Monday, May 17, 2010

கனவிலும் நினைக்க முடியாத அளவுக்கு எங்கள் பாடசாலைச் சூழல் உருக்குலைந்து போயிருந்தது : கிளிநொச்சி மகா வித்தியாலயப் பாடசாலை அதிபர் பங்கயற்செல்வன்


நிர்மூலமான சூழலில் சிதைவடைந்த கட்டிடங்களின் நடுவில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது கிளிநொச்சி மகா வித்தியாலயம். எல்லாவற்றையும் இழந்த பொழுதும் இழக்க முடியாத கல்விக்காய் ஏங்கும் பிள்ளைகளால் இந்தப் பாடசாலை மீண்டும் பொலிவு பெற்று வருகின்றது. தேவைகளும் பிரச்சினைகளும் என்று நாளாந்தம் பல்வேறு நெருக்கடிகளுடன் மனத்தால் சிதைவுகள் காயங்களை உடைய பிள்ளைகளுடன் தனது அடுத்த பயணத்தை தொடங்கியருக்கின்றது இந்தப்பாடசாலை. இந்தப் பாடசாலையின் முதல்வர் திரு பங்கயற்செல்வன், ஆசிரியை சுரமஞ்சரி, பாலேந்திரன், மாணவன் வேலு நிக்ஷன் முதலியவர்களுடன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக இந்த உரையாடலை நடத்தியிருந்தேன்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நடத்திய உரையாடல்

GTN ற்காக தீபச்செல்வன் :

கனவிலும் நினைக்க முடியாதளவுக்கு எங்கள் பாடசாலை உருக்குலைந்து போயிருக்கிறது என்று குறிப்பிடும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் பங்கயற்செல்வன் சிதைவுகளுக்குள்ளான அலுவலகம் ஒன்றுக்குள் இருந்து பேசுகின்றார். கூரையை இழந்து சிதைவின் அடையாளமாக அமைந்திருக்கிறது அவரது அலுவலகம். அருகில் வகுப்புக்கள் நடக்கின்றன. பல பணிகளுடன் அதிபர் பங்கயற்செல்வன் இருந்து கொண்டிருக்க அவரது அலுவலகத்திற்கு சென்று உரையாடத் தொடங்கினேன்.

நாலாம் கட்ட யுத்தத்தின் முன்பான உங்கள் பாடசாலையின் அடைவும் தற்போதைய நிலையும் எப்படி இருக்கிறது?



பங்கயற்செல்வன்:

எங்களுடைய பாடசாலையைப் பொறுத்தவரையில் 80 ஆண்டு வரலாற்றைக் கொண்டது. 80 வருடங்களைக் கொண்ட இந்த வரலாற்றில் சாதனைகளும் பெறுபேறுகளும் என்று வளர்ச்சியான நிலையிலேயே போய்க்கொண்டிருந்தது. இடப்பெயர்வுக்கு முன்னரான காலம் பெற்காலம் என்று நாங்கள் கருதுகிறோம். கிளிநொச்சி மகா வித்தியாலயம் ஒரு தடைவ அல்ல பல தடவைகள் இடப்பெயர்வைச் சந்தித்திருக்கிறது. கிளிநொச்சி நகரின் மத்தியில் இந்தப் பாடசாலை இருப்பதன் காரணமாக கிளிநொச்சி எந்த சந்தர்ப்பத்தில் போருக்கு முகம் கொடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்தப் பாடசாலை இடம்பெயருகின்ற ஒரு நிலமைக்கு தள்ளப்பட்டது. ஒவ்வொரு தடவையும் நாங்கள் இடம்பெயர்ந்து போய் மீண்டும் இந்த வளாகத்திற்கு திரும்பி வரும்பொழுது வெறும் கற்குவியல்களாக இருந்து பின்னர் கட்டி எழுப்பப்ட்ட வரலாறாக இருக்கின்றது.

எங்கள் பாடசாலையில் நாங்கள் இடம்பெயருவதற்கு முற்பட்ட காலம் பெறுபேறுகளிலும் சரி சாதனைகளிலும் சரி பௌதீக வளங்களிலும் நாங்கள் மிக உன்னதமாக இருந்த காலமாக இருந்தது. கா.பொ.த உயர்தர வகுப்புக்களில் மாணவர்கள் சாதாரணமாக 3 ஏ பெறுபெறு எடுக்கின்ற நிலமையும் கா.பொ.த சாதாரண தரத்திலே மாணவர்கள் சாதாரணமாக 10 ஏ பெறுபேறு எடுக்கின்ற நிலமையும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையிலே 25 முதல் 30 வரையான மாணவர்கள் சித்தி எய்துகின்ற நிலமையும் சாதாரணமாக எங்கள் பாடசாலையில் இருந்தது.

எங்களது பாடசாலையில் சாதாரணமான இலகுவான சூழ்நிலையில் மாணவர்கள் பெறுபேற்றைப் பெறுகின்ற அளவுக்கு நிலமைகள் சாதகமாய் இருந்தன. அப்படி ஒரு நிலையை ஆசிரியர்களும் மாணவர்களும் எங்களுடைய சமூகமும் தோற்றுவித்திருந்தது. கல்வியுடன் மட்டுமன்றி கல்வியுடன் இணைந்த புறநிகழ்வுகளிலும் எங்களது பாடசாலை அகில இலங்கை ரீதியாக சாதனைகளை படைத்து நின்றது கடந்த இடப்பெயர்வின் முன்னர். தமிழ்த்தினப்போட்டிகளாயினும் சரி, விளையாட்டுப்போட்டிகளாயினும் சரி நாடளாவிய ரீதியிலான எல்லாப் போட்டிகளிலுமே எங்களது பாடசாலை தனக்கென தனியான அடையாளங்களை பதித்து நின்ற காலம்.

மாணவர்கள் ஏறத்தாழ 2400க்கு மேற்பட்டவர்களும் ஆசிரியர்கள் 74 வரையிலான ஆசிரியர்களும் இடப்பெயர்வின் முன்னர் கல்வி கற்று வந்தார்கள். கல்வி கற்பித்து கொண்டு வந்தார்கள். ஆனால் இடப்பெயர்வு எங்கள் பாடசாலையின் சகல நிலமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 2008ஆம் ஆண்டு இரண்டாம் தவனையுடன் எங்கள் பாடசாலை இடம்பெயர்ந்தது. 2008 மூன்றாம் தவணையை தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் நாங்கள் வைத்து மாலைநேரப் பாடசாலையாக இயக்கினோம்.



2009 ஜனவரி தர்மபுரம் மாகா வித்தியாலயத்தில் வைத்து தனித்துவமாக இயக்குவதற்கு முடிவெடுத்தோம். ஆனால் அப்படி இயங்க முடியவில்லை. அன்று முதல் இடம்பெயர்ந்த எமது பாடசாலை தன் செயற்பாடுகளை முழுமையாக இழந்தது. பின்னர் நாங்கள் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து முகாங்களுக்கு சென்று மீண்டும் 2010 ஜனவரி மாதம் எங்களது பாடசாலைக்கு தரும்பிய பொழுது எங்களது பாடசாலை வளாகம் இப்படி இருக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்க முடியாத அளவுககு எங்கள் சூழல் உருக்குலைந்து போயிருந்தது.

முதல் முதல் கட்டப்பட்டிருந்த 2 மாடி கட்டிடம் சுக்குநூறாக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்தது. எந்தக் கட்டிடங்களுக்குமே கூரைகள் இருக்கவில்லை. ஆரம்பப் பிரிவு கட்டிடங்களில் ஒரு கட்டிடம்கூட இல்லாத நிலையில் அழிந்து போயிருந்தது. பாடசாலை வளாகத்தில் கால் வைக்க முடியாதளவுக்கு பாடசாலை யுத்தத்தால் மிக பாதிப்படைந்து போயிருந்தது. இப்பொழுது பாடசாலை தொடங்கி நான்கு மாதங்கள் ஆகின்றன. இதற்குள் பாடசாலைக்குள் நடமாடக்கூடியளவிற்கு சூழலை உருவாக்கியிருக்கிறோம். மாணவர்களுடைய எண்ணிக்கையுடன் ஒப்பிடுகின்ற பொழுது கட்டிடங்கள் போதாத நிலையில் இருக்கின்றன. 50 வீத கட்டிட வசதிகூட இல்லாத நிலையில் உள்ளது.



GTN ற்காக தீபச்செல்வன் :

போரினால் உங்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என்ன தாக்கங்களை எதர்ககொண்டுள்ளார்கள்? ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வகுப்பறை செயற்பாடுகள் எப்படி உள்ளன? அது தொடர்பான ஆய்வுகள் எதையாவது செய்திருக்கிறீர்களா?

பங்கயற்செல்வன்:

பாடசாலையில் மாணவர்கள் ஆசிரியர்கள், இறந்துபோனது பாதிக்கப்பட்டது என்ற பார்க்கிற பொழுது நாங்கள் அதிளவு பாதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கிறோம். மூன்று ஆசிரியர்களும் இரண்டு பணியாளர்கள் இறந்திருக்கிறார்கள். இரண்டு ஆசிரியர்கள் தமது துணைகளை இழந்ததோடு, நான்கு ஆசிரியர்கள் தமது குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் ஏறத்தாழ 60க்கு மேற்பட்ட மாணவர்கள் போரில் இறந்து போயிருக்கிறார்கள். இது எங்களுக்கு மிக வேதனை தருகின்ற விடயமாகும். கண்பார்வை இழந்த மாணவர்களும் பால் ஒன்றை இழந்த மாணவனும் இருக்கிறார். அதைவிட பலர் காயங்களுடன் இருக்கின்றார்கள்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் மிக நீண்ட காலமாக போருக்கு முகம் கொடுத்தால் எறிகனை ஷெல் பங்கர் வாழ்க்கை விமானக் குண்டு வீச்சின் பாதிப்பில் கூடுதலாக அவர்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாக இயல்பான கல்வியை அவர்கள் வழங்குவதிலும் மாணவர்கள் அதை பெற்றுக்கொள்வதிலும் இடர்களை நாங்கள் எதிர் கொள்கனிறோம். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளானதை நாங்கள் வகுப்பறைகளில் பார்க்க கூடியதாக உள்ளது. அது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்ற சூழலில் ஆசிரியர்கள் இன்னும் நிரந்தரமாக கிளிநொச்சிக்கு திரும்பவில்லை. 30 வீதமான ஆசிரியர்கள் மட்டும் தமது சொந்த இடத்தில் குடியேற வந்திருக்கிறார்கள். ஏனைய ஆசிரியர்கள் வவுனியாவில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாளாந்தம் வந்து செல்கின்றார்கள். அவர்களிடம் முழுமையான செயற்பாடுகளை நாங்கள் எதிர்பார்க்க முடியாத சூழ் நிலை இருக்கின்றது.

ஆனால் ஆசிரியர்களின் மாணவர்களின் தளராத மனம் மாணவர்களுடைய கல்வியை வளம் படுத்தும் என்று நான் நினைக்கின்றேன். முன்பு இந்த ஆசிரியர்கள்தான் எங்கள் பாடசாலையின் உச்ச கட்ட வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள். ஆனால் ஆசிரியர்கள் போரின் தாக்கத்திற்கு உற்பட்டதன் காரணமாக அவர்களிடம் இருந்து முழுமையான செயற்பாட்டை எதிர்பார்க்க முடியாமல் உள்ளது.

GTN ற்காக தீபச்செல்வன் :

இன்றைய சூழலில் பாடசாலையில் என்ன தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன?

பங்கயற்செல்வன்:

இந்தப்பாடசாலையைப்பொறுத்தவரையில் தேவைகளைத்தான் பட்டியல்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன. நிறைவுகள் என்று பார்க்கும்பொழுது அதன் பட்டியல் மிகச் சிறியதாக உள்ளது. பௌPதக ரீதியான தேவைகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் 50 வீதமான தேவையைக்கூட எட்டவில்லை. இரண்டு கட்டிடங்கள் மட்டும் கூரை போடப்பட்டுள்ளது. அதில் ஒன்பது வகுப்பறைகள் இருக்கின்றன. ஒரு மண்டபம் இருக்கின்றது. அந்த மண்டபத்தில் நான்கு வகுப்பறைகள் வைக்ககூடிய சூழ்நிலை இருக்கிறது. ஏறத்தாழ 35 வகுப்பறைகள் தேவையான சூழ்நிலையில் 13 வகுப்பறைகள் மட்டுமே இருக்கின்றன. அதிபர் அலுவலகத்தை நான் கூரையில்லாத ஒரு அலுவலகத்திலேதான் வைத்திருக்கிறேன். மழை பெய்தால் மழைநீர் முழுவதும் அலுவலகத்துக்கும் வரும். மாணவர்கள் படிக்ககூடிய வகுப்பறையை வீணாக்க கூடாது என்ற படியினால்தான் அந்த அலுவலகத்தை கூரையில்லாத மண்டபத்தில் வைத்திருக்கிறேன்.

கட்டிடங்கள் நிறைய தேவைப்படுகின்றன. திருத்தக்கூடிய கட்டிடங்களை திருத்த எங்களிடம் நிதி இல்லை. யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் யுனொப்ஸ் நிறுவனம் அமைத்து தந்த நான்கு கட்டிடங்கள் வெறும் அத்திவாரத்துடனும் கம்பிகளுடனும் காட்சி தருகின்றன. இவற்றை சம்பந்தப்பட்டவர்கள் செய்து தர வேண்டும். தளபாடங்கள் பெரும் பற்றாக்குறையாக உள்ளன. எங்களுடைய தளபாடங்களை தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் கொண்டுபோய் வைத்தோம் அங்கு முழுமையான தளபாடங்கள் இருப்பதாக அவதானிக்க முடியி;;ல்லை. அத்தோடு பொருத்தமற்ற தளவாடங்களில் மாணவர்கள் இருக்கின்ற நிலமையும் காணப்படுகின்றது.




GTN ற்காக தீபச்செல்வன் :

மீண்டும் பாடசாலையை கட்டி எழுப்புவதில் முக்கியமாக யாருடைய பங்கை எதிர்பார்க்கிறீர்கள்?

பங்கயற்செல்வன்:

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஆயிரம் ஆயிரம் மாணவர்கள் உலகம் எங்கும் வியாபித்து இருக்கின்றார்கள். அவர்களிடம் உதவுகின்ற வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவர்கள் கல்வி கற்ற இந்தப் பாடசாலையை அவர்கள் நினைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அவர்களால் முடிந்த உதவிகளை செய்து இந்தப் பாடசாலையை கட்டி எழுப்ப உத வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

தங்கள் கடினமான உழைப்பில் பெறும் நிதியில் சிறுதொகையை இந்தப் பாடசாலையின் அபிவிருத்திக்கு வழங்கினால் பொரும் உதவியாக இருக்கும். அவர்கள் இதற்காக சிறு சிறு குழுக்களாக சங்கங்களாக இயங்கி இந்த சிறிய சிறிய உதவியை செய்யலாம் என நான்; எதிர்பார்க்கிறேன். அது இந்தப்பாடசாலையை பாரிய அளவில் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். எமது பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று மிக நலிவடைந்து போயிருப்பதால் இன்று புலம்பெயர்ந்த எமது பாடசாலையின் பிள்ளைகளிடமும் உறவுகளிடமும் உதவிகளை எதிர்பார்கிறேன்.


GTN ற்காக தீபச்செல்வன் :

காலில் காயமடைந்த ஆசிரியை ஒருவர் ஊன்று கோல்களின் உதவியுடன் வகுப்பறைக்கு சென்று கொண்டிருக்கிறார். உயர்தர மாணவர்கள் ஆர்வமாக இருந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் முகங்கள் மௌனமாக பல செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. ஆரம்ப வகுப்பு ஒன்றில் ஆசிரியை சுரமஞ்சரி பாலேந்திரன் மாணவர்களுடன் கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

போரின் பிறகு வகுப்பறையில் சந்திக்கின்ற மாவர்களின் மனநிலை மற்றும் கல்வி நிலை எப்படி இருக்கின்றது. முன்னேற்றகரமான சூழலை உருவாக்க முடிகிறதா?



சுரமஞ்சரி பாலேந்திரன் :

இந்தப்பாடசாலையில் நான் ஒரு ஆரம்பரிவு ஆசிரியராக இருக்கின்றேன். சில விடயங்களை மறக்க வேண்டும். சில விடயங்கள் மறக்க முடியாதவை. சில இன்பமான காரியங்கள், மகிழ்ச்சிகரமான விடயங்கள், கவர்ச்சிகரமானவற்றை நினைவுக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. ஆரம்ப காலத்தில் மாணவர்கள் மிக விரும்பும் ஒரு சூழலில்தான் இந்த மாணவர்கள் கல்வி கற்று வந்தார்கள். தற்போது போரினால் நாங்கள் மிகுந்த பாதிப்புக்களை எங்களுக்குள்ளே தாங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆரம்ப பிரிவைச் சேர்ந்த இந்த சிறுவயது மாணவர்கள் பல சூழலில் இருந்து வருகின்றார்கள்.

தாய் தந்தையரை, சகோதரர்களை இழந்திருக்கிறார்கள். பழைய மாணவர்களாக இவர்களைப் பார்த்து கற்பிக்க முடியாதுள்ளது. தவிர அவர்களுக்கு இயல்பாக கல்வி கற்கக்கூடிய இடவசதிகள் மிகப் பற்றாக்குறையாக உள்ளன. 4 வகுப்புக்கள் இருக்க வேண்டிய மண்டபத்தில் 8 வகுப்புக்களை நடத்துகிறோம். இப்படி பல பிரச்சினைகளை எதிர் நோக்கியவர்களாக மாணவர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மகிழ்வு ஊட்டுகிற கவர்ச்சிகரமான கல்வியை வழங்குவதில் இடநெருக்கடி பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.



முன்பு நாங்கள் பெற்றோர்களின் உதவியுடன் ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு அடைக்கப்பட்ட வகுப்பறை ஒன்றை அமைத்திருந்தோம். அந்த வகுப்பறையில் இரண்டு மாதங்கள் மட்டுமே அந்த அடைக்கப்பட்ட வகுப்பறையில் கல்விச் செயற்பாடுகளல் ஈடுபட்டோம். மிக மகிழ்வுகரமாக கல்வி கற்பித்தோம். அவ்வளவு சொத்துக்களும் அழிக்கப்ட்ட நிலையிலே மீள இங்கு வந்திருக்கிறோம்.

மாணவர்கள் தங்கள் வலிகளை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தன்னை இருட்டு மயமாக்கி சோகத்தில் இருப்பதை காண்கின்றோம். அவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சித் தன்மையான கல்வி கற்பிக்கும் முறைதான் தேவைக்கபடுகின்றது. அதற்குரிய வளங்கள் எங்களுக்கு தேவைப்படுகின்றன. அவர்களுக்கு ஒரு சிறுவர் விளையாட்டு பூங்கா இருந்தால் அவர்கள் சோகங்களை மறக்கும் நிமிடங்களை உருவாக்க முடியும். ஆனால் பல விடயங்களுக்கு விடை காண முடியாதவர்களாக எங்கள் நாளாந்த செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.


GTN ற்காக தீபச்செல்வன் :

பாடசாலை வளாகத்தில் ஒற்றைக்காலை இழந்துபோன வேலு நிக்ஷன் என்ற மாணவன் ஊன்று கோல்களின் உதவியுடன் வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தான். எட்டாம் வகுப்பில் படிக்கும் நிக்ஷன் மிக வேகமாக பேசுகின்றான். அவனிடம் ஏதோ ஒரு ஆர்வமும் துடிப்பும் இருக்கிறது. தான் காலை இழந்து போன சம்பவத்தை விபரிக்கும் பொழுது அவனது முகத்தில் அதிர்ச்சியும் வலியும் தெரிகின்றன.

உங்கள் கல்வி நடவடிக்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது? பாடசாலைக்கு வருவதில் எதும் சிரமங்கள் நேர்கின்றனவா?



வேலு நிக்ஷன்

என்னை அம்மா அல்லது அப்பாதான் பாடசாலைக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள். முதலில் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்து தான் பாடசாலைக்கு வந்தேன். பின்னர் அன்பளிப்பாக எனக்கு ஒரு சைக்கிள் தரப்பட்டது. அதில்தான் என்னை ஏற்றி வந்து விடுகின்றார்கள். இப்பொழுது ஓரளவு பிரச்சினையில்லாது நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆமியிடம் சரணடைய வந்த வேளையில் அந்த இடங்களில் மிதிவெடி இருக்கின்ற என்பதால் திரும்பிச் சென்ற வேளையில் எங்களை தடுத்து இராணுவம் எறிந்த செல்லினால் நான் காயப்பட்டேன். எனது கால் அங்கு சிதைவடைந்தது. அந்த இடத்திலேயே எனது அண்ணா இறந்துபோனான். அம்மாவுக்கு முகம் முழுவதும் காயம். அக்காவுக்கு உடல் எங்கும் காயம்.

பின்னர் நான் கடலால்தான் கொண்டு வரப்பட்டேன். மன்னார், குருநாகல், வவுனியா என்று பல வைத்தியசாலைகளில் எனக்கு சிகிச்சைகள் நடந்தன. பின்னர் காயம் ஆறியதும் முகாமுக்கு என்னை அனுப்பினார்கள்.

(இந்த நேர்காணலை வெளியிடுபவர்கள் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நடத்திய உயைராடல் என்பதை குறிப்பிட்டு வெளியிடலாம்)

எமது பண்பாடு அழிக்கப்படுவதையும் வரலாறு மறைக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர் வைத்தியக் கலாநிதி எஸ். யமுனாநந்தா


வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த தடயங்கள் கிடக்கின்றன என சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு நோக்கத்தில் கருத்துக்களை பரப்பும் சூழலில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொழுது வரலாற்று, பண்பாட்டு தடயங்களை அழிக்கப்படுகின்றன என்றும் குரல்கள் எழுகின்றன. பண்பாட்டின் வாயிலாகவே அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் வடகிழக்கில் தமிழர்களின் வரலாறு சார்ந்த விடயங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதாகவும் குறிப்பிடும் தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி எஸ். யமுனாநந்தா, அதற்கான நடவடிக்கைகளை குறித்த மையம் ஆரம்பித்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். பிராந்திய சுகாதார பணிமனையின் யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் கடமையாற்றும் கலாநிதி யமுனாந்தா அவர்களை குளோபல் தமிழ் செய்திகள் வலையமைப்பிற்காக சந்தித்து இந்த நேர்காணலை செய்திருந்தேன்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நடத்திய உரையாடல்

GTN இற்காக தீபச்செல்வன்:


இனரீதியான பண்பாட்டு ரீதியான நெருக்கடிகள் எழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான சூழலில் தமிழர் பாண்பாட்டு மையத்தை உருவக்கியதன் அவசியம் மற்றும் தேவை என்னவாயிருக்கிறது?

Dr. யமுனாநந்தா:


தமிழர்களின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் எமது வரலாற்றை உறுதிப்படுத்துவதன் மூலமே எமது இருப்பை பாதுகாக்கலாம். அதற்காகவே நாங்கள் தமிழர் பண்பாட்டு மையத்தை உருவாக்கினோம்.

கந்தரோடையில் 1918, 1919ம் நூற்றாண்டில் ஒரு அகழ்வாராட்சி நடைபெற்றது. அதில் ஜோண் போல் பீரிஸ் என்பவர் முப்பத்தைந்து நாணயங்களை கண்டெடுத்திருக்கிறார். அதேவேளை வல்லிபுரத்தில் இரண்டு நாணயங்களை அவர் எடுத்துள்ளார். இந்த நாணயங்கள் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள நாணயங்களுடன் ஒத்த இயல்பைக் காட்டுகின்றன. இவை புத்தர் இந்தியாவில் வாழ்ந்த காலத்து நாணயங்கள் அடுத்து இவை திராவிட பண்பாட்டுக்குரிய நாணயங்கள். இதன் மூலம் பண்டைய யாழ்ப்பாணத்து தமிழ் மக்களில் சிலர் பௌத்த தர்மத்தையும் குறிப்பிட்டளவு பின்பற்றியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஆனால் இதை சிங்கள பௌத்தர்கள் மறுத்து தங்களது நாகரிகம் இங்கிருந்தது என்ற தவறான ஒரு கருத்தை நிலைநாட்ட வருகிறார்கள்.

இத்தகைய வரலாற்று ஆதாரங்களை வலியுறுத்துவதன் மூலம் தான் எமது இனத்தின் இருப்பை உறுதிப்படுத்த முடியும். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். கந்தரோடையில் அலெக்ஸ்சாண்டர் மன்னர் காலத்து நாணயங்களும் எடுக்கப்பட்டன. அவர்கள் இதுதங்களுடைய நாடு இது என்று வரவில்லை. இது புவிசார் அரசியலில் பண்டைய காலத்திலும் யாழ்ப்பாணம் முதன்மை பெற்றுள்ளது என்பதனைக் காட்டுகின்றது. தற்காலத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த வருட அழிவிற்குப் பின்பும், எமது பண்பாட்டை உறுதிப்படுத்த வரலாற்று ரீதியாகவும் சமூக விஞ்ஞான ரீதியாகவும் எடுத்துக் கூற வேண்டும் என்பதற்காக தமிழர் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட்டது.


தமிழர்களுக்கு கற்பிக்கப்படும் வரலாறு தவறானது. தமிழர்களின் உண்மையான வரலாற்றை மானிப்பாய் இந்துக்கல்லூரியின் ஆசிரியர் ஜி.எஸ் நவரட்ணம் 1956இல் எழுதியுள்ளார். அந்த வரலாற்றுப்புத்தகமே உண்மையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தவறான வரலாற்றைக் கற்பித்து கேள்விக்குள்ளாக்கும் தன்மையை நாங்கள் மாற்ற வேண்டும். இலங்கையில வடகிழக்கில் சேர, சோழ, பாண்டியர்களின் நாகரிகங்களுக்கான தடயங்கள் உள்ளன. ஏனென்றால் எங்கள் நாகரிகம் தமிழகத்து நாகரிகத்தோடு தொடர்புடையது. ஆனால்; வட இந்திய அரசாங்கம் தமிழகத்தின் பழைய வரலாற்றை அறிந்திருக்கவில்லை போலுள்ளது. இந்திய இராஜதந்திரம் என்பது தங்களை தாங்களே தின்னும் இராஜதந்திரத்தை கடைப்பிடிக்கின்றது. அவர்கள் தமிழகத்துக்கும் யாழ்ப்பாணத்திற்கும் வடக்கு கிழக்குக்குமிடையிலான தொடர்பை அழிக்கும் விதத்திலேயே நடந்து கொள்கிறார்கள். எங்கள் பண்பாடு சார்ந்த விடயங்களை மாணவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, நிர்வாகிகளுக்கு, இராஜதந்திரிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

எங்களுடைய பண்பாட்டில் இரண்டு விதமான குடியிருப்புக்கள் ஏற்பட்டன என்பதற்கு குளங்களை அண்டிய இடங்களில் ஆலயங்களை அமைத்து குடியிருந்திருக்கிறார்கள். முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஆலயங்ளை எடுத்துக்கூறலாம். அடுத்து நகரங்களை அண்டிய குடியேற்றங்களாக யாழ்ப்பாண நகரத்தின் மையத்தில் வண்ணை வைத்தீசுவரர் ஆலயம் காணப்படுகிறது. சாவகச்சேரியில் இருந்த ஆலயம் உடைக்கப்பட்டு இப்பொழுது நீதிமன்றக் கட்டிடமாக உள்ளது. பருத்தித்துறையிலும் இவ்வாறு காணப்படுகிறது. இந்தப் பழைய பண்பாடு;களை நாங்கள் எடு;துக் கூற வேண்டியுள்ளது. 1990ல் தொல்பொருள் ஆராட்சியாளர் எச்.பி.பி டெல் பொலநறுவையில் ஒரு நடராஜர் சிலையை எடுத்திருக்கிறார். அது ஒரு வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட சிலை. அது சோழ நாட்டுக்குரியது. அடுத்து திருக்யோணேசுவரர் ஆலயத்தில் காணப்படுகின்ற கல்வெட்டுக்கள் “முன்னை குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை பின்னே பறங்கி பிடிக்கவே மன்னா கேள் பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போன பின் மானே வடுக்காய் விடும்”; என்று இருக்கிறது. அதாவது கோணேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டு இலங்கையை யார் யார் கைப்பற்றுவார்கள் என்று குறிப்பிடுகின்றது. இப்படி வரலாற்று ஆதாரங்களையும் சமகால விடயங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது எமது வரலாற்றையும் அதன் பண்பாட்டையும் இனங்காணமுடிகிறது. எனவே நாம் இவற்றை வலியுறுத்தவும் முன்னெடுக்கவும் தமிழர் பண்பாட்டு மையத்தை உருவாக்கியிருக்கிறோம்.

GTN இற்காக தீபச்செல்வன்:


தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் பௌத்த பண்பாட்டுக்கான தர்மத்துக்கான தடயங்கள் கிடைப்பதாக சொல்லப்படுகின்றது. அது எந்தளவு உன்மை?

Dr. யமுனாநந்தா:


தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தமிழர்கள் பின்பற்றிய பௌத்த தர்மங்களுக்கான சில தடயங்கள் இருக்கின்றதே தவிர அவை சிங்களவர்களுக்கு உரியதல்ல. இது மிகவும் முக்கியமானது. அதைச் சிங்களவர்கள் தங்களுடையது என்று குறிப்பிடுவது தவறானது இதை நாங்கள் எடுத்துக் கூறவேண்டும். அவர்கள் நில ஆக்கிரமிப்பின் அடிப்படையில் தான் பார்க்கிறார்கள். ஆனால் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் பௌத்த தர்மம் தமிழ் மக்களாலும் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து தென் இலங்கையில் இருந்து பௌத்தம் இங்கு வந்தது என்று கூறுவது தவறானது.

GTN இற்காக தீபச்செல்வன்:


அண்மைக் காலமாக முப்பது வருட காலப் போராட்டத்தின் தடயங்கள் மர்மமான முறையில்; அழிக்கப்பட்டு வருகின்றன. இறந்தவர்களின் நினைவுத் தூபிகளை, வீடுகளை சிதைப்பது முதலிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அழிப்பு நடவடிக்கைகள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

Dr. யமுனாநந்தா:


எங்களுடைய வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூடியது. சி.எஸ் நவரட்ணம் எழுதியுள்ள இலங்கைத் தமிழர் வரலாறு 1900 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 1950 ஆம் ஆண்டு வரை வந்த வரலாறு ஒரு விதமானது. 1970 இற்கு பின்னர் வந்த எமது வரலாறு மிகவும் வித்தியாசமானது. அந்த போராட்டகால தடயங்களை அழிப்பதன் ஊடாக வரலாற்றை முற்று முழுதாக மாற்ற முடியாது. பழைய கால வரலாறு சார்ந்த விடயங்கள் பதிவுகள் இணையத்தளங்களில் இல்லை. ஆனால் அண்மைய எமது வரலாற்று சம்பவங்கள் எல்லாமே இணையத்தில் தொகுப்பில் உள்ளது. இப்படியான அழிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளுவது மனித நேயத்திற்கு முரணானது. இப்படி அவர்கள் அழித்தாலும் அண்மைக்கால வரலாற்றை யாரும் ஒளிக்க முடியாது. ஆங்கிலேயர்களின் தொல்பொருள் ஆராட்சிகளில் உள்ள பண்டைய தொல்பொருள் சார்ந்த விடயங்களை எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனொன்றால் வரலாற்றை அடிப்படையாக் கொண்டுதான் ஒரு சமூகத்தின் நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.



GTN இற்காக தீபச்செல்வன்:


வரலாற்று விடயங்கள் மற்றும் தொல்லியல் சார்ந்த விடயங்கள் குறித்து அண்மைக்காலமாக எழுந்திருக்கும் நிகழ்வுகள் குறித்து தொல்லியல் துறை மற்றும் வரலாற்றுத் துறை சார்ந்தவர்கள் நிறுவுகின்ற தன்மைகள் இல்லாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விஞ்ஞானத்துறை சார்ந்த அடிப்படையில் இவற்றை பாதுகாக்க முற்படும் நீங்கள் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு இதன் அவசியத்தை எப்படி எடுத்துக் கூற முடியும்?

Dr. யமுனாநந்தா:


நாங்கள் வரலாற்று அம்சங்களை பாதுகாக்க உறுதிப்படுத்த சில நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறோம். அவை குறித்து நாங்கள் இப்பொழுது வெளியே குறிப்பிடும் பொழுது அவை தடைப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அது ஒரு ஆபத்தான விடயமாயிருக்கிறது. கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் எனும் பொழுது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை பத்தை விட மிக குறைந்து போயுள்ளது. எங்கள் இளம் சமூகம் வரலாறு பண்பாடு மொழி முதலியவற்றை கற்பதன் மூலமே அதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். ஒரு சில பேராசிரியர்கள் எமக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். பேராசிரியர் குமாரவடிவேல், மற்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் வரலாற்று ஆசிரியர்களுடன் இணைந்துதான் இந்த பண்பாட்டு மையத்தை செயற்படுத்துகிறோம். அதன் மூலம் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எமது மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் வரலாற்றக் கல்வி தவறானது. அதிகாரங்களது செயற்பாடுகளால் வரலாற்றில் தொல்பொருளில் பல திரிபுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றையே மாணவர்கள் கற்கிறார்கள். அதைத்தான் அவர்கள் படிக்கிறார்களே தவிர தமிழர்களின் உண்மையான வரலாற்றை அவர்கள் படிக்கவில்லை என்பதுதான் இங்கு துக்கமான விடயம். அதை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை நாங்கள் பார்க்க வேண்டும். எங்கள் வரலாறு தென்பகுதி வரலாற்று ஆசரியர்கள் கொடுப்பதைத்தான் எமது மாணவர்கள் கற்க வேண்டியுள்ளது. இப்படியானவை எங்களுக்கு சரியான பின்னடைவை தருபவை.


GTN இற்காக தீபச்செல்வன்:


உங்களுடைய திட்டம் பண்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதா அல்லது தொல்லியல் சின்னங்களை சேகரிப்பதா?

Dr. யமுனாநந்தா:


மக்களிடம் பண்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு திட்டம் மற்றது பண்பாட்டு சின்னங்களை பேணுவது இன்னொரு திட்டம். ஏனென்றால் பண்பாட்டு சின்னங்கள் மிகவும் பெறுமதியானவை. விலை மதிக்க முடியாதவை. அவற்றை எந்த விலை கொடுத்தும் நாங்கள் விற்கக் கூடாது. அதை மற்றவர்கள் எடுத்துச் செல்ல விட முடியாது. எடுத்துக் காட்டாக ஒரு இடத்தில் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டால் இன்றைய சூழலில் விரைவாக இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படலாம். இவற்றை விழிப்புணர்வின் மூலம் நாங்கள் தடுக்க முடியும். அடுத்து அரசியல்வாதிகள், தீர்மானம் எடுக்கும் அதிகாரிகள் போன்றவர்களுக்கு எடுத்து கூறுதல் தொல் பொருள் சின்னங்களை பாதுகாக்கும் முறைகளையும் சொல்லுகிறோம். வரலாற்று கல்வியை இளஞ்சமூகத்திற்கு கொடுப்பதற்கான வழிகளையும் செய்கிறோம்.


GTN இற்காக தீபச்செல்வன்:


அபிவிருத்தி செய்யும் பொழுது பண்பாட்டு தடயங்கள் அழிவடைவதற்கு எதிரான குரல்களும் ஒரு புறம் எழுகின்றன. அபிவிருத்திக்காக அவற்றை அழிக்கலாம் என்ற மாற்று குரல்களும் மறுபறும் எழுகின்றன இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

Dr. யமுனாநந்தா:


பண்பாட்டின் ஊடாகத்தான் அபிவிருத்தி ஏற்பட வேண்டும்;. அபிவிருத்தி என்ற போர்வையில் பண்பாட்டு விடயங்களை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் சேது சமுத்திர திட்டத்தின் போது பல பொருளாதார முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டு தொடங்கப்பட்ட திட்டம் மிகப்பெரிய அளவில் சூழல் மாசுபடும் என்று எதிர்ப்புக்கள் எழுந்த சூழலிலும் முன்னெடுக்கப்பட்ட திட்டம் அங்கு இராமரால் கட்டப்பட்ட பாலம் இருக்கின்றது என்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. வரலாற்றுச் சின்னங்களை அழிப்பதற்காக திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்பவற்றை நாம் தவிர்க்க வேண்டும்.

நகர வீதி அபிவிருத்திகள் என்று சொல்லப்படுகின்றன வீதிகள் அகலமாக்கப்பட வேண்டும் என்பதற்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன. உள் நகரின் வீதிகளை அகலமாக்குவதற்கு பதிலாக புறநகர் ஒன்றை உருவாக்கலாம். யாழ்ப்பாணம் ஆலயமும் ஆலயம் சார்ந்த நகரமுமாக தொன்மைக்காலம் முதல் இருந்து வருகிறது. அபிவிருத்தி என்று சொல்லிக்கொண்டு பருத்தித்துறை வீதியை அகலமாக்கும் போது சங்கிலியன் தொகுப்பு எங்களுக்கு தெரியாமலே அழிந்துவிடும். வீதியை அகலமாக்கும் வர்த்தகர்கள் இலாப நோக்கம் கருதி வரலாற்றை மறைக்க முற்படுகிறார்கள். இதை நாங்கள் முற்றாக எதிர்க்கவேண்டும். அபிவிருத்தி என்பது நாகரிகத்தின் ஊடாகத்தான் செய்யப்பட வேண்டும். உதாரணமாக சீன அரசாங்கம் ஆபிரிக்காவுக்கு சென்று வானளாவிய ரீதியாக கட்டிடங்களைக் கட்டியது. ஆனால் நிலத்துக்கு கீழ் இருந்த எல்லா வளங்களையும் சுரண்டிக்கொண்டு சென்றது. அது போலத்தான் இங்கும் வந்து அபிவிருத்தி என்று சொல்லிக்கொண்டு கட்டிடங்ளைக் கட்டி மரங்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் அழித்து விட்டு சென்றால் பாலைவனமாகிப் போய் விடும்.

அலெக்ஸ்சாண்டர் காலம் முதல் இன்று வரை உலகத்தின் வல்லரசுகளின் ஆதிக்கங்களுக்கு உட்பட்ட போதும் நாங்கள் எங்கள் வரலாறு சார்ந்த விடயங்களை பாதுகாத்ததினால் தான் இன்றும் அடையாளத்துடன் இருக்கிறோம்.

GTN இற்காக தீபச்செல்வன்:


மாறிவரும் உலக சூழலை தமிழர்கள் எப்படி அல்லது நெருங்க வேண்டும் எதிர்கொள்ள வேண்டும்?

Dr. யமுனாநந்தா:


பண்பாடு நிலையானது நாகரிகம் வளர்ந்;து செல்வது. மாறிவரும் உலக சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாம். உதாரணமாக தமிழ்மொழியில் ஆங்கில ஆக்கிரமிப்பை தவிர்க்க வேண்டும். ஆலய கலாசாரம் பாரம்கரியம் போன்றவற்றை பேண வேண்டும். தமிழர்கள் உலக கிராமத்துக்குள் இருக்கிறார்கள். உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்தாலும் தமிழ்மொழி விடயத்தில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும். மாற்றினங்களோடு நாங்கள் சேரும் போது தமிழ் மொழி ஆபத்துக்குள்ளாகின்றது. பெரும் அழிவிற்குப் பிறகும் சமய ஒழுக்கங்களாலேயே எங்கள் வாழ்க்கையையும் அமைதியை
யும் கட்டியெழுப்புகின்றோம். சமூச பண்பாட்டு வன்முறைகளை நாங்கள் தவிர்க்க வேண்டுமாக இருந்தால் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறையாக இருக்க வேண்டும்.

தட்டச்சில் உதவி : ஸ்ரீரமணன்


படங்கள் ‐ நன்றி இலங்கைத் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்றவரலாறு


குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

போரும் வாழ்வும்

வலைப்பதிவு பட்டியல்

உன்னதத்திற்கு வழங்கிய நேர்காணல்

-----------------------------------

நிந்தவூர் ஷிப்லிக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தமிழ் பத்திரிகையான தினகரன் தணிக்கை செய்து உரையாடலை வெளியிட்டுள்ளது. இது எமது உரையாடலை திசை திருப்ப நடந்த செயலாகும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற அடக்குமுறைகள் யுத்தத்திற்காக அரசு வெலவழிக்கும் பணங்கள் முஸ்லீம்கள் அப்பாவி சிங்கள மக்கள் முதலியோர் பாதிக்கப்படுவது முதலிவை பற்றி பேசிய பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கேவலமான நடவடிக்கை. இது மாதிரியான செயல்கள் ஊடக சுகந்திரத்திற்கும் உன்மைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.

தீபச்செல்வன்

சித்திராங்கனுக்கு வழங்கிய நேர்காணல்

தளவாய்சுந்தரத்திற்கு வழங்கிய நேர்காணல்