உள்ளன. ஏனென்றால் எங்கள் நாகரிகம் தமிழகத்து நாகரிகத்தோடு தொடர்புடையது. ஆனால்; வட இந்திய அரசாங்கம் தமிழகத்தின் பழைய வரலாற்றை அறிந்திருக்கவில்லை போலுள்ளது. இந்திய இராஜதந்திரம் என்பது தங்களை தாங்களே தின்னும் இராஜதந்திரத்தை கடைப்பிடிக்கின்றது. அவர்கள் தமிழகத்துக்கும் யாழ்ப்பாணத்திற்கும் வடக்கு கிழக்குக்குமிடையிலான தொடர்பை அழிக்கும் விதத்திலேயே நடந்து கொள்கிறார்கள். எங்கள் பண்பாடு சார்ந்த விடயங்களை மாணவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, நிர்வாகிகளுக்கு, இராஜதந்திரிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

எங்களுடைய பண்பாட்டில் இரண்டு விதமான குடியிருப்புக்கள் ஏற்பட்டன என்பதற்கு குளங்களை அண்டிய இடங்களில் ஆலயங்களை அமைத்து குடியிருந்திருக்கிறார்கள். முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஆலயங்ளை எடுத்துக்கூறலாம். அடுத்து நகரங்களை அண்டிய குடியேற்றங்களாக யாழ்ப்பாண நகரத்தின் மையத்தில் வண்ணை வைத்தீசுவரர் ஆலயம் காணப்படுகிறது. சாவகச்சேரியில் இருந்த ஆலயம் உடைக்கப்பட்டு இப்பொழுது நீதிமன்றக் கட்டிடமாக உள்ளது. பருத்தித்துறையிலும் இவ்வாறு காணப்படுகிறது. இந்தப் பழைய பண்பாடு;களை நாங்கள் எடு;துக் கூற வேண்டியுள்ளது. 1990ல் தொல்பொருள் ஆராட்சியாளர் எச்.பி.பி டெல் பொலநறுவையில் ஒரு நடராஜர் சிலையை எடுத்திருக்கிறார். அது ஒரு வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட சிலை. அது சோழ நாட்டுக்குரியது. அடுத்து திருக்யோணேசுவரர் ஆலயத்தில் காணப்படுகின்ற கல்வெட்டுக்கள் “முன்னை குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை பின்னே பறங்கி பிடிக்கவே மன்னா கேள் பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போன பின் மானே வடுக்காய் விடும்”; என்று இருக்கிறது. அதாவது கோணேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டு இலங்கையை யார் யார் கைப்பற்றுவார்கள் என்று குறிப்பிடுகின்றது. இப்படி வரலாற்று ஆதாரங்களையும் சமகால விடயங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது எமது வரலாற்றையும் அதன் பண்பாட்டையும் இனங்காணமுடிகிறது. எனவே நாம் இவற்றை வலியுறுத்தவும் முன்னெடுக்கவும் தமிழர் பண்பாட்டு மையத்தை உருவாக்கியிருக்கிறோம்.

GTN இற்காக தீபச்செல்வன்:


தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் பௌத்த பண்பாட்டுக்கான தர்மத்துக்கான தடயங்கள் கிடைப்பதாக சொல்லப்படுகின்றது. அது எந்தளவு உன்மை?

Dr. யமுனாநந்தா:


தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தமிழர்கள் பின்பற்றிய பௌத்த தர்மங்களுக்கான சில தடயங்கள் இருக்கின்றதே தவிர அவை சிங்களவர்களுக்கு உரியதல்ல. இது மிகவும் முக்கியமானது. அதைச் சிங்களவர்கள் தங்களுடையது என்று குறிப்பிடுவது தவறானது இதை நாங்கள் எடுத்துக் கூறவேண்டும். அவர்கள் நில ஆக்கிரமிப்பின் அடிப்படையில் தான் பார்க்கிறார்கள். ஆனால் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் பௌத்த தர்மம் தமிழ் மக்களாலும் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து தென் இலங்கையில் இருந்து பௌத்தம் இங்கு வந்தது என்று கூறுவது தவறானது.

GTN இற்காக தீபச்செல்வன்:


அண்மைக் காலமாக முப்பது வருட காலப் போராட்டத்தின் தடயங்கள் மர்மமான முறையில்; அழிக்கப்பட்டு வருகின்றன. இறந்தவர்களின் நினைவுத் தூபிகளை, வீடுகளை சிதைப்பது முதலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அழிப்பு நடவடிக்கைகள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

Dr. யமுனாநந்தா:


எங்களுடைய வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூடியது. சி.எஸ் நவரட்ணம் எழுதியுள்ள இலங்கைத் தமிழர் வரலாறு 1900 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 1950 ஆம் ஆண்டு வரை வந்த வரலாறு ஒரு விதமானது. 1970 இற்கு பின்னர் வந்த எமது வரலாறு மிகவும் வித்தியாசமானது. அந்த போராட்டகால தடயங்களை அழிப்பதன் ஊடாக வரலாற்றை முற்று முழுதாக மாற்ற முடியாது. பழைய கால வரலாறு சார்ந்த விடயங்கள் பதிவுகள் இணையத்தளங்களில் இல்லை. ஆனால் அண்மைய எமது வரலாற்று சம்பவங்கள் எல்லாமே இணையத்தில் தொகுப்பில் உள்ளது. இப்படியான அழிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளுவது மனித நேயத்திற்கு முரணானது. இப்படி அவர்கள் அழித்தாலும் அண்மைக்கால வரலாற்றை யாரும் ஒளிக்க முடியாது. ஆங்கிலேயர்களின் தொல்பொருள் ஆராட்சிகளில் உள்ள பண்டைய தொல்பொருள் சார்ந்த விடயங்களை எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனொன்றால் வரலாற்றை அடிப்படையாக் கொண்டுதான் ஒரு சமூகத்தின் நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.



GTN இற்காக தீபச்செல்வன்:


வரலாற்று விடயங்கள் மற்றும் தொல்லியல் சார்ந்த விடயங்கள் குறித்து அண்மைக்காலமாக எழுந்திருக்கும் நிகழ்வுகள் குறித்து தொல்லியல் துறை மற்றும் வரலாற்றுத் துறை சார்ந்தவர்கள் நிறுவுகின்ற தன்மைகள் இல்லாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விஞ்ஞானத்துறை சார்ந்த அடிப்படையில் இவற்றை பாதுகாக்க முற்படும் நீங்கள் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு இதன் அவசியத்தை எப்படி எடுத்துக் கூற முடியும்?

Dr. யமுனாநந்தா:


நாங்கள் வரலாற்று அம்சங்களை பாதுகாக்க உறுதிப்படுத்த சில நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறோம். அவை குறித்து நாங்கள் இப்பொழுது வெளியே குறிப்பிடும் பொழுது அவை தடைப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அது ஒரு ஆபத்தான விடயமாயிருக்கிறது. கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் எனும் பொழுது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை பத்தை விட மிக குறைந்து போயுள்ளது. எங்கள் இளம் சமூகம் வரலாறு பண்பாடு மொழி முதலியவற்றை கற்பதன் மூலமே அதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். ஒரு சில பேராசிரியர்கள் எமக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். பேராசிரியர் குமாரவடிவேல், மற்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் வரலாற்று ஆசிரியர்களுடன் இணைந்துதான் இந்த பண்பாட்டு மையத்தை செயற்படுத்துகிறோம். அதன் மூலம் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எமது மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் வரலாற்றக் கல்வி தவறானது. அதிகாரங்களது செயற்பாடுகளால் வரலாற்றில் தொல்பொருளில் பல திரிபுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றையே மாணவர்கள் கற்கிறார்கள். அதைத்தான் அவர்கள் படிக்கிறார்களே தவிர தமிழர்களின் உண்மையான வரலாற்றை அவர்கள் படிக்கவில்லை என்பதுதான் இங்கு துக்கமான விடயம். அதை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை நாங்கள் பார்க்க வேண்டும். எங்கள் வரலாறு தென்பகுதி வரலாற்று ஆசரியர்கள் கொடுப்பதைத்தான் எமது மாணவர்கள் கற்க வேண்டியுள்ளது. இப்படியானவை எங்களுக்கு சரியான பின்னடைவை தருபவை.


GTN இற்காக தீபச்செல்வன்:


உங்களுடைய திட்டம் பண்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதா அல்லது தொல்லியல் சின்னங்களை சேகரிப்பதா?

Dr. யமுனாநந்தா:


மக்களிடம் பண்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு திட்டம் மற்றது பண்பாட்டு சின்னங்களை பேணுவது இன்னொரு திட்டம். ஏனென்றால் பண்பாட்டு சின்னங்கள் மிகவும் பெறுமதியானவை. விலை மதிக்க முடியாதவை. அவற்றை எந்த விலை கொடுத்தும் நாங்கள் விற்கக் கூடாது. அதை மற்றவர்கள் எடுத்துச் செல்ல விட முடியாது. எடுத்துக் காட்டாக ஒரு இடத்தில் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டால் இன்றைய சூழலில் விரைவாக இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படலாம். இவற்றை விழிப்புணர்வின் மூலம் நாங்கள் தடுக்க முடியும். அடுத்து அரசியல்வாதிகள், தீர்மானம் எடுக்கும் அதிகாரிகள் போன்றவர்களுக்கு எடுத்து கூறுதல் தொல் பொருள் சின்னங்களை பாதுகாக்கும் முறைகளையும் சொல்லுகிறோம். வரலாற்று கல்வியை இளஞ்சமூகத்திற்கு கொடுப்பதற்கான வழிகளையும் செய்கிறோம்.


GTN இற்காக தீபச்செல்வன்:


அபிவிருத்தி செய்யும் பொழுது பண்பாட்டு தடயங்கள் அழிவடைவதற்கு எதிரான குரல்களும் ஒரு புறம் எழுகின்றன. அபிவிருத்திக்காக அவற்றை அழிக்கலாம் என்ற மாற்று குரல்களும் மறுபறும் எழுகின்றன இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

Dr. யமுனாநந்தா:


பண்பாட்டின் ஊடாகத்தான் அபிவிருத்தி ஏற்பட வேண்டும்;. அபிவிருத்தி என்ற போர்வையில் பண்பாட்டு விடயங்களை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் சேது சமுத்திர திட்டத்தின் போது பல பொருளாதார முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டு தொடங்கப்பட்ட திட்டம் மிகப்பெரிய அளவில் சூழல் மாசுபடும் என்று எதிர்ப்புக்கள் எழுந்த சூழலிலும் முன்னெடுக்கப்பட்ட திட்டம் அங்கு இராமரால் கட்டப்பட்ட பாலம் இருக்கின்றது என்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. வரலாற்றுச் சின்னங்களை அழிப்பதற்காக திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்பவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.

நகர வீதி அபிவிருத்திகள் என்று சொல்லப்படுகின்றன வீதிகள் அகலமாக்கப்பட வேண்டும் என்பதற்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன. உள் நகரின் வீதிகளை அகலமாக்குவதற்கு பதிலாக புறநகர் ஒன்றை உருவாக்கலாம். யாழ்ப்பாணம் ஆலயமும் ஆலயம் சார்ந்த நகரமுமாக தொன்மைக்காலம் முதல் இருந்து வருகிறது. அபிவிருத்தி என்று சொல்லிக்கொண்டு பருத்தித்துறை வீதியை அகலமாக்கும் போது சங்கிலியன் தொகுப்பு எங்களுக்கு தெரியாமலே அழிந்துவிடும். வீதியை அகலமாக்கும் வர்த்தகர்கள் இலாப நோக்கம் கருதி வரலாற்றை மறைக்க முற்படுகிறார்கள். இதை நாங்கள் முற்றாக எதிர்க்கவேண்டும். அபிவிருத்தி என்பது நாகரிகத்தின் ஊடாகத்தான் செய்யப்பட வேண்டும். உதாரணமாக சீன அரசாங்கம் ஆபிரிக்காவுக்கு சென்று வானளாவிய ரீதியாக கட்டிடங்களைக் கட்டியது. ஆனால் நிலத்துக்கு கீழ் இருந்த எல்லா வளங்களையும் சுரண்டிக்கொண்டு சென்றது. அது போலத்தான் இங்கும் வந்து அபிவிருத்தி என்று சொல்லிக்கொண்டு கட்டிடங்ளைக் கட்டி மரங்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் அழித்து விட்டு சென்றால் பாலைவனமாகிப் போய் விடும்.

அலெக்ஸ்சாண்டர் காலம் முதல் இன்று வரை உலகத்தின் வல்லரசுகளின் ஆதிக்கங்களுக்கு உட்பட்ட போதும் நாங்கள் எங்கள் வரலாறு சார்ந்த விடயங்களை பாதுகாத்ததினால் தான் இன்றும் அடையாளத்துடன் இருக்கிறோம்.

GTN இற்காக தீபச்செல்வன்:


மாறிவரும் உலக சூழலை தமிழர்கள் எப்படி அல்லது நெருங்க வேண்டும் எதிர்கொள்ள வேண்டும்?

Dr. யமுனாநந்தா:


பண்பாடு நிலையானது நாகரிகம் வளர்ந்;து செல்வது. மாறிவரும் உலக சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம். உதாரணமாக தமிழ்மொழியில் ஆங்கில ஆக்கிரமிப்பை தவிர்க்க வேண்டும். ஆலய கலாசாரம் பாரம்கரியம் போன்றவற்றை பேண வேண்டும். தமிழர்கள் உலக கிராமத்துக்குள் இருக்கிறார்கள். உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்தாலும் தமிழ்மொழி விடயத்தில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும். மாற்றினங்களோடு நாங்கள் சேரும் போது தமிழ் மொழி ஆபத்துக்குள்ளாகின்றது. பெரும் அழிவிற்குப் பிறகும் சமய ஒழுக்கங்களாலேயே எங்கள் வாழ்க்கையையும் அமைதியை
யும் கட்டியெழுப்புகின்றோம். சமூச பண்பாட்டு வன்முறைகளை நாங்கள் தவிர்க்க வேண்டுமாக இருந்தால் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறையாக இருக்க வேண்டும்.

தட்டச்சில் உதவி : ஸ்ரீரமணன்


படங்கள் ‐ நன்றி இலங்கைத் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்றவரலாறு


குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

0 comments:

போரும் வாழ்வும்

வலைப்பதிவு பட்டியல்

உன்னதத்திற்கு வழங்கிய நேர்காணல்

-----------------------------------

நிந்தவூர் ஷிப்லிக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தமிழ் பத்திரிகையான தினகரன் தணிக்கை செய்து உரையாடலை வெளியிட்டுள்ளது. இது எமது உரையாடலை திசை திருப்ப நடந்த செயலாகும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற அடக்குமுறைகள் யுத்தத்திற்காக அரசு வெலவழிக்கும் பணங்கள் முஸ்லீம்கள் அப்பாவி சிங்கள மக்கள் முதலியோர் பாதிக்கப்படுவது முதலிவை பற்றி பேசிய பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கேவலமான நடவடிக்கை. இது மாதிரியான செயல்கள் ஊடக சுகந்திரத்திற்கும் உன்மைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.

தீபச்செல்வன்

சித்திராங்கனுக்கு வழங்கிய நேர்காணல்

தளவாய்சுந்தரத்திற்கு வழங்கிய நேர்காணல்